23 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.

                     -திருநாவுக்கரசர்  (4-56-1)


பொருள்: ஆவடுதுறையனாருடைய மலர் போன்ற திருவடிகளைப் பெரிய உலகத்தவர் யாவரும் வணங்குவர் . அப்பெருமான் பரவிய பெரிய கங்கா தேவியைப் பரந்த சடையில் வைப்பவர் . மரங்கள் தோறும் காய்கள் மலியும் பெரிய சோலைகளால் சூழப்பட்ட சீகாழி ஊரினராகிய ஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிறந்த ஆயிரம் பொன்களை அளித்தவர் ஆவர் .

22 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

                  -திருஞானசம்பந்தர்  (1-57-11)


பொருள்: விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

21 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


முன்னின்ற மழவிடைமேல்
முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப்பெரியோர்
திருக்குழல்வா சனைகேட்க
இந்நின்ற நிலையேநம்
பாலணைவாய் எனஅவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பார்
ஐயர்திரு மருங்கணைந்தார்.

                  -ஆனாயநாயனார்  (39) 

பொருள்: இவர்கள் முன்னதாக  ஆனேற்றின்மீது அமர்ந்தருளிவந்த முதல்வனாராய சிவபெருமான், செவ்விதாய மனமுடைய ஆனாய நாயனாரின் வேய்ங்குழலின் வாசித்தலை எக்காலத்தும் கேட்டருள விரும்பி, அவரை நோக்கி, இங்கு நீ நின்ற இந்நிலையேயாக எம் முடன் அணைந்து வந்திடுவாய், எனத் திருவருள் புரிந்திடலும், அதனைக் கேட்டருளிய ஆனாய நாயனாரும் தாம் அங்கிருந்தும் பெயர்ந்து, தலைவராய பெருமானாரின் அருகணைந்தார்.

20 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

                    -திருமூலர்  (10-2-2,1) 


பொருள்: அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.

19 December 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


என்பேஉருக நின்அருள் அளித்துன்
இணைமலர் அடிகாட்டி
முன்பே என்னை ஆண்டு கொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர்
நாதா நின்னருள் நாணாமே.

                          -மாணிக்கவாசகர்  (8-44-3) 


பொருள்: என் எலும்புகளெல்லாம் உருகும் வண்ணம் உன் திருவருளைத் தந்து உன்னுடைய இரண்டு தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டி முன்னமே என்னை ஆட்கொண்ட முனிவனே! முனிவர்கட் கெல்லாம் முதற்பொருளானவனே! பேரின்பமே கொடுத் தருளி என்னை உருகுவித்து என் பசுபோதத்தை நீக்குகின்ற எங்கள் பெரியோனே! எனது உயிர்த் தலைவனே! உன்னுடைய நட்பை எனக்கு அருளிச் செய்யவேண்டும்.

17 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குளங்கள்பல வுங்குழி யுந்நிறையக்
குடமாமணி சந்தன மும்மகிலும்
துளங்கும்புன லுட்பெய்து கொண்டுமண்டித்
திளைத்தெற்றுசிற் றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள்மதில் மாளிகை கோபுரமும்
மணிமண்டப மும்மிவை மஞ்சுதன்னுள்
விளங்கும்மதி தோய்வெஞ்ச மாக்கூடல்
விகிர்தாஅடி யேனையும் வேண்டுதியே.

                      - சுந்தரர் (7-42-2)


பொருள்: குளங்களும் , குழிகளும் நிறையும்படி , மேற்குத் திசையில் உள்ள சிறந்த மணிகளையும் ,  சந்தனமரம் , அகில் மரம்  இவற்றையும் , அசைகின்ற நீருள் இட்டுக்கொண்டு , கரையை நெருங்கிப் பொருந்தி மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரை மேல் உள்ள , வளத்தைக்கொண்ட மதிலும் , மாளிகையும் கோபுரமும் , மணிமண்டபமும் ஆகிய இவை . மேகத்தில் விளங்குகின்ற சந்திரனை அளாவுகின்ற திருவெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பை உடையவனே , அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள் .

16 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.

                                  -திருநாவுக்கரசர்  (4-55-10)


பொருள்: தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .

09 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

                    -திருஞானசம்பந்தர்   (1-57-3)


பொருள்: பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

08 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மருவியகால் விசைத்தசையா
மரங்கள்மலர்ச் சினைசலியா
கருவரைவீழ் அருவிகளுங்
கான்யாறுங் கலித்தோடா
பெருமுகிலின் குலங்கள்புடை
பெயர்வொழியப் புனல்சோரா
இருவிசும்பி னிடைமுழங்கா
எழுகடலு மிடைதுளும்பா.

                      -ஆனாயநாயனார்  (34)


பொருள்: காற்று விரைவாக வீசாமலும் . மரங்களில் உள்ள கிளைகளும் அசையமலும்,  கருமலையில் நின்றும் வீழ்கின்ற அருவி யாறுகளும், காட்டாறுகளும், ஒலித்து ஓடாவாயின. பெருமுகிலின் குலங் கள் யாவும் பெயர்ந்து எழுகின்ற தமது செயல் ஒழிய, மழை பொழியா வாயின. பெருவானத்திடையே இடி முதலிய முழக்கங்கள் எழாவாயின. எழுகடலின் இடையாக யாதோர் அலையும் தோன்றாது அசைவற்று நின்றன.

07 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து
கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.

                   -திருமூலர்  (10-28-1) 


பொருள்: ஒருபொழுது நிலம் சமனாய் நின்று உயிர்களைத் தாங்காது, ஒருபாற் சாய்ந்து கீழ்மேலாகப் புரண்டு அழியும் நிலை உண்டாக, அதனை அறிந்த தேவர்கள் அச்சுற்றுச் சிவபெருமானிடம் விண்ணப்பித்து முறையிடுதலும், அப்பெருமான் அகத்திய முனிவரை அழைத்து, உலகத்தை நிலைநிறுத்த வல்லவன் நீ ஒருவனுமே ஆவை; ஆதலால், விரையக் கெடும் நிலை எய்திய நிலத்தில், மேல் எழுந்த இடத்தில் நீ சென்று அமர்ந்து சமன் செய்` என்று அருளிச் செய்தான்;

05 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நாதம் உடையதோர் நற்கமலப்
போதினில் நண்ணிய நன்னுதலார்
ஓதிப் பணிந்தலர் தூவி யேத்த
ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
போதலர் சோலைப் பெருந்து றையெம்
புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
பேதங் கெடுத்தருள் செய்பெருமை
அறியவல் லார்எம் பிரானா வாரே.

                  -மாணிக்கவாசகர்  (8-43-7) 


பொருள்: வண்டின் ரீங்கார ஒலியையுடையதாகிய ஒப்பற்ற தாமரை மலரில் பொருந்திய கலைமகள் திருமகள் என்னும் மகளிர் இருவரும் வாழ்த்தி வணங்கி மலர் தூவி வழிபட, ஒளி மிகுகின்ற சோதி வடிவமான எமது ஆண்டவனும், நிலைபெற்ற மலர்கள் விரிகின்ற சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் எமது புண்ணிய மூர்த்தியுமாகிய இறைவன், பூமியில் வந்து காட்சி கொடுத்து, வேற்றுமைகளைக் களைந்து அருள் புரிகின்ற பெருமையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.

02 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னு மனத்தா ரூரன்
ஆரூ ரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல்நா வலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லா
ரவர்என் தலைமேற் பயில்வாரே.

                      - சுந்தரர்  (7-41-10)


பொருள்: அன்னங்கள் வாழும் வயல்கள் சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவனது கருணையையே நினைகின்ற மனத்தினால் , ஆரூரன்  என்று , பெயரைத் தலையில் வைத்துள்ள மிக்க புலமையுடையவனும் , செவ்விய சொல்லால் அமைந்த பாடல்களைப் பாடவல்ல நாவன்மையுடையவனும் , வயல்களை உடைய திருநாவலூருக்குத் தலைவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய , தமிழ்ப்பாமாலையைப் பாட வல்லவர் , என் தலைமேல் எப்பொழுதும் இருத்தற்கு உரியராவர் .

01 December 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.

                           -திருநாவுக்கரசர்  (4-55-2)


பொருள்: மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் இருந்தவாறென்னே !

30 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

                        -திருஞானசம்பந்தர் (1-56-11)


பொருள் : அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடுவோமாக .

29 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


எண்ணியநூற் பெருவண்ணம்
இடைவண்ணம் வனப்பென்னும்
வண்ணஇசை வகையெல்லாம்
மாதுரிய நாதத்தில்
நண்ணியபா ணியலும்
தூக்குநடை முதற்கதியில்
பண்ணமைய எழுமோசை
எம்மருங்கும் பரப்பினார்.

                     -ஆனாயநாயனார்  (27) 


பொருள்: இசைநூல்களில் அளவுபடுத்திய பெருவண்ணம்,- இடைவண்ணம், வனப்பு வண்ணம் எனும் இசைக்குரிய வண்ணங் களின் வகை எல்லாவற்றையும் சேர விளக்கிடும் பெரிய இனிய நாதத்தில் அமைந்த தாளமும், இசையும், தூக்கும், நடை முதலான கதிகளுடன், பண் அமைந்திடும்படி வரும் ஓசையை எப்பக்கங்களிலும் பரவச் செய்தார்.

28 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.

                     -திருமூலர்  (10-27-7) 


பொருள்: தடுமாற்றத்திற்கும், அறியாமைக்கும் ஏதுவாகிய மது , வாய்மை முதலிய நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். அதனால் அதை உண்பவர் நாணம் இன்றித் தெருவில் திரிகின்ற பொதுமகளிர் இன்பத்தையே பெற்று, தாம் தம் இல்லாளொடு முயங்கிப் பெறும் இன்பத்தைத் தரும் அறிவைத் தலைப்படமாட்டார். அவர்க்கு என்றும் நீங்காத, இடையீடில்லாத இன்பம் உண்டாகுமோ!

25 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாலயன் வானவர் கோனும் வந்து
வணங்க அவர்க்கருள் செய்த ஈசன்
ஞாலமதனிடை வந்தி ழிந்து
நன்னெறி காட்டி நலம்திகழுங்
கோல மணியணி மாட நீடு
குலாவு மிடவை மடநல் லாட்குச்
சீல மிகக்கரு ணையளிக்குந்
திறமறி வார்எம் பிரானா வாரே. 

                    -மாணிக்கவாசகர்  (8-43-2)


பொருள்: மாலும் பிரமனும் இந்திரனும் வந்து வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த ஆண்டவன் உலகத்தின் கண்ணே வந்து தோன்றி நல்ல வழியினைக் காட்டி நன்மை விளங்குகின்ற அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்கள் நெடிது விளங்குகின்ற திருவிடை மருதூரில் இளம் பெண் ஒருத்திக்கு, ஒழுக்கம் விளங்கும்படி கருணைபுரிந்த தன்மையினை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவராவார்கள்.

24 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஊனைப் பெருக்கி உன்னை நினையா
தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங்
கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி
மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

                     -சுந்தரர்  (7-41-8)


பொருள்: காட்டில் உள்ள கொன்றை மலர் , மணங் கமழ மலரும் புதுமணம் வீசுதலை உடையவனே , மானை நிகர்த்த இளைய மெல்லிய பார்வையை யுடையவளாகிய உமையவள் அஞ்சும்படி போர்த்துள்ள யானைத்தோலை உடையவனே , உயிர்களுக்கு ஞானக்கண்ணாய் விளங்குபவனே , திருக்கச்சூரில் உள்ளவனே , ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே , கீழ்மையுடையேனும் , அறிவில்லாதேனும் ஆகிய யான் , உடம்பை வளர்க்கும் செயலில் நின்று , உன்னை நினையாது விட்டேன் .

23 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீருமாய்த் தீயு மாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி யிமையவ ரிறைஞ்ச நின்றார்
ஆய்வதற் கரிய ராகி யங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவர் திருப்புக லூர னாரே. 

                    - திருநாவுக்கரசர் (4-54-8) 


பொருள்: நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.

22 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

               - திருஞனசம்பந்தர் (1-56-5)


பொருள்: திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற்சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.

21 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சேவடியில் தொடுதோலும்
செங்கையினில் வெண்கோலும்
மேவுமிசை வேய்ங்குழலும்
மிகவிளங்க வினைசெய்யும்
காவல்புரி வல்லாயர்
கன்றுடைஆன் நிரைசூழப்
பூவலர்தார்க் கோவலனார்
நிரைகாக்கப் புறம்போந்தார்.

                 -ஆனாய நாயனார் (18)


பொருள்: திருவடிகளிற் செருப்பாக தோலும், சிவந்த அழகுடைய கைகளிலே வெண்மை நிறமான கோலும், விளங்கிடும் இசையுடைய புல்லாங்குழலும் மிகு விளக்கம் செய்ய, அவரிடத்து ஏவல் புரிகின்ற வலிமையுடைய இடையர்களும், கன்றினை உடைய பசுக் கூட்டமும் சூழ்ந்திட, பூக்கள் மலர்கின்ற மாலையணிந்த கோவலனாராய ஆனாயர், பசுக்களின் நிரைகளை மேய்த்துக் காவல் கொள்ளும்படி வெளியே வந்தருளினார்

18 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 

                 -திருமூலர்  (10-27-1)


பொருள்: பசுக்கள், அரிசி கழுவிய நீரைப் பெற்று உண்டு பழகி விட்டால், பின்பு குளத்தில் உள்ள தூயநீரை நாடிச் செல்லா; அக் கழு நீர்க்கே விடாய்த்துக்கொண்டு உடல் மெலியும். அத்தன்மைய வாய பசுக்கள் தம் இயல்பின் நீங்கினவாம். அதுபோல, கள்ளினைச் சுவையும், வலிமையும் நிறைந்த பருகுபொருளாக (பானமாக) நினைத்துக் கள்ளுண்பவர் மக்கள் இயல்பின் நீங்கினோராவர். மற்று, வளமையுடைய பருகு பொருள், சிவபெருமானது திருவடி இன்பமாகிய தேனே.

17 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


முத்த னைமுதற் சோதியை முக்கண்
அப்ப னைமுதல் வித்தினைச்
சித்த னைச்சிவ லோக னைத்திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர் காள்இங்கே வம்மின் நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்த மார்தருஞ் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னித் திகழுமே. 

                    -மாணிக்கவாசகர்  (8-42-10)


பொருள்:  பாசங்களில் நீங்கியவனும் ஒளிப் பொருள்களுக்கெல்லாம் மூல ஒளியாய் உள்ளவனும் மூன்று கண்களையுடைய தந்தையும் காரணங்களுக்கெல்லாம் முன்னேயுள்ள காரணமானவனும் ஞான மயமானவனும் சிவபுரத்தவனும் ஆகிய இறைவன் திருப்பெயர்களைப் பரவித் திரிகின்ற அன்பர்களே! நீங்கள் இங்கு வாருங்கள். அவனை உங்களது பந்தங்கள் நீங்கும் பொருட்டு வணங்குங்கள். அங்ஙனம் வணங்கினால் உள்ளத்தில் நிறைந்த சிவந்த அவனது திருவடியின் கீழே நமது தலை நிலைபெற்று விளங்குதல் திண்ணம்.

15 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்
மின்னேர் உருவத் தொளியானே
கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்
கன்னி மாடங் கலந்தெங்கும்
புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்
பூமேல் திருமா மகள்புல்கி
அடையுங் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

              -சுந்தரர்  (7-41-4)


பொருள்: இடப வாகனத்தையும் , இடபக்கொடியையும் , சடை முடியையும் உடையவனே , திருமேனியினது மின்னல்போலும் ஒளியையுடையவனே , எங்கும் , அழகியவாயில்களையும் , நிறைந்த மணிமண்டபங்களையும் , அழிவில்லாத மாடங்களையும் கொண்டு , சூழ உள்ள இடங்களிலும் சோலைகளையும் , நீர் நிலைகளையும் பெற்று விளங்குதலால் , தாமரைமேல் இருக்கும் பெருமை வாய்ந்த திருமகள் நீங்காது பற்றி உறைகின்ற , வயல்களையுடைய பண்ணை சூழ்ந்த திருக்கச்சூரில் உள்ள , ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெரு மானே , இஃது உன்கருணை இருந்தவாறேயோ !

14 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மையரி மதர்த்த வொண்கண் மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங் கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே யடைக்கும்போ தாவி யார்தாம்
செய்வதொன் றறிய மாட்டேன் திருப்புக லூர னீரே.


                            -திருநாவுக்கரசர்  (4-54-2)  


பொருள்:மை தீட்டி ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன் திருப்புகலூர் உள்ளவனே .

10 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே.

                 -திருஞானசம்பந்தர்  (1-56-1)


பொருள்: மக்கள் நாள்தோறும் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

09 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆவின் நிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும்
காவலர் தம்பெரு மானடி அன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார்.


              -ஆனாய நாயனார்  (12)


பொருள்: பசுக் கூட்டங்கள் இவ்வண்ணமே பெருகிடப் பேணிக் காத்து, இடையர் ஏவல் புரிந்திட, ஆயர்குலத்தைப் பேணி வரும் காவலர் பெருமானாய ஆனாயர், சிவபெருமான் திருவடி களில் பெருவிருப்புற்றுக் குழலில் இசை பொருந்த வாசித்து வரும் செயலை மேற்கொண்டார்.

07 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே.

                     - திருமூலர்  (9-26-3) 


பொருள்: தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் அயன், அரி, அரன் என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே ஓதுபவர் உண்மையாக நடுவு நிற்பவராவர்.

04 November 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே. 

                -சேந்தனார்  (9-29-13)


பொருள்: தந்தை, தாய், சுற்றம் முதலிய எல்லாப் பொருள்களும் எமக்கு அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானே என்று சிந்திக்கவும் , சிவபெருமானுடைய சிறப்புடைய அடியவர்களின் திருவடிகளை வழிபடும் நாய்போல இழிந்தவனாகிய சேந்தன், அழிவில்லாத ஆனந்தத்தை வழங்கும் சிறந்த தேன் போலவந்து அடிமையாகக் கொண்டு அரிய உயிரின்மேல் நிற்கும் கட்டு நீங்குமாறு அருள் செய்தபெருமானே என்று வாழ்த்தும் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

03 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சித்த மேபுகுந் தெம்மை யாட்கொண்டு
தீவி னைகெடுத் துய்யலாம்
பத்தி தந்துதன் பொற்க ழற்கணே
பன்ம லர்கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவு லகுக்கும்
அப்பு றத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவ டிக்கண்நம்
சென்னி மன்னி மலருமே. 

                   -மாணிக்கவாசகர்  (8-42-6)

 

பொருள்: சித்தத்திலே புகுந்து எம்மை அடிமையாகக் கொண்டருளி, தீயவாகிய வினைகளை அழித்து உய்வதற்குரிய அன்பினைக் கொடுத்துத் தனது அழகிய திருவடியின் கண்ணே பல வகையான மலர்களைப் பறித்து இடுதலும், விடுதலையைக் கொடுத்து இந்த மூன்று உலகங்களுக்கும் அப்பால் எம்மைப் பேரின்பத்தில் வைக்கின்ற, ஊமத்தம்பூவை அணிகின்ற இறைவனது சிறந்த தாமரை மலர் போன்ற சிவந்த திருவடியின் கீழே, நமது தலை நிலைபெற்று நின்று பொலிவுபெற்று விளங்கும்.

02 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென்
றுச்சம் போதா ஊரூர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை யறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் மில்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

            -சுந்தரர்  (7-41-2)


பொருள்: ஏழ் பிறப்புக் களிலும் என்னை ஆளாகக் கொண்டு ஆள்பவனே , திருக்கச்சூரின் வட பகுதிக்கண் உள்ள ஆலக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற அச்சம் இல்லாத பெருமானே , நீ , அழகிய பாம்பு ஒன்றைக் கச்சாகக் கட்டி , கழலும் சிலம்பும் காலில் நின்று ஒலிக்க , பிச்சைக் கென்று , ஞாயிறு உச்சம் ஆகவும் ஊர்தோறும் திரிதலைக் கண்டால் , உன் அடியவர் மனம் உருகமாட்டாரோ ! உன் விருப்பம் இன்னது என்பதனை யாம் அறிய மாட்டோம் பெருமானே.

01 November 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி
ஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ
ஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர
ஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.

                       -திருநாவுக்கரசர்  (4-53-10)


பொருள்: ஆயிரம் நதிகள் வந்து கலக்கும் கடலில் தோன்றிய அமுதினைத் தேவர் நுகருமாறு வழங்கி , அசுரர் பலர் வாழும் அழகிய மதில்கள் மூன்றையும் வேவச் செய்து ஆயிரம் தோள்களையும் சுழற்றி ஆடிய களைப்புத் தீருமாறு தமக்குத் தொண்டு புரிய அடியவர் பலரைக் உடையவர்  ஆரூரனாகிய பெருமான் .

28 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற் றடிகளை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

                     -திருஞானசம்பந்தர்  (1-55-11)


பொருள்: மாலும் சந்திரனும் இருந்து  பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

27 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப வுயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர்மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்.

                       -ஆனாய நாயனார்  (8)


பொருள்: ஒப்பற்ற பெருங்குடிகள் நெடுங்காலமாகத் தழைத்துச் செழித்திருக்கும் தன்மையில் ஓயாது, தீதின்றி நன்னெறி யில் ஈட்டிய பொருள் வளத்துடன் அறமே நிலவிய சிறப்புடன் விளங்க இருப்பது அக்கணமங்கலம் என்னும் ஊராகும். அப்பதியில் வாழ்ந் திருப்பவர் இடையர் குலத்துத் தோன்றிய ஆனாயர் என்பார்.

26 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

               - திருமூலர் (10-26-1)


பொருள்: நடுவுநிலைமையிற் தவராதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவ்வழியிலே நிற்கின்றேன்.

25 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. 

             - சேந்தனார் (9-29-9)


பொருள்: பாலை உண்பதற்கு வியாக்கிர பாதமுனிவர் புதல் வனாகிய உபமன்யு என்ற சிறுவன் விரும்பிப் பால்பெறாது அழுது, வருந்த அவனுக்குப் பாற்கடலையே அழைத்து வழங்கிய பெரு மானாய், ஒருகாலத்தில் திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருள் செய்தவனாய், நிலைபெற்ற தில்லைத்திருப்பதியிலே வேதம் ஓதும் அந்தணர்கள் வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற சிற்றம்பலத்தையே இடமாக்கொண்டு, அருளைவழங்கி நாட்டியத்தை நிகழ்த்தும் எம் பெருமான் பல்லான்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

24 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பெரும்பெரு மான்என் பிறவியை வேரறுத்
துப்பெரும்பிச்சுத்
தரும்பெரு மான்சது ரப்பெரு மான்என்
மனத்தினுள்ளே
வரும்பெரு மான்மல ரோன்நெடு மாலறி
யாமல்நின்ற
அரும்பெரு மான்உடை யாய்அடி யேன்உன்
அடைக்கலமே. 

              -மாணிக்காகவாசகர்  (8-42-3)


பொருள்: இறைவனே! பெரிய பெருமானும், என் பிறவியை வேரறுத்து எனக்குப் பெரும் பித்தேற்றும் பெருமானும்; சதுரப் பெருமானும்; என் மனத்தில் எழுந்தருளும் பெருமானும்; பிரம விட்டுணுக்கள் அறியவொண்ணாமல் நின்ற அரும்பெருமானும் ஆகிய தலைவனே! அடியேன் உன் அடைக்கலமே!.

21 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


திரையினார் கடல்சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச்
செற்றவனைச் செஞ்சடைமேல் வெண்மதியி னானைக்
கரையினார் புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேற்
கானாட்டு முள்ளூரிற் கண்டுகழல் தொழுது
உரையினார் மதயானை நாவலா ரூரன்
உரிமையால் உரைசெய்த ஒண்டமிழ்கள் வல்லார்
வரையினார் வகைஞால மாண்டவர்க்குந் தாம்போய்
வானவர்க்குந் தலைவராய் நிற்பரவர் தாமே.

                   -சுந்தரர்  (7-40-11)


பொருள்: கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும் , செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை , கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி , வணங்கப்பெற்ற அவ் வுரிமையினால் புகழ்மிகுந்த ,   திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நில வுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய் , பின்புசென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர் .

20 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


தொழுதகங் குழைய மேவித் தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றா ரவரவர் போலு மாரூர்
எழிலக நடுவெண் முத்த மன்றியு மேர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட் புதுமுகிழ் சூடி னாரே.

                          -திருஞானசம்பந்தர்  (4-53-3)


பொருள்: தம்முள் ஒத்த தன்மை உடைய தொண்டர்கள் தொழுது மனம் உருகுமாறு விரும்பி அழுதனராக , ஆரூரிலே பல வேலிப்பரப்புடைய சோலையின் நடுவே விளங்கும் பூங்கோயிலின் மூலத்தானத்திலே உறைந்து முத்துக்களையும் பிறையையும் சூடிய பெருமான் அவ்வடியவருடைய உள்ளத்திலே புகுந்து நிற்குமாற்றால் , தாமும் அவ்வவ்வடியவர் போல்வாராநின்றார் .

19 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.

                   - திருஞானசம்பந்தர்  (1-55-2)


பொருள்: மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

18 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்றவர் போற்றி செய்ய
இடபவா கனராய்த் தோன்றி
நன்றுநீ புரிந்த செய்கை
நன்னுத லுடனே கூட
என்றும்நம் உலகில் வாழ்வாய்
என்றவ ருடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர்
மழவிடை உகைத்துச் சென்றார்.

                       -அரிவாட்டாயநாயனார்  (21) 


பொருள்: என்று அவர் போற்றி வணங்க அவர்முன், ஆனேற்றின்மீது தோன்றியருளி, `நீபுரிந்த செயல் நன்று. நல்ல நெற்றியினையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகில் வாழ்வாயாக` என அருள் புரிந்து, அவரும் தம்முடன் வந்திடத் திருமன்றுள் ஆடியருளும் முதல்வனாய பெருமானும் அறக்கடவுளாம் ஆனேற்றின் மீது எழுந்தருளிச் சென்றார்.

17 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
   
                       - திருமூலர் (10-25-7)


பொருள்: நல்ல நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, வெளியில்  கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.

14 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார்உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.

              -சேந்தனார்  (9-29-7)


பொருள்: சிவநெறி ஒழுக்கமும் அவன் திருவருளும் அடியேனிடத்து நிலைபெற்று விளங்கும்படி, அச்சிவலோக நாயக னான பெருமானுடைய திருவடிகளின் கீழ் மற்ற யாவரும் பெறாததான யாவரையும் யாவற்றையும் உடையவன் சிவபெருமானே என்று அறியும் அறிவினைப் பெற்றேன். அவ்வறிவால் அடியேன் பெற்ற பேற்றினை வேறுயாவர் பெறக்கூடும்? இவ்வுலகில் நாட்டில் உள்ளா ரும் ஊரில் உள்ளாரும் எடுத்துக் கூறும்படி, அவன்புகழைப் பிதற்றி உமாதேவியின் கணவனாகிய எம்பெருமானுக்கு நாம் அடிமையாகிய திறத்தை இந்நிலவுலகத்தாரும் தேவர் உலகத்தாரும் அறியும் வகையில் அப்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

13 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்
தமைந்த
பழுத்தமனத் தடியர்உடன் போயினர்யான்
பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி
ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன்
அடைக்கலமே.

                 -மாணிக்கவாசகர்  (8-24-1)


பொருள்: இறைவனே! தாமரை மலர் போன்ற உன் திருவடியைச் சேர்ந்த அடியார் உன்னோடு சென்றார்கள். புழுக்கள் வாழ்தற்கு இடமாகிய இழிந்த உடலுடன் கல்வியும் ஞானமும் இல்லாத பொல்லா அழுக்கு மனத்தை உடைய பாவியேனாகிய நானும் உன் அடைக்கலமே!.

12 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விடையரவக் கொடியேந்தும் விண்ணவர்தங் கோனை
வெள்ளத்து மாலவனும் வேதமுத லானும்
அடியிணையுந் திருமுடியுங் காணவரி தாய
சங்கரனைத் தத்துவனைத் தையல்மட வார்கள்
உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்க ளுந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்விடு வார்குவளை களைவாருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.

                       - சுந்தரர் (7-40-6)


பொருள்: விடைக்கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும் , நீரில் துயில்கின்ற திருமாலும் , வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும் , அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய , ` சங்கரன் ` என்னும் காரணப் பெயரை உடையவனும் , மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் , மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின் கரைமேல் உள்ள , கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன் .

11 October 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தடக்கைநா லைந்துங் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க வோடி யிரிந்தன பூத மெல்லாம்
முடித்தலை பத்துந் தோளு முறிதர விறையே யூன்றி
அடர்த்தருள் செய்த தென்னே யாரூர்மூ லட்ட னீரே.

                   -திருநாவுக்கரசர்  (4-52-10)


பொருள்: ஆரூர்ப் மூலட்டானத்தாரே ! நீண்ட இருபது கைகளைக்கொண்டு பெரிய கயிலைமலையைப் பிடித்துப் பெயர்த்து எடுக்கமுயன்ற இராவணன் செயலால் பூதங்கள் எல்லாம் அஞ்சி ஓட , அவனுடைய முடிகள் அணிந்த தலைகளும் இருபது கைகளும் முறியுமாறு சிறிதளவு கால் விரல் ஒன்றனை ஊன்றி வருத்திப் பின் அவனுக்கு அருள் செய்த நும் செயல் இருந்தவாறென்னே

07 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

                    -திருஞானசம்பந்தர்  (1-54-7)


பொருள்: மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே!  உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உள்ளனரோ 

05 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மாசறு சிந்தை யன்பர்
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற
அம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையும்
மாவடு விடேல்வி டேலென்
றோசையுங் கமரி னின்றும்
ஒக்கவே எழுந்த வன்றே.

                        -அரிவாட்டாயநாயனார்  (18) 


பொருள்: குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது `விடேல்` `விடேல்` என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன.

04 October 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

                       -திருமூலர்  (10-25-1)


பொருள்: கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும்.

03 October 2016

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை


புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட்
டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக்
கென்செய வல்லம்என்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக்
கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே
பல்லாண்டு கூறுதுமே.

                   -சேந்தனார் (9-29-5)


பொருள்: இந்திரன், திருமால், பிரமன் முதலியோர் செருக்குத் தோன்ற முதன்மை பாராட்டி ஆரவாரம் செய்து, பின் இன்று வரை எம்பெருமானைச் சரண் என்று அடைய இயலாதவராய், பல காலும் கெஞ்சிக்கெஞ்சி அழைக்கவும், அடியேமுடைய உயிரை ஆட் கொண்ட தலைவனுக்கு என்ன கைம்மாறு அடியேம் செய்யும் ஆற்றலுடையேம்? எக்காலத்தும் கண்ணுக்குப் புலனாகாமல் இருந்தும் வேண்டியவற்றை வேண்டியவாறு நல்கும் கற்பக மரம் போல் பவனாய், எல்லையற்ற கருணைக் கடலாய் எல்லா இடங்களிலும் விரிந்தும் இடையீடின்றி நிறைந்தும் எல்லைகடந்து நிற்கும் அடிகள் ஆகிய நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம்.

30 September 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய்அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட் டலறும்அம் மலர்க்கே
மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

                       -மாணிக்கவாசகர்  (8-23-9) 


பொருள்: எமனின்  உயிரைக் கவர்ந்த தாமரைப் பூப்போன்ற திருவடியையுடையவனே! கங்கையைச் சடையில் தரித்தவனே! நெருப்பை ஏந்திய கையை உடையவனே! கெண்டை மீன் களும், நீல நிறமுடைய பூக்களும் பொருந்திய வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் பொருந்திய பெருமானே! உலகத்தவரும், இந்திரனும்  பிரமனும், தேவரும், உன்னருளைப் பெற நிற்கவும், என்னை விரும்பி இனிமையாக ஆட்கொண்டருளினாய். திருமாலும் முறையிட்டுக் கதறுவதற்குரிய அப்பாதமலர்க்கே, மரக்கண் போன்ற கண்ணை உடைய என்னையும் வந்து சேரும்படி அருள் செய்வாயாக.

29 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தி னானை
இறையவனை மறையவனை எண்குணத்தி னானைச்
சுரும்புயர்ந்த கொன்றையொடு தூமதியஞ் சூடுஞ்
சடையானை விடையானைச் சோதியெனுஞ் சுடரை
அரும்புயர்ந்த அரவிந்தத் தணிமலர்க ளேறி
அன்னங்கள் விளையாடும் அகன்றுறையி னருகே
கரும்புயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. (7-40-3)

28 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தாழ்குழ லின்சொ னல்லார் தங்களைத் தஞ்ச மென்று
ஏழையே னாகி நாளு மென்செய்கே னெந்தை பெம்மான்
வாழ்வதே லரிது போலும் வைகலு மைவர் வந்து
ஆழ்குழிப் படுக்க வாற்றே னாரூர்மூ லட்ட னீரே.

                            -திருநாவுக்கரசர்  (4-52-5)


பொருள்:  ஆரூர் மூலத் தானத்தில் உறைபவரே ! தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரையே பற்றுக்கோடாகக்கொண்டு அறிவற்றவனாகி நாடோறும் யான் யாது செயற்பாலேன் ? நாள்தோறும் என் ஐம்பொறிகள் ஆழ்ந்த குழியில் என்னைத் தள்ள முயல்வதால் பொறுக்க முடியாத துயரினேனாய் உள்ளேன் . இவ்வுலகில் ஒருவர் தம் குறிக்கோளுக்கு நேர்மையாக வாழ்வதே அரிய செயல்போலும் .

27 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.

                   -திருஞானசம்பந்தர்  (1-54-1)


பொருள்: திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, குற்றம்மில்லாத  பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.

26 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை


முன்புபோல் முதல்வ னாரை
அமுதுசெய் விக்க மூளும்
அன்புபோல் தூய செந்நெல்
அரிசிமா வடுமென் கீரை
துன்புபோம் மனத்துத் தொண்டர்
கூடையிற் சுமந்து போகப்
பின்புபோம் மனைவி யார்ஆன்
பெற்றஅஞ் சேந்திச் சென்றார்.

                    -அரிவாட்டாயநாயனார்  (14) 


பொருள்: அத்தகைய வறுமையிலும், முன்புபோல முதல்வ னாரை அமுது செய்விக்கத் தம்மிடத்து மூளுகின்ற அன்பு போலவே தூயதான செந்நெல்லின் அரிசியையும், மாவடுவையும், மென்மை யான செங்கீரையையும், துன்பம் நீங்கிய மனத்தையுடைய தொண் டர், தமது கூடையில் சுமந்து போக, அவர்பின்பு செல்லும் மனைவி யார் திருமுழுக்காட்டுதற்குரிய ஆனைந்தையும் மட்கலத்தில் தமது கையில் கொண்டு சென்றார்.

16 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.

                         -திருமூலர்  (10-24-10) 


பொருள்: மனம் ஒருங்கி உணர்ந்தவனே சிவபெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

15 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந்
திறங்களு மேசிந்தித்
தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும்
அமிர்தினுக் காலநிழற்
பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.


                     -சேந்தனார்  (9-29-3) 


பொருள்: இறைவனிடத்து அசையாது ஈடுபட்டு நிற்றல் இல்லாத அடியேனுடைய உடலை நிட்டைக்குத் துணைசெய்வதாக மாற்றி அடியேனை ஆட்கொண்ட நிகரில்லாச் செயல்களையும், மேம் பட்டவன் ஆகிய சிவபெருமான் தன் அடியவர்களைப் பெருமைப் படுத்தும் செயல்களையுமே மனத்துக்கொண்டு அட்டமூர்த்தியாய், என் மனம் நெகிழுமாறு ஊறும் அமுதமாய் ,ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த குருமூர்த்தியாய், அடியேனைத்தன் அடிமையாக ஆட் கொண்ட நம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

14 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.

                            -மாணிக்கவாசகர் (8-23-2) 


பொருள்:  எல்லோரும் புற்று வளரப் பெற்றும் மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக அமைய மெலிந்து வாழும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போலும் திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல்லில் அகப்படுத்தி ஆட்கொண்டாய். இருந்தும், நெஞ்சம் துடிக்கமாட்டேன்; மனம் மிகவும் உருகமாட்டேன்; உன்னிடம் அன்பு செய்யமாட்டேன்; திருப்பெருந்துறையில் இருக்கும் பெருமானே இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன் !

13 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை
மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கிஉமிழ்ந் தானைப்
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை
முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டலர்ந்து விரைநாறு முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே. - சுந்தரர் (7-40-1)

12 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றால்
கெடுவதிம் மனிதர் வாழ்க்கை காண்டொறுங் கேது கின்றேன்
முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே லிவர்க ளோடும்
அடியனேன் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே.

                                -திருநாவுக்கரசர்  (4-52-1)


பொருள்: பள்ளமான கடல்போன்ற வயிற்றை நிரப்புவதற்குரிய செயல்களில் ஈடுபடும் வகையால் இந்த மனிதவாழ்வு பாழாகிறது . ஆதலால் இவ்வாழ்க்கையை நினைக்குந்தோறும் இதை விலக்க உதவுபவரை அழைக்கின்றேன் . இவ்வுடம்பினுள் அறிவற்ற முரடாகிய ஐம்பொறிகள் இருந்து என்னைத் தம் விருப்பப்படி செயற்படுமாறு தூண்டுகின்றன . ஆரூர் மூலட்டானத்துள்ள பெருமானே ! அடியேன் இவைகளோடு சேர்ந்து வாழும் ஆற்றல் உடையேன் அல்லேன் .

08 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயங்குமாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய விராவணன்றோ ணெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.

                            -திருஞானசம்பந்தர்  (1-53-8)


பொருள்: அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

07 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 


நண்ணிய வயல்கள் எல்லாம்
நாடொறும் முன்னங் காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி
ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி
கொண்டிஃ தடியேன் செய்த
புண்ணிய மென்று போத
அமுதுசெய் விப்பா ரானார்.

                  -அரிவாட்டாயநாயனார்  (11) 


பொருள்: நாயனார்  நெல் அரியச் செல்லும் வயல்களில் எல்லாம், இவர் முன்னதாகக் காணுமாறு வண்ணமுடன் சிறந்து விளைந்த கதிருடைய செஞ்சாலி நெல்லேயாக ஆக்கிட, அது கண்டு மனம் மகிழ்வுற்ற தாயனார், தாம் கூலியாகப் பெற்ற செஞ்சாலி நெல் அனைத்தையும் கொண்டு, `இது அடியேன் செய்த புண்ணியம்` என்று அதனை முழுமையாகத் திருவமுதாக ஆக்கிப் பெருமானை நாளும் அமுது செய்விப்பாராயினார்.

06 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

                         -திருமூலர்  (10-24-3) 


பொருள்: திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கனவாதல், சிவபெருமானது ஆணைவழியே யாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.

02 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே. 

                -சேந்தனார்  (9-29-1)


பொருள்: தில்லைத்திருநகரம் என்றும் நிலைபெறுக; நம் அடியார்கள் பல்லாண்டு வாழ்க; அடிமை செய்ய ஒருப்படாதவர்கள் இல்லாதொழிய, பொன்மயமான மண்டபத்திலே நுழைந்து உலக மெல்லாம் நிலைபெறுமாறு நின்று, அன்னம் போன்ற நடையினை உடைய இளையள் ஆகிய உமாதேவியின் தலைவன், அடியவர் களாகிய நமக்கு அருள் பாலித்து மேல்வரும் பிறவியை நாம் அறுத்துக் கொள்ளும்படி அடியேமுக்குத் தன் திருக்கூத்தாகிய அருளைப் பொழிந்து திருவடி ஞானத்தை அருளியுள்ளான். அந்தப்பித்தனை நாம் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

01 September 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே.

                     -திருமூலர்  (10-23-8) 


பொருள்: வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன்.

30 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே. 

                  -சேதிராயர்  (9-28-5)


பொருள்: பொருந்தும் வகையில் தில்லை நாயனாராகிய சிவபெருமானைப் பற்றி அழகிய சேதி நாட்டு மன்னன் விரும்பி உரைத்த இப்பாடல்களை, எழுத்துப்பிழை, சொற்பிழை தோன்றாத வாறு தூய்மையாகப் பாடுபவர்கள் சிவலோகத்தில் உள்ள இன்பத்தை மறுமையில் பொருந்தி என்றும் மகிழ்வாக இருப்பர்.

26 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாருற வெனக்கிங் கார்அய லுள்ளார்
ஆனந்த மாக்குமென் சோதீ.

                    -மாணிக்கவாசகர்  (8-22-8)


பொருள்: பூமியும் மேலே உள்ள பதங்களும் இவற்றை உள்ளடக்கிய பல்வேறு அண்டமும் ஆகிய எல்லாப் பொருளுமாய்த் தோன்றி விரிந்ததாகிய ஒளிப்பிழம்பே! நீரில் கலந்துள்ள நெருப்பு போன்றவனே! நினைப்பதற்கு அருமையான தூய பொருளே! உனது திருவருளாகிய வெள்ளம் பாய்கின்ற சிறப்புப் பொருந்திய சித்தத்தில் உண்டாகியதாகிய ஒப்பற்ற தேன் போன்றவனே! திருப்பெருந் துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! எனக்கு இன்பத்தை உண்டாக்குகின்ற என்னொளியுடைய பொருளே! இவ்விடத்தில் உறவாயிருப்பவர் யார்? அயலாய் இருப்பவர் யார்?

25 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
   இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
   விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே


                              -சுந்தரர்  (7-39-10)

19 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏற்றநீர்க் கங்கை யானே யிருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மே லேறு நான்முக னிவர்கள் கூடி
ஆற்றலா லளக்க லுற்றார்க் கழலுரு வாயி னானே
கூற்றுக்குங் கூற்ற தானாய் கோடிகா வுடைய கோவே.

                       -திருநாவுக்கரசர்  (4-51-9)


பொருள்: கங்கையைச் சடையில் ஏற்றவனே ! பெரிய உலகங்களை ஈரடியால் அளந்த திருமாலும் நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் தங்கும் பிரமனும் ஆகிய இருவரும் கூடித் தம் ஆற்றலால் அளக்க முயன்றவர்களுக்குத் தீத்தம்ப வடிவாயினவனே ! யமனுக்கும் யமனாயினாய் கோடிகா உறை  பெருமானே ! 

18 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.

                        -திருஞானசம்பந்தர்  (1-53-1)


பொருள்: தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.

17 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெல் இன்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்றும் அமுதுசெய் விப்பரால்.

                   -அரிவாட்டாயநாயனார்  (6) 


பொருள்: அவர், விளங்குகின்ற செஞ்சடையை உடைய அறவாழி அந்தணராய சிவபெருமானுக்கு ஆகும் என்று, நாளும் செந்நெல்லின் இனிய உணவுடன் செங்கீரையும் சிறந்த கொத்தாக விளங்கும் மாவடுவையும் கொணர்ந்து, அவற்றைப் பெருமானுக்கு அமுது செய்வித்து வருவார்.

16 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


குறிப்பறிந் தேன்உடலோடுயிர் கூடிச்
செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.

                       -திருமூலர்  (10-23-1) 


பொருள்: மாசில்லாத, உயர்ந்த கல்வியை யான் கற்றேன்; அதனால் உயிர் உடலோடு கூடிநின்றேனாய், அறியத்தக்க பொருளை அறிந்தேன்; அதன் பயனாக இறைவனை உள்ளத்திலே இருத்தத் தெரிந்தேன். அதனால், அவனும் மீண்டுபோகாதவனாய் என் உள்ளத்திலே வந்து புகுந்து நின்றான்.

12 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஏயு மாறெழிற் சேதிபர் கோன்தில்லை
நாய னாரை நயந்துரை செய்தன
தூய வாறுரைப் பார்துறக் கத்திடை
ஆய இன்பம் எய்தி யிருப்பரே.

10 August 2016

தினம் ஒரு திருமுறை


 தினம் ஒரு திருமுறை


மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே. 

                         -மாணிக்கவாசகர்  (8-22-1) 


பொருள்: தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

05 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நீறுமெய் பூசி னானே நிழறிகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே யிருங்கட லமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேத மறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே கோடிகா வுடைய கோவே.

                       -திருநாவுக்கரசர்  (4-51-3)


பொருள்: திருநீற்றைத் திருமேனியில் பூசியவனாய் , ஒளிவீசும் மழுப்படையினனாய் , காளையை விரும்பி ஏறிஊர்ந்தவனாய் , பெரிய கடலில் தோன்றிய அமுதத்தை ஒப்பவனாய் , நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகிய அறத்தை உபதேசித்தவனாய் , பார்வதி பாகனாய் உள்ளவன் கோடிகாப் பெருமான் ஆவான் 

04 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

                         -திருஞானசம்பந்தர்  (1-52-9)


பொருள்: யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் திருநெடுங்களம் மேவிய இறைவனே நீ களைந்தருள்வாய்

03 August 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மனந்தளரும் இடர்நீங்கி
வானவர்நா யகரருளால்
புனைந்தமலர்க் குழல்பெற்ற
பூங்கொடியை மணம்புணர்ந்து
தனம்பொழிந்து பெருவதுவை
உலகெலாந் தலைசிறப்ப
இனம்பெருகத் தம்முடைய
எயின்மூதூர் சென்றணைந்தார்.

                     -மானக்கஞ்சாற நாயனார்  (36) 


பொருள்: மனந்தளர்ந்த நிலையினின்றும் நீங்கியவராய், தேவர்களின் தலைவரான இறைவனின் இன்னருளால், மீளவும் பழமைபோல் வளரப்பெற்ற கூந்தலையுடைய பூங்கொடியாய அப்பெண்ணைத் திருமணம் செய்து, யாவர்க்கும் பொருள் வழங்கி, அனைவரும் இன்புறும்படியாகப் பெரிய இத்திருமண நிகழ்வை உலகெலாம் போற்ற, தம் சுற்றத்தார் பலரும் பெருகிச் சூழ்ந்து வர மதிலுடைய தன்முதிய நகரம் சென்று சேர்வுற்றார். 

29 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும்என் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சன மாமே. 

                       -திருமூலர்  (10-22-10)


பொருள்: மேலான ஒளி (பரஞ்சோதி) ஆகிய சிவபெரு மானை இடைவிட்டு நினைவதால் பயன் என்னை? தன்னை அடைய முயல்கின்ற எனக்கு என் ஆருயிர்போல்பவனாகிய சிவபெரு மானைத் தேன் போல் இனியவனாக அறிந்து அவனை இடைவிடாது நினைந்து நிற்றலே அவனுக்குச் சிறந்த திருமஞ்சனமாம். ஆதலால், அவனது முடிவில்லாத பெருமையை நான் பற்றிய பின்னர் விடுதல் என்பது இன்றித் தொடர்ந்து பற்றிக் கொண்டுள்ளேன்.

27 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அயர்வுற் றஞ்சலி கூப்பி அந்தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே. 

                     -புருடோத்தநம்பி அடிகள்  (9-28-5)


பொருள்: என் மகளாகிய இப்பெண் சோர்ந்து கைகளைக் கூப்பி `ஐயோ! என்னை வாழச்செய்ய உன் கொன்றைப் பூமாலையை அருளுவாயாக` என்று உம்மை வேண்டுகிறாள். வேலைப்பாடுகள் அமைத்து நிறைந்த மதில்களைஉடைய தில்லைநகரில் உள்ள பெருமானீரே! நீர் இப்பெண்ணுக்கு அருள் செய்யுங்கள்!

26 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா
வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
யருளாய் என்னை உடையானே. 

                    -மாணிக்காகவாசகர்  (8-21-10)


பொருள்: என்னை ஆளாக உடையவனே! நமக்கு இறைவன் அருள் புரியாது போகான் என்று எண்ணி, உனது திருநாமமாகிய அஞ்செழுத்தைப் பலகால் கூறி, கண்கள் நீர் பெருகி, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி, மனத்தினாலே எண்ணிக் கனிந்து, பலகாலும் உனது உருவத்தைத் தியானித்து பொற்சபை என்றே துதித்துத் தளர்வு உற்றிருக்கும் உயிராகிய எனக்கு இரங்கி அருள் புரிவாயாக.

25 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


என்பினையே கலனாக அணிந்தானை எங்கள்
எருதேறும் பெருமானை இசைஞானி சிறுவன்
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்
வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கு மறிவரிய வத்தர்
பெருமானை அதிகைமா நகருள்வாழ் பவனை
என்பொன்னை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோதும் இகழ்வன்போ லியானே.

                               -சுந்தரர்  (7-38-10)


பொருள்: எலும்பையே அணிகலங்களாக அணிபவனும் , விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும் , இசைஞானிக்கு மகனும் , வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த , வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் , மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் , யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்குரிய பொன்போன்றவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன்போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு !

22 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள
அடியொடு முடியுங் காணா ரருச்சுனற் கம்பும் வில்லும்
துடியுடை வேட ராகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

                        -திருநாவுக்கரசர்  (4-50-1)


பொருள்: உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .

21 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

                             -திருஞானசம்பந்தர்  (1-52-1)


பொருள்: திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

19 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாங்குவார் போல்நின்ற
மறைப்பொருளாம் அவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன்
பழையமழ விடையேறி
ஓங்கியவிண் மிசைவந்தார்
ஒளிவிசும்பின் நிலம்நெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி
தொழும்பர்தொழு தெதிர்விழுந்தார்.

                   - (31)


பொருள்: அதனை வாங்குவார் போல்நின்ற மறையின் பொருளாய பெருமானார் மறைந்தருளி, தம் இடமருங்கில் பார்வதி அம்மையாருடன், மிகவும் பழமையாய ஆனேற்றில் ஓங்கிய வானத்தின்மீது எழுந்தருளி வந்தார். ஒளியுடைய வானமும், நிலமும் கற்பகமலர் மழை பொழிந்தது. தொண்டராய மானக்கஞ்சாறர் அத்திருவுருவைக் கண்குளிரக் கண்டு தொழுது நிலமுறப் பணிந்தார்.

18 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. 

                            -திருமூலர்  (10-22-2)


பொருள்கற்புடை மகளிர், சிவனடியார்கள் தத்துவ ஞானம் உடையவர்கள் இவர்களது மனம் வருந்தும்படி அவர்தம் நெறிக்கு அழிவு செய்தவரது செல்வமும், வாழ்நாளும் ஓராண்டுக்குள்ளே அழிந்தொழியும். இஃது, எங்கள் நந்தி பெருமான்மேல் ஆணையாக, உண்மை.

15 July 2016

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


ஆடிவரும் காரரவும்
ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன்
தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும்
தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே
நிற்கவுமே ஒட்டாரே. 

                   -புருடோத்தநம்பி அடிகள்  (9-28-2)


பொருள்: ஆடிவரும் கரிய பாம்பினையும் அழகிய பிறையையும் பசியகொன்றைப்பூமாலையையும் எம்பெருமான் சூடிவருதலைக்கண்ட நான் அவரிடத்து மையலால் உடல்மெலிய என் தோள்வளைகள் நெகிழ அவற்றை இழந்தாலும், தேவர்கள் தேடிக் கொண்டுவந்து முன்நின்று துதிக்கும் அச்சிற்றம்பலத்துப் பெருமானார் தாம் கூத்தாடிக் கொண்டு வரும் பொழுது அவர் அருகே நின்று அவர் கூத்தினை அடியேன் காணும் வாய்ப்புப்பெறாதபடி விரட்டுகிறார்.

13 July 2016

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அருளா தொழிந்தால் அடியேனை
அஞ்சேல் என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து
வருந்து வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல்
செத்தே போனாற் சிரியாரோ.

                   -மாணிக்கவாசகர்  (8-21-8)


பொருள்: என்னை ஒரு பொருளாகக் கொண்டு வலிய வந்து ஆட்கொண்ட பொன் போன்றவனே! பொற்சபையில் நடிக்கின்ற கூத்தனே! நீ அருள் செய்யாது ஒழிந்தனையாயின், என்னை இவ் வுலகில் அஞ்சாதே என்பவர் யாருளர்? மயக்கம் பொருந்திய மனத் துடன் உன்னைவிட்டு விலகித் துன்பப்படுகின்ற என்னை வா என்று அழைத்து உன் தெளிவு பொருந்திய கூட்டத்தைக் காட்டாவிடில், யான் இறந்து போனால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களோ?