31 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்.
                - சேக்கிழார் (12-4-3)

 

பொருள்: கங்கையாற்றை  தாங்கிய சிவபெருமானுக்கு மெய் யடிமை செய்தற்குக் உரியவராகவும்  , உள்ளத்தில் அருள் நிறைந்தவராகவும்  , திருநீற்றினை அணிந்ததாயும் உள்ள திருவுடம் பினையுடைய அடியவர்கள், தம் திருவுள்ளத்தில் உளங்கொள்ளும் செயல்களையெல்லாம் அவர் திருவுள்ளம் நிறையுமாறு ஆற்றி, மாறு படுதல் இல்லாத ஒழுக்க நெறியில் நிலைபெற்று விளங்கும் இல்லறத்தை நடத்துகின்ற இன்பத்தால் வந்த பெரும்பேறெல்லாம் அவ்வடியவர்கள் அதனை விரும்பிச் செய்து வருகின்ற காலத்தில்.

28 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

                 - காரைக்காலம்மையார் (11-4-2)

பொருள்: அன்பை அறுத்துவிடதவருக்கு, எம் ஈசன்  இடர்களைகளைபவராகவும் ,  இறங்குபவராகவும், செல்லும் நெறி காட்டுவிப்பவராகவும்,   ஒளி வடிவில் அருள்பவராகவும் உள்ளார். 

27 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
                            - திருமூலர் (10-1-3)

 

பொருள்: அயன், அரி, உருத்திரன்  என்ற  ஏனை மூவரையும்  படைக்குமாற்றால் உள்ள  மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்;  தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்: தன்னை, "அப்பா / அம்மா " என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் அம்மையாயும் இருக்கின்றான்.பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய எம் சிவபெருமானேயாகும். 

26 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

திருநீ றிடாஉருத் தீண்டேன் என்னும்
திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டிவள்
பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்
வருநீ ரருவி மகேந்திரப்பொன்
மலையில் மலைமக ளுக்கருளும்
குருநீ என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

                 - திருமாளிகைத்தேவர் (9-3-10)
 
பொருள்: திருநீற்றை நீரில் குழைத்து நெற்றியில் அணிந்து, திருநீறு அணியாத உருவத்தைத் தீண்டேன் என்று சொல்லிப் நீலகண்டனாகிய சிவபெருமானுடைய பண்பு செயல் இவை பற்றிய செய்திகளை  சொல்லிக் கொண்டு தெருவிலே திரிகிறாள். பருவமழையால் பெருகு கின்ற நீர் இழியும் அருவிகளை உடைய மகேந்திரமாகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருவே! குணக்குன்றே! என்று குலாத்தில்லை அம்பலக் கூத்தனுடைய நினைப்பிலே, சிவபெருமானுடைய உருவெளித் தோற்றத்தைக் கண்டு அழைக்கிறாள்.

24 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்யவ னேனைப் பொருளென ஆண்டொன்று
பொத்திக்கொண்ட
மெய்யவ னேவிட் டிடுதிகண் டாய்விட
முண்மிடற்று
மையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
செய்யவ னேசிவ னேசிறி யேன்பவந்
தீர்ப்பவனே.
 
              - மாணிக்கவாசகர் (8-6-7)

 

பொருள்: மிடற்றில் நஞ்சுண்டதால் கருமையையுடையவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! செம்மேனி உடையவனே  ! மங்கலப் பொருளானவனே! சிறியேனது பிறவியை துன்பத்தை நீக்குபவனே,  பொய்யவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி,  என் சிறுமையை மறைத்த உண்மைப் பொருளே! என்னை விட்டுவிடுவாயோ?

21 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவுடை யார்திரு மாலய னாலும்
உருவுடை யார்உமை யாளையொர் பாகம்
பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும்
புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ!
 
           - சுந்தரர் (7-11-1)

 

பொருள்: திருமால், பிரமன் ஆகிய கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும்,  உமையம்மையை தமது திருமேனியில் ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும்  இறைவர் எழுந்தருளியுள்ள திருப்பூவணம் என்ற  தலம் இதுவே !

20 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணானாய் மணியானாய் கருத்தானா யருத்தானாய்
எண்ணானா யெழுத்தானா யெழுத்தினுக்கோ ரியல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
அண்ணான வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
 
                   - திருநாவுக்கரசர் (4-13-7)

 

பொருள்: கண்ணாகவும் மணியாகவும் ,  கருத்தாகவும், எண்ணாகவும் , எழுத்தாகவும் , எழுத்தின் இயல்பாகவும் ,  விண்ணாகவும்  , வானத்தில் இயங்கிய முக் கோட்டைகளை  அழித்த மறையவனாகவும்  , அடியேனுக்கு நெருங்கியவனாகவும் உள்ள ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேனே .

19 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.
                           - திருஞானசம்பந்தர் (1-15-11)

 

பொருள்: தண்ணீர்  சூழ்ந்த சிறந்தக் காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் நிலத்தில் புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய  பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் பலகாலும் பாடவல்லவர் சிவகதியைச் சேர்வர்.

18 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்றுளே திருக்கூத் தாடி
அடியவர் மனைகள் தோறுஞ்
சென்றவர் நிலைமை காட்டுந்
தேவர்கள் தேவர் தாமும்
வென்றஐம் புலனான் மிக்கீர்
விருப்புட னிருக்க நம்பால்
என்றுமிவ் விளமை நீங்கா
தென்றெழுந் தருளி னாரே.
 
           - சேக்கிழார் (12-3-42)

 

பொருள்: சிற்றம்பலத்தில்  ஆனந்தக் கூத்தாடி, அடியவர்களின் இல்லங்கள் தோறும் எழுந்தருளியவரும் , தேவர்கட்குத் தலைவரும் ஆன சிவபெருமானும், ஐவகை புலன்களை  வென்றதனால் சிறப்படைந்தவர்களே! நம்மிடத்தில்  அன்போடு இருவரும் எந்நாளும் இவ்விளமை நீங்காமல் இருந்து வாழ்வீர்களாக என்று அருளி மறைந்தார். 

17 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

         - காரைக்காலம்மையார் (11-4-1)

பொருள்: நன்கு மொழிப்பயின்று, தெளிந்து உன் திருப்பாதமே சேர்ந்தேன். அழகு மிகுந்த கருமையான கண்டத்தை உடைய பெருமானே என்று என்னுடய
இடர் தீரும்? 

14 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
 
               - திருமூலர் (10-1-2)

 

பொருள்: சிவபெருமானைத் தவிர அமரர்  பிறர் இல்லை, அவனை உணராது செய்யும் தவம்  பயன்தருவதில்லை,  அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடத்தமுடியாது,. அவனது அருளின்றி முத்திக்கு பெறுவதற்கு வழி இல்லை.

13 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வண்டார் குழல்உமை நங்கை முன்னே
மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்
பண்டாய மலரயன் தக்கன் எச்சன்
பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.
        - திருமாளிகைத்தேவர் (9-3-6)

பொருள்: வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய உமாதேவியாரின் முன்பு, மகேந்திரமலைச்சரிவில் பன்றியின் பின்னே,  வில்லை ஏந்தி வேடர் களும், விரைந்து செல்லும் வேட்டைநாய்களும் உடன்வரப் வளைத்துக் கொண்டு அம்பு எய்தவனே! பிரமன், தக்கன், வேள்வித் தலைவன் இவர் களுடைய தலைகளையும், பூஷன் என்பவன் பற்களையும், பகன் என்பவன் கண்களையும் நீக்கினவனே! குணக்குன்றே! தில்லையம்பல கூத்தனே 
 

12 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும்
நீங்கிஇப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதிகண் டாய்வெண்
மதிக்கொழுந்தொன்
றொளிர்கின்ற நீள்முடி உத்தர கோசமங்
கைக்கரசே
தெளிகின்ற பொன்னுமின் னும்மன்ன தோற்றச்
செழுஞ்சுடரே.
 
            - மாணிக்கவாசகர் (8-6-4)

 

பொருள்: வெண்மையான  பிறையானது விளங்கு கின்ற, நீண்ட சடை முடியையுடைய, திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! பொன்னையும், மின்னலையும் ஒத்த காட்சியையுடைய செழுமையாகிய சோதியே! வளர்ந்து கொண் டிருக்கிற, உனது கருணைக் கரத்தில் வளைத்துப் பிடிக்கவும் நீங்கி , இவ்வுலக வாழ்விலே புரளுகின்ற என்னை விட்டுவிடுவாயோ?

11 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வீடு பெறப்பல ஊழிகள் நின்று
நினைக்கும் இடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு
மேவினர் தங்களைக் காக்கும்இடம்
பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்
உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.
 
              - சுந்தரர் (7-10-10)

 

பொருள்: வீடுப்பேறு (முத்தி) பெறுதற்பொருட்டுப் பல்லூழி காலமாயினும் இவ்வுடம்போடே நின்று இறைவனை நினைத்தற்குரிய இடமும் , அதனால் வினை நீங்கப்பெறும் இடமும் , பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று பெற்று , அவ்வழியாலே விரும்பி வந்தவர்களைப்பிறவியில்  வீழாதவாறு காக்கும் இடமும் ஆகிய ,  திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலைப் பாடும்பொழுது ,   நம்பியாரூரன் பாடிய இச் சொல்மாலைகள் பத்தினையும் நன்கு பாடவல்லார்   சிவபிரானது இடத்தை அடைவார்கள் 

10 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே யுலகானே யுடலானே யுயிரானே
பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
றாராத வையாறர்க் காளாய்நா னுய்ந்தேனே.
                  - திருநாவுக்கரசர் (4-13-6)

 

பொருள்: நீருமாய்  நெருப்புமாய்  செல்வமுமாய்  செல்லும் வழியாய்  ஊரும் உலகமும் உடலும் உயிருமாகி இருப்பவனே ! பல திருநாமங்கள்  உடையவனே ! பிறை சூடியே ! பிணிகளைப் தீர்க்கும் பெருமானே,    அடியேனை ஆட்கொண்டு அருளும் ஐயாறனாகிய உனக்கு ஆளாய் நான் உய்ந்தேன் .

07 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.
  
                  - திருஞானசம்பந்தர் (1-15-2)

எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுபவர்கள்  பழி பாவம் தீரும் என்பது திண்ணம். ஆரவாரத்துடன் வரும் அலைகள், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுவதால்  பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

06 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இளமையின் மிக்கு ளார்கள்
இருவரு மறிய நின்ற
அளவில்சீ ராணை போற்றி
ஆண்டுகள் பலவுஞ் செல்ல
வளமலி யிளமை நீங்கி
வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு
தம்பிரான் திறத்துச் சாயார்.

           - சேக்கிழார் (12-3-9)

பொருள்: இளமை காலம் முதலே  திருநீலகண்டரும் அவர் மனைவியாரும்ஒருங்கு ஏற்று நின்ற அளவில்லாத சீர்மை மிகுந்த திருவாணையைப் போற்றி ஒழுகினர், ஆண்டுகள் பலவும் சென்றன. வளம் மிக்க இளமைப் பருவம் நீங்கி,   மூப்புப் பருவம் வந்து மிகவும் தளர்ந்த  பொழுதும், தாம் இது காறும் சிவபெருமானிடத்து வைத்த அன்பினின்றும் நீங்காராயினார்.

05 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் - உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

                 - காரைக்காலம்மையார் (11-3-20)

பொருள்: எவ்வளவுதான் உத்தமராய் வாழ்ந்தாலும், அவர் இறந்தால் மரத்தை வைத்து தீமூட்டிவிடுவர்கள். ஆதலால், நஞ்சுண்ட பிரானை நெஞ்சே நீ நினைத்தல் நிலையான வீடுபேரை நீ பெறுவாய். 

04 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

            - திருமூலர் (10-1-1)

பொருள்: தேவர்  ஒருவரும் சிவனோடு ஒப்பவர்  இல்லை; இப்பூவுலகில் அவனொடு ஒப்பவராவார் இல்லை; உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் விளங்கும் முழு முதற்கடவுள் அச்சிவ பெருமானேயாகும் .

03 December 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றிற்
பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
விரித்தசிற் றம்பலக் கூத்தா
கருவடி குழைக்கா தமலச்செங் கமல
மலர்முகம் கலந்ததென் கருத்தே.

             - திருமாளிகைத்தேவர் (9-2-9)

பொருள்: திருமால், இந்திரன்,பிரமன் ஏனைய தேவர்கள் எல்லோரும்  உன்னைத் தரிசிக்க வரும் போது உள் வாயில் காவலில் உள்ள தடையால் நெருக்கவே, அவர்களுடைய கிரீடங்கள் ஒன்றோடொன்று மோது வதால் பெயர்ந்து கீழே விழும் இரத்தினங்கள் வாயிலின் முன்னிடத் தில் ஒளிவீசும் பெரும்பற்றப் புலியூரின் சிற்றம்பலத்தில், பெரிய மேருமலையாகிய வில்லாலே திரிபுரத்தையும் தீக்கு இரை யாக்கிய கூத்தனே! பெரிய குழைகளை அணிந்த காதுகளை உடைய களங்க மற்ற செந்தாமரை மலர் போன்ற உன் திருமுகம் என் எண்ணத்தில் கலந்துவிட்டது.

30 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடையவ னேனைக் கருணையி னாற்கலந்
தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல்
வேங்கையின்தோல்
உடையவ னேமன்னும் உத்தர கோசமங்
கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம்பி ரான்என்னைத்
தாங்கிக்கொள்ளே.

                 - மாணிக்கவாசகர் (8-6-1)

பொருள்: கடையேனைப் கருணையால், வந்து ஆண்டு கொண்டருளினை. இடபவாகனனே! அடியேனை விட்டுவிடுவாயா? வலிமையுடைய, புலியின்தோலாகிய ஆடையை உடுத்தவனே! திருவுத்தரகோச மங்கைக்குத் தலைவனே! சடையையுடையவனே! சோர்ந்தேன்; எம்பெருமானே! என்னைத் தாங்கிக் கொள்வாயாக.

29 November 2012

திருக்கழுக்குன்றம் கார்த்திகை நிறைமதி மலைவளம்

திருக்கழுக்குன்றம் கார்த்திகை நிறைமதி மலைவளம்

படிவிளக்கு காட்சி 

விளக்கு - சிவலிங்கவடிவம் 


மலைமேல் சோதி தரிசனம் 



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ.
 
                     - திருநாவுக்கரசர் (4-12-5)

 

பொருள் : இந்த மண்ணுலகில் பொருந்தி வீட்டின்பமே இன்பமே கருதி வாழ்கின்றவருக்கும்,  தூய்மையை உடைய மறையவர்களுக்கும்,  வானத்தில் இருக்கும் தேவர்களுக்கும், வீடு இன்பப் பேறுமாய் நிற்பவனாய், பண்ணொடு பொருந்த இசைபாடும் திருப்பழனத்தில் உறையும் என் அப்பனை  உயிர்போய்க் கண் மூடும் நேரத்திலும் நான் கைவிடக் கூடியவனோ?

28 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே

                - திருஞானசம்பந்தர் (1-14-11)

பொருள்: பிறையை சடைமுடிமீது அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக்,  கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீர்காழி (கழுமல) நகரின் தலைவனும், கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை பாடி  வழிபட வல்லவர் குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

27 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொய்கடிந் தறத்தின் வாழ்வார்
புனற்சடை முடியார்க் கன்பர்
மெய்யடி யார்கட் கான
பணிசெயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றுஞ் செய்கை
மனையறம் புரிந்து வாழ்வார்
சைவமெய்த் திருவின் சார்வே
பொருளெனச் சாரு நீரார்

            - சேக்கிழார் (12-3-2)

பொருள்: உலகியற் பொருள்களில் பற்று வைக்காமல் , நிலையுடைய அறத்தில்  பற்று வைத்து வாழ் பவர். கங்கையை சடையில்  உடைய சிவபெருமானிடத்து அன்புடையவர். உண்மையான அடியவர்களுக்கு  தொண்டு களைச் செய்து வரும் விருப்புடையவர். உலகினரால் போற்றப்பெறும் இல்லறத்தை ஏற்று ஒழுகுபவர். சைவத்தின் உண்மைப் பொருளாக விளங்குகின்ற சிவபரம்பொருளைச் நினைத்தே வாழ்பவர். 

26 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சங்கரனைத் தாழ்ந்த சடையானை அச்சடைமேற்
பொங்கரவம் வைத்துகந்த புண்ணியனை - அங்கொருநாள்
ஆவாஎன்று ஆழாமைக் காப்பானை எப்பொழுதும்
ஒவாது நெஞ்சே உரை.

             - காரைகாலம்மையார் (11-3-6)

பொருள்:  சங்கரனை, பெரிய சடையை உடையவனை , அதன் மேல் பாம்பை அணிந்தவனை, எப்பொழுதும் நெஞ்சமே நீ மறவாமல் நினை.   

23 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.

                  - திருமூலர் (10-36)

பொருள்:  திருமூலன் பாடிய இந்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்திபெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. இதனை  நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர் என்பது திண்ணம்.
இதன் மூலம் திருமூலர் மூவாயிரம் பாடல்கள் தான் இயற்றினார் என்பது நன்கு
பெறப்படும். 

22 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

 தேர்மலி விழவிற் குழலொலி, தெருவில்
கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத் தியல்பிற்
றிகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
மணிக்குறங் கடைந்ததென் மதியே.

          - திருமாளிகைத்தேவர் (9-2-4)

பொருள்:  தேர் உலவும் விழாக்காலங்களில் குழல் ஒலியும், தெருவில் கூத்துக்களால் ஏற்பட்ட ஒலியும், அடியார்கள் இறைவனைப் புகழ்கின்ற ஒலியும், மறைகளை  ஓதுதலால் ஏற்படும்  ஒலியும், பரவிக்கடல் ஒலியைப் போலப் பொலிவு பெறுகின்ற பெரும்பற்றப் புலியூரில், சிறப்புடைய தாளத்திற்கு ஏற்ப மேம்பட்ட கூத்தின் இயற்கையிலே சிறந்து விளங்கிய, சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துபவனே! கச்சணிந்த முலை யினை உடைய உமாதேவி மெதுவாக அழுத்திப் பிடிக்கும் திரட்சியை உடைய மேம்பட்ட அழகினை உடைய துடைகளில் அடியேனுடைய உள்ளம் பொருந்தியுள்ளது.

21 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்
காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம்
வீடவேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

        - மாணிக்கவாசகர் (8-5-100)

பொருள்:  நான் உன்னைப் பாடு வேண்டும். பாடிப்பாடி நைந்து உருகி நெக்கு நெக்கு ஆடவேண்டும். நான் அம்பலத்தாடும் உன்  மலர்க்கழல் அடையும்படி செய்தல் வேண்டும். இந்த உடம்பை ஒழித்து நீ  எனக்கு வீடுப்பேற்றை   தந்தருளல் வேண்டும். உன்னை நான் வணங்குகிறேன். 

20 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு
மானதி டந்திகழ் ஐங்கணையக்
கோனை எரித்தெரி யாடி இடம்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததொர் கையன் இடம்மத
மாறு படப்பொழி யும்மலைபோல்
ஆனை யுரித்த பிரான திடங்கலிக்
கச்சி அனேகதங் காவதமே.
 
         - சுந்தரர் (7-10-1)

பொருள்:  நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையையுடைய எம்பெருமானும்,  ஐங்கணையை உடைய அத்தலைவனாகிய மன்மதனை எரித்தவனும், தீயில் நின்று ஆடுபவனும், மேலானவனும், மிக்க புள்ளிகள் பொருந்திய மானை இடப்பக்கத்திலுள்ள ஒரு கையில் தாங்கினவனும், மும்மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலைபோலும் யானையை உரித்த பெரியோனும் ஆகிய இறைவன் விரும்பி இருக்கும் இடம்,  திருவனேகதங் காவதம் ` என்னும் திருக்கோயிலே.

19 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

        - திருநாவுக்கரசர் (4-11-8)

பொருள்:  நம் வீட்டில் ஏற்றும் விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்கும். சொல்லின் உளளே  நின்று விளக்குவதாய் , ஒளியுடையதாய் , பல இடங்களிலும்  காண நிற்பதாய், ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை தருவது  திருவைந்தெழுத்து மந்திரமே .

இப்பாடல் நாம் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றும் போழுது பாடவேண்டியப்பாட்டாகும்.   

16 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே

      - திருஞானசம்பந்தர் (1-13-5)

பொருள் :  நமது எண்ணதின் (தியானத்தின்) பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், இசையோடு கூடிய மறைகளாய்  விளங்குவோனும், மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த அழகு  ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்

15 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கற்பனை கடந்த சோதி
கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந்
திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
பூங்கழல் போற்றி போற்றி.

     - சேக்கிழார் (12-2-2)

பொருள் : கற்பனைகளையெல்லாம் கடந்து நிற்கும் சோதியாகிய  இறைவன், தன் கருணையால் வடிவு கொண்டு, எல்லோருக்கும்  அற்புதம் விளைக்கும் திருக்கோலத்தில், அரிய மறைகளின் முடிவாக உள்ள உபநிடதங்கட்கும் உச்சியின் மேலாய் நிற்கும் ஞான ஒளி வடிவாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்துள் நிலைத்து நின்று,  பொருந்த நடனம் செய்தருளும்  திருவடிகட்கு, என் வணக்கத்தைப் தெரிவித்துக் கொள்கிறேன்

14 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து - பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்.

     - காரைகாலம்மையார் (11-3-2)

பொருள்: சிவனைப் எப்பொழுதும் மறவாமல்  நினைவாரை அவன் இப்புவிமேல் பிறவாமற் காப்பான். 

12 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

        - திருமூலர் (10-32)

09 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உயர்கொடி யாடை மிடைபட லத்தின்
ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்
நிறைந்த சிற் றம்பலக் கூத்தா
மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
வடிகள் என் மனத்துவைத் தருளே.

        - திருமாளிகைத்தேவர் (9-2-1)

08 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே

              - மாணிக்கவாசகர் (8-5-94)

07 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுபதும் பத்தும் எட்டும்
    ஆறினோ டஞ்சு நான்குந்
துறுபறித் தனைய நோக்கிச்
     சொல்லிற்றொன் றாகச் சொல்லார்
நறுமலர்ப் பூவும் நீரும்
      நாடொறும் வணங்கு வார்க்கு
அறிவினைக் கொடுக்கும் ஆரூர்
      அப்பனே அஞ்சி னேனே.


                - சுந்தரர் (7-8-3)

06 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

            - திருநாவுக்கரசர் (4-11-1,2)

05 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே
.
    
                      - திருஞானசம்பந்தர் (1-12-11)

03 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆதியாய் நடுவு மாகி
   அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித்
   தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப்
   பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப்
   பொதுநடம் போற்றி போற்றி

               
                    - சேக்கிழார் (12-2-1)

02 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.


        - காரைகாலம்மையார் (11-2-22)

01 November 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
                       -  திருமூலர் (10-24)
 

31 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டா
தயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட் டோர்வரி யாயை
மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்
சிறுமையிற் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே உன்னைத்
தொண்டனேன் நினையுமா நினையே.?
    - திருமாளிகைத்தேவர் (9-1-11)

30 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே
                                - மாணிக்கவாசகர் (8-5-79)

29 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மத்த யானை ஏறி மன்னர்
   சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
   என்ப தடைவோமே.
          - சுந்தரர் (7-7-1)

26 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ
      - திருநாவுக்கரசர் (4-9-1,2,3)

25 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே
                     - திருஞானசம்பந்தர் (1-11-1)

23 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை
                         - சேக்கிழார் (12-1-11)

22 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே
       - காரைக்கால் அம்மையார் (11-2-9)
 

20 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே
            - திருமந்திரம் (10-20)

19 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தற்பரம் பொருளே ! சசிகண்ட ! சிகண்டா !
சாமகண்டா ! அண்ட வாணா !
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவிலா உன்னைத்
தந்தபொன் அம்பலத்து ஆடி !
கற்பமாய் உலகாய் அல்லையா னையைத்
தொண்டனேன் கருதுமா கருதே
              - திருமாளிகைத்தேவர் (9-1-3)

18 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய்
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி
               - மாணிக்கவாசகர் (8-5-66)

17 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்
    பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி
   அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர்
   மனைகள் தோறுந் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே
   வேலை சூழ்வெண் காட னீரே.
                 - சுந்தரர் (7-6-1)

16 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
                               - திருநாவுக்கரசர் (4-7-1)

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே
                             - திருஞானசம்பந்தர் (1-10-1)

12 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டம்செய் வரதர்பொற் றாள்தொழ.
                            - சேக்கிழார் (12-1-2)

11 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே
         - காரைக்கால்அம்மையார்  (11-2-1)

10 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே
                                              - திருமூலர் (10-1-1)

09 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடர்கெடுத்(து) என்னை ஆண்டுகொண்(டு) என்னுள்
இருட்பிழம்பு அறஎறிந்(து) எழுந்த
சுடர்மணி விளக்கின் உள்ளளி விளங்கும்
தூயநற் சோதியுள் சோதீ !
அடல்விடைப் பாகா ! அம்பலக் கூத்தா !
அயனொடு மாலறி யாமைப்
படரொளிப் பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே
                   - திருமாளிகைத்தேவர் (9-1-2)
 

08 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே
                                                                       - மாணிக்கவாசகர் (8-5-16)

06 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
    நித்தல் பூசை செய்ய லுற்றார்
கையி லொன்றுங் காண மில்லைக்
   கழல டிதொழு துய்யி னல்லால்
ஐவர் கொண்டிங் காட்ட ஆடி
   ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
   ஓண காந்தன் றளியு ளீரே
                             - சுந்தரர் (7-5-1)

03 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

         மாதர்ப் பிறைக்கண்ணி யானை
               மலையான் மகளொடும் பாடிப்
         போதொடு நீர்சுமந் தேத்திப்
     புகுவா ரவர்பின் புகுவேன்

யாதுஞ் சுவடு படாமல்
     ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
     களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
     கண்டறி யாதன கண்டேன்


                                - திருநாவுக்கரசர் (4.3.1)

குறிப்பு: கைலாயக்காட்சியை வேண்டி நாவக்கரசர் கைலாயம் நோக்கி சென்றபொழுது இறைவன் அவரை சோதித்து அங்குள்ள குளத்தில் முழ்கி எழுமாறு பணித்தார். அவ்வாறே  நாவக்கரசர் அங்கே முழ்கி திருவையாறில் எழுந்தார். இறைவன் கைலாயக்காட்சியை அங்கே காட்டியபொழுது பாடிய பாடல் இது.




02 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ
                                                 - திருஞானசம்பந்தர் (1-23-1)


குறிப்பு: திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்றாளம் வழங்கிய திருப்பதி இது.

01 October 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்
                                             - சேக்கிழார் (12-1-1)

குறிப்பு: இறைவன் "உலகெலாம்" என்று அடி எடுத்து கொடுத்த பெருமை உடையது.
 

30 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்

கொருமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பாற்

காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
                                                           - சிவபெருமான் (11-1-1)

குறிப்பு:  இத்திருமுகப்பாசுரம் சிவபெருமானால் இயற்றப்பட்டது எனும் சிறப்புடையது.

29 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
                                             - திருமூலர் (10-9-8.2)

28 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
                                                       - திருமாளிகைத்தேவர் (9-1-1)

27 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே
                                                         - மாணிக்கவாசகர்  (8-திருச்சதகம்-19)
 

26 September 2012

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.          - சுந்தரர் (7-1-1)

குறிப்பு : இறைவன் சுந்தரரை தடுத்து ஆட்கொண்டபோது பாடிய முதல் பாடல் இது.

24 September 2012

தினம் ஒரு திருமுறை


          திருவதிகைவிரட்டணம் 
 
          கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
     கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
   பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
   குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
     வீரட்டா னத்துறை அம்மானே   - திருநாவக்கரசர்  (4-1-1)
 
குறிப்பு: திருநாவக்கரசர் சூலை  நோய் தீர பாடி பயன் பெற்ற திருப்பதிகம் இது.
 

21 September 2012

தகவல் பலகை

ஏகாதேசி :  10ம் தேதி, புதன், புரட்டாசி  மாதம் (26-9-2012)

பிரதோசம் : 11ம்  தேதி , வியாழன் , புரட்டாசி  மாதம் (27-9-2012)

முழுமதி மலைவலம் (பௌர்ணமி கிரிவலம்): 13ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (29-9-2012) (காலை 8.03மணி முதல் மறு நாள் காலை 8.48 வரை)

சதுர்த்தி : 17ம் தேதி, புதன், புரட்டாசி மாதம் (3-10-2012)

சட்டி : 20ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (6-10-12)

கார்த்திகை: 18ம் தேதி, வியாழன் , புரட்டாசி மாதம் (4-10-2012)

ஏகாதேசி :  25ம் தேதி, வியாழன், புரட்டாசி  மாதம் (11-10-2012)

பிரதோசம்: 27ம் தேதி, சனி, புரட்டாசி மாதம் (13-10-2012)

மறைமதி (அமாவாசை ): 29ம் தேதி, திங்கள், புரட்டாசி மாதம் (15-10-2012)

ஐப்பசி (மாதப்பிறப்பு ) : 1ம் தேதி, புதன் (17-10-2012)

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே

                                                                                            -    திருஞானசம்பந்தர் (1-1-1)

குறிப்பு: திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து அருளிய முதல் பாடல் இது. 

13 September 2012

வணக்கம்

தங்கள் வருகைக்கு நன்றி.

சைவ சமயம் பற்றி தெரிந்துகொள்ள தலைப்புக்களை சொடுக்கவும். உங்கள் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் சைவம் தொடர்பான சந்தேகங்களையும் எங்களுக்கு தெரிவிக்கலாம்.

நன்றி.