26 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
மருளும் பினைஅறன் மாதவ மன்றே.
 
                - திருமூலர் (10-6-1)

 

பொருள்: நல்ல அரச னாயினும், யானை தேர் முதலிய படைகளையும் செல்வத்தையும் பகையரசர் கொள்ள அவை அவர்பாற் செல்வதற்கு முன்னே வாழ்நாள் உள்ளபொழுதே சிவபெருமானை அடைவானாயின் துன்பம் இல னாவன். இல்லையேல், அவற்றை அவர் கொண்ட பின்னர் துன்பக் கடலில் வீழ்ந்து கரைகாணமாட்டாது அலறுவான். 

24 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாழிஅம் போதத் தருகுபாய் விடயம்
வரிசையின் விளங்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசல ராதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழு மாளிகை மகளிர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.
 
             - கருவூர்த்தேவர் (9-16-4)

 

பொருள்: வடவாற்று நீரில் பரவிய பொருள்கள் சார்ந்துள்ள சுற்றிடத்தில் வரிசையாக விளங்கும் தோற்றமாகிய பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம் தஞ்சை நகரைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச் சுவர் அமைக்கப்பட்டது போலத் தோற்ற மளிக்கவும், கரிய அகில் புகைமணம் வீசும் மாளிகைகளில் உள்ள மகளிர் இராக் காலத்தில் தம்விரல்களால் மீட்டும் யாழ்ஒலி எம் பெருமான் உகப்பிற்காகவே ஒலிக்கின்றது.

23 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.

                  - மாணிக்கவாசகர் (8-12-5)

 பொருள்: தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

22 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரூ ரும்பொழில்சூழ் கண
நாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி
நாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்பு
வார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறு
வார்பிழைப் பொன்றிலரே.
 
                 - சுந்தரர் (7-26-10)

 

பொருள்:  சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் இல்லது ஒழிவர் .

19 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை யென்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலு மாமறைக் காட னாரே.
 
                        - திருநாவுக்கரசர் (4-33-9)

 

பொருள்: எல்லா உலகங்களையும் உடையவரயை  நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை மாமறைக் காடனார் அடியோடு தீர்ப்பார். 

18 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-35-2)
 
பொருள்: மலரால் அலங்கரிக்கப்பட்ட சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம்  ஒரு நெஞ்சம் ஆகா! 

17 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இம்முனைய வெம்போரில்
இருபடையின் வாள்வீரர்
வெம்முனையின் வீடியபின்
வீடாது மிக்கொழிந்த
தம்முடைய பல்படைஞர்
பின்னாகத் தாமுன்பு
தெம்முனையில் ஏனாதி
நாதர் செயிர்த்தெழுந்தார்.
 
                - ஏனாதி நாயனார் புராணம் (25)

 

பொருள்: இவ்வாறு நிகழ்ந்த கொடிய போரில் இருசாரார் பக்கத்தும், வீரம் மிக்க மறவர்கள் கொடும் போர் செய்து பலர் இறந்தனர். இறவாது எஞ்சி நின்ற தம் படைவீரர்கள் பின்வர, தாம் முன்பு சென்று போர் செய்வாராகிய ஏனாதிநாதர் சினந்து எழுந்தனர்

16 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.
 
                        - சேரமான்பெருமாள்  நாயனார் (11-6-78)

 

பொருள்: வஞ்சனைக்கு இடம் அளிக்கா மல் இருந்து , உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருக்கின்ற, மேலானவனாகிய சிவ பெருமான் தனது நீண்ட முடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடிய வெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்ற பாம்பு ஒன்று இருத்தலைக் கருத்துட் கொள்ளுங்கள்

15 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.
 
                         - திருமூலர் (10-5-25)

 

பொருள்: இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணினாலும்  அதனால் உண்டாவது ஒன்றும் இல்லை. 

12 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகெலாம் தொழவந் தெழுக திர்ப்பரிதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம் பச்சோ
அங்ஙனே யழகிதோ அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் டிங்கள்
இலைகுலாம் பதணத் திஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.
 
                      - கருவூர்த்தேவர் (9-16-1)

 

பொருள்: கோட்டை, பலவாக அழகு பொருந்திய பொருட் கூட்டத்தால் எடுப்பிக்கப்பட்ட நெடுநிலையாகிய எழுநிலை மாடங் கள் ஆகியவை, வெள்ளிய சந்திரன் பெரிய மலைப்பகுதியிலே தவழ்வதுபோல வெள்ளித்தகடுகள் மதிலிலுள்ள மேடைகளில் பதிக்கப்பட்டுக் காட்சி வழங்கும் மதில்களால் சூழப்பட்ட தஞ்சை யிலுள்ள இராசராசேச்சரம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானுக்கு, உலகங்களெல்லாம் தொழுமாறு வந்து தோன்றுகின்ற நூறாயிரகோடி பரிதிகளின் ஒளியினை உடைய சூரியன் உளதாயின் அதன் அளவாகிய ஒளியினை உடைய திருவுடம்பு வியக்கத்தக்கவகையில் பேரழகினதாக உள்ளது.

11 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.
 
                       - மாணிக்கவாசகர் (8-12-1)

 

பொருள்: பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

10 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செஞ்சே லன்னகண்ணார் திறத்
தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நல
மொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழு
தேன்றிருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
 
                     - சுந்தரர் (7-26-5)

 

பொருள்:  சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து , மிகக்கதறி வருந்தினேன் ; அதனிடையே ஓரொருகால் , நான் மடிந்திராது உன்னை வணங்கினேன் ; எவ்வாறாயினும் அச்சமின்றி , உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன், திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .

09 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேயன நாட ராகித் தேவர்க டேவர் போலும்
பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலு மாமறைக் காட னாரே.
 
                   - திருநாவுக்கரசர் (4-33-2)

 

பொருள்: தேவத்தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.

08 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே.
 
               - திருஞானசம்பந்தர்  (1-34-11)

 

பொருள்: நன்மையை நல்குவதும் கலங்களை உடைய கடலால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

05 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தழைத்த மாற்றான்
வயப்புலிப்போத் தன்னார்முன்
நந்தமது வாட்பயிற்று
நற்றாயங் கொள்ளுங்கால்
இந்தவெளி மேற்கை
வகுத்திருவேம் பொருபடையும்
சந்தித் தமர்விளைத்தால்
சாயாதார் கொள்வதென.
 
             - ஏனாதி  நாயனார்  புராணம் (13)

 

பொருள்: தன்னிடத்தில் வந்து போருக்கு அழைத்தவ னாகிய அதிசூரன், வலிமை மிகுந்த ஆண் புலி என நிற்கும் ஏனாதி நாதர் முன்நின்று, நாம் இருவரும், வாள் வித்தை பயிற்றுவித்துவரும் தொழில் உரிமையை நிலைநாட்ட, இந்த வெளியிடத்து அணிவகுத்து நிற்கும் நம் இருவரது படைகளும் தம்முள் பொர, இவர்களில் வெற்றி கொள்வார் யாவரோ, அவரே அத்தொழில் உரிமைக்கு உரியவன் என்றான். 

04 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.
 
                     - சேரமான் பெருமாள் நாயனார் (11-6-70)
 
பொருள்: நீங்கள்  நும்செயல்களை விடுத்து  சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணி விடைகளைச் செய்யுங்கள்.
 அவனை  கண்டு கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; சிவனே முதல்வன் என்று  அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள்; இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறியவராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற் கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.

03 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.
 
               - திருமூலர் (10-5-20)

 

பொருள்: கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்

02 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த்
தண்டலைச் சாட்டியக் குடியார்
ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை
இருந்தவன் திருவடி மலர்மேற்
காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன்
கழறுசொன் மாலைஈ ரைந்தும்
மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே
வளரொளி விளங்குவா னுலகே.
 
                     - கருவூர்த்தேவர் (9-15-10)

 

பொருள்: வயல்களையும்,  சோலைகளையும், குளங்களையும், தோட்டங்களையும் உடைய சாட்டியக்குடியிலுள்ளார் ஈட்டிய செல்வமாய் எழுநிலை விமானத்தின் கீழ் இருக்கும் பெருமானுடைய திருவடி மலர்கள் தொடர்பாக மெய்ப்பொருளைக் காட்டும் கலைகளைப் பயின்ற கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களையும் பொருந்திய மனத்தை உடைய சான்றோருக்கு வளர்கின்ற ஒளி விளங்கும் சிவ லோகம் உளதாவதாம்.

01 December 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

குலம்பாடிக் கொக்கிற
கும்பாடிக் கோல்வளையாள்
நலம்பாடி நஞ்சுண்ட
வாபாடி நாள்தோறும்
அலம்பார் புனல்தில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
சிலம்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                    - மாணிக்கவாசகர் (8-11-20)

 

பொருள்: இறைவனது மேன்மையையும் குதிரைச் சேவகனாய் வந்த சிறப்பையும் உமாதேவியினது நன்மையையும் பாடி, இறைவன் நஞ்சுண்ட செய்தியைப் பாடி, தில்லையம்பலத்தில் நடிக்கின்ற திருவடிச்சிலம்பினது வெற்றியைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

28 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இமையோர் நாயகனே இறை
வாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கரு
மாமுகில் போன்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உரு
வேதிருக் காளத்தியுள்
அமைவே யுன்னையல்லால் அறிந்
தேத்த மாட்டேனே.
 
                - சுந்தரர் (7-26-2)

 

பொருள்: தேவர்களுக்கு  நாயகனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே கிடையாது 

27 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்து மடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா வென்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே.
 
                      - திருநாவுக்கரசர் (4-32-10)

 

பொருள்: சிவபெருமானுடைய கயிலைமலையைக் கடந்து புட்பகவிமானம் போகாதாக , அச்செய்தியைச் சொல்லிய தேரோட்டியை வெகுண்டுநோக்கி , மனத்தான் நோக்கிப் பூமியில் தேரினின்றும் குதித்து கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்டு இராவணன் அதனைப் பெயர்த்து ஆரவாரம் செய்தபோது மலை நடுங்குதல் கண்டு பார்வதி அஞ்சும் அளவில் அவன் தலைகள் பத்தையும் விரலால் நசுக்கிப் பின் பாடிய தேத்தெத்தா என்ற இசையைக் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தவர் திருப்பயற்றூரனார் இறைவர் ஆவர். 

26 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.
 
                        - திருஞானசம்பந்தர் (1-34-2)

 

பொருள்: அலையோடு  உடைய  கங்கையை முடியில்  சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை பூக்களைக் கொண்டு நின்று தூவி இன்றே வழிபாடு செய்யுங்கள். 

25 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தோள்கொண்ட வல்லாண்மைச்
சுற்றத் தொடுந்துணையாம்
கோள்கொண்ட போர்மள்ளர்
கூட்டத் தொடும்சென்று
வாள்கொண்ட தாயம்
வலியாரே கொள்வதென
மூள்கின்ற செற்றத்தால்
முன்கடையில் நின்றழைத்தான்.
 
                      - ஏனாதி  நாயனார்  புரணாம் (9)

 

 பொருள்: தோளின் வலிய ஆண்மை கொண்ட சுற்றத் தாருடனே, தனக்குத் துணைவலியாகக் கொள்ளப்பட்ட போர் வீரர் களின் கூட்டத்தோடு சென்று, ஏனாதிநாதரின் வீட்டின் முன்னே நின்று, வாள் பயிற்றும் தொழில் உரிமையை நம்மில் வலியவராய் உள்ளவரே கொள்ளத் தக்கவர், என மிகவும் மூண்டு எழும் சினத்தால் போருக்கு அழைத்தான்.

24 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.
 
                     - சேரமான் பெருமாள்  நாயனார் (11-6-60)

 

பொருள் : உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே` என அடையாளம் கண்டு,  செந்நிறம்  இவன் தலையிலே உள்ள சடைகளில்  உள்ளது என்று  வணங்குங்கள்.

21 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
 
                     - திருமூலர் (10-5-12)

 

பொருள்:  உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்பவன்  தொண்ணூற்றாறு தத்துவங்கள் உடையவன் . அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர அவ்வினை  நீங்கும்.

20 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அனலமே புனலே அனிலமே புவனி
அம்பரா அம்பரத் தளிக்கும்
கனகமே வெள்ளிக் குன்றமே என்றன்
களைகணே களைகண்மற் றில்லாத்
தனியனேன் உள்ளம் கோயில்கொண் டருளும்
சைவனே சாட்டியக் குடியார்க்
கினியதீங் கனியாய் ஒழிவற நிறைந்தேழ்
இருக்கையில் இருந்தவா றியம்பே.
 
                    - கருவூர்தேவேர் (9-15-6)

 

பொருள்: மனிதர்களுக்கு  இனிய பழமாய் நீக்கமற நிறைந்து எழுநிலை விமானத்தின்கீழ்க் கருவறையில் உள்ள பெருமானே! பஞ்சபூத வடிவானவனே! விண்ணில் கொடுக்கப் படுகின்ற பொன்னுலகமே! வெள்ளி மலையே! அடியேன் பற்றுக் கோடே! உன்னைத்தவிர வேறு பற்றுக்கோடில்லாத அடியேனுடைய உள்ளத்தையே இருப்பிடமாகக்கொண்டு அருளும் மங்கலமான வடிவினனே! அத்தகைய நீ சாட்டியக்குடியில் வந்து உறையும் காரணத்தைக் கூறுவாயாக.

19 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புத்தன் புரந்தராதியர்
அயன்மால் போற்றிசெயும்
பித்தன் பெருந்துறை
மேயபிரான் பிறப்பறுத்த
அத்தன் அணிதில்லை
அம்பலவன் அருட்கழல்கள்
சித்தம் புகுந்தவா
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                       - மாணிக்கவாசகர் (8-11-16)
 
பொருள்: புதுமையானவனும், இந்திராதியர் வணங்கும் படியாகிய பித்தனும், திருப்பெருந்துறையை உடையவனும், எமது பிறவியை ஒழித்தருளின அத்தனும், தில்லையம்பலத்தை உடையவனு மாகிய சிவபெருமானது அருவுருவமாகிய திருவடிகள் என் மனத்தில் தங்கியிருக்கும் விதத்தைப் புகழ்ந்து நாம் தெள்ளேணம் கொட்டு வோம்.

18 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறையா ருஞ்சடையெம் பெரு
மானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்
கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்
நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளி
தாஞ்சிவ லோகமதே.
 
                  - சுந்தரர்  (7-25-10)

 

பொருள்: தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும்

17 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உவந்திட்டங் குமையோர் பாகம் வைத்தவ ரூழி யூழி
பவந்திட்ட பரம னார்தா மலைசிலை நாக மேற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.
 
                  - திருநாவுக்கரசர் (4-32-2)

 

பொருள்:  உமை ஒரு பாகனார் பல ஊழிகளையும் படைத்த பெருமானாராய் ,  மேரு   மலையை வில்லாகக் கொண்டு , பாம்பை அதற்கு நாணாகக் கட்டி , உலகங்களில் பலரையும் சென்று பற்றி வருத்திய மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு , வெகுண்டு சிவந்த கண்களையுடையவர் திருப்பயற்றூரனார் ஆவர். 

14 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
 
                      - திருஞானசம்பந்தர் (1-33-11)

 

பொருள்: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்.

13 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாளின் படைபயிற்றி
வந்த வளமெல்லாம்
நாளும் பெருவிருப்பால்
நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தடமுடியும்
காணாதார் தம்மையுந்தொண்
டாளும் பெருமான்
அடித்தொண்டர்க் காக்குவார்.
 
                 - ஏனாதி நாயனார் புரணாம் (4)

 

பொருள்: வாட்படை பயிற்றும் தொழிலில் வந்த பொருள் வருவாய் அனைத்தையும், பெருமை பொருந்திய திருமுடியையும் திருவடியையும் காண இயலாத மால் அயன் ஆகிய இருவரையும் தொண்டாளும் சிவபெருமானின் அடியவர்களுக்கு, நாளும் தம் உள்ளத்து எழும் பேரன்பினால் பொருந்தி, கொடை மிகுதியால் கொடுத்துவரும் கடப்பாடுடையவர்.

12 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.
 
                     - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-50)

 

பொருள்: ஈசன்  தன் திருமேனியில் உமையை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, `இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே என்று  வணங்குங்கள்.

11 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.
 
                           - திருமூலர் (10-5-7)

 

பொருள்:  நம்பி(சிறந்த ஆடவன்) தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று,  கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

10 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாந்தள்பூ ணாரம் பரிகலங் கபாலம்
பட்டவர்த் தனம்எரு தன்பர்
வார்ந்தகண் ணருவி மஞ்சன சாலை
மலைமகள் மகிழ்பெருந் தேவி
சாந்தமும் திருநீ றருமறை கீதம்
சடைமுடி சாட்டியக் குடியார்
ஏந்தெழில் இதயங் கோயில் மா ளிகைஏழ்
இருக்கையுள் இருந்தஈ சனுக்கே.
 
                 - கருவூர்த்தேவர் (9-15-2)

 

பொருள்: சாட்டியக்குடி ஈசனுக்கு  அன்பு உடைய இதயமே ஈசன் கோயில். அக்கோயிற்கண் அமைந்த எழுநிலை விமானத்தை உடைய கருவறையில் இருக்கும் அப்பெருமானுக்குப் பாம்புகளே அணியும் மாலைகள். உண்ணும் பாத்திரம் மண்டையோடு. அவர் செலுத்தும் எருதே பெருமையை உடைய யானை வாகனம். அடியார்களின் இடையறாது ஒழுகும் கண்ணீரை உடைய கண்களே அவர் குளிக்கும் இடம். பார்வதியே அவர் மகிழ்கின்ற பெரிய தேவி. திருநீறே அவர் அணியும் சந்தனம். அவர்பாடும் பாடல் சிறந்த வேதங்களே. சடையே அவர் கிரீடம்.

07 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காண்பரிய கனைகழலோன்
புனவே யனவளைத்
தோளியொடும் புகுந்தருளி
நனவே எனைப்பிடித்தாட்
கொண்டவா நயந்துநெஞ்சம்
சினவேற்கண் நீர்மல்கத்
தெள்ளேணங் கொட்டாமோ.

               - மாணிக்கவாசகர் (8-11-10)

 

பொருள்: கனவிலும் காண்பதற்கு அரிதாகிய திருவடியையுடைய இறைவன் உமாதேவியாரோடும் எழுந்தருளி நனவின் கண்ணே என்னை வலிந்து ஆட்கொண்ட விதத்தை மனத் தால் சிந்தித்து கண்களில் நீர் மல்க  தெள்ளேணம் கொட்டுவோம்.

06 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்செய்த மேனியினீர் புலித்
தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்
தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பர
வையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடி
யேன்இட் டளங்கெடவே.
 
                  - சுந்தரர் (7-25-1)

 

பொருள்: பொன் போலும் மேனியை உடையவரே , புலி தோலை அரையில் உடுத்தவரே ,  மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு

05 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சேலினே ரனையகண்ணார் திறம்விட்டுச் சிவனுக்கன்பாய்ப்
பாலுநற் றயிர்நெய்யோடு பலபல வாட்டியென்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று
காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
 
                          - திருநாவுக்கரசர்  (4-31-9)

 

பொருள்: சேல்மீன் போன்ற கண்களை உடைய மகளிரிடம் ஈடுபடும் செயலை விடுத்துச் சிவபெருமானுக்கு அன்பனாய் இருந்து பஞ்சகவ்வியம் முதலியவற்றால் அபிடேகித்து உலகமயக்கத்தைப் போக்கிச் சிவ வழிபாட்டில் நிலை பெற்ற மார்க்கண்டேயனுக்காகக் கூற்றுவனை உதைத்தவர் கடவூர் வீரட்டனார் ஆவர். 

04 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-33-2)

 

பொருள்: சடைமுடி உடைய  சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

03 November 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேழக் கரும்பினொடு
மென்கரும்பு தண்வயலில்
தாழக் கதிர்ச்சாலி
தானோங்குந் தன்மையவாய்
வாழக் குடிதழைத்து
மன்னியஅப் பொற்பதியில்
ஈழக் குலச்சான்றார்
ஏனாதி நாதனார்.
 
                      -ஏனாதி நாயனார் புராணம் (2)

 

பொருள்: வேழக் கரும்புகளோடு மெல்லிய கரும்புகளும் குளிர்ந்த வயல்களிடத்துத் தம் வளர்ச்சியில் தாழும்படி, கதிர்களை யுடைய செந்நெற்பயிர்கள் உயரும் தன்மை உடையவாய், அவற்றால் வாழ்வுபெறுகின்ற குடிமக்கள் ஓங்கி நிலைபெற்றிருக்கின்ற அவ் வழகிய எயினனூரில் வாழ்பவர் ஏனாதிநாதர் ஆவர். 

31 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
 
                - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-50)

 

பொருள்:  கொன்றைப் பூவினா லாகிய மாலையைத் தனது அடையாள மாலையாகக் கொண்ட சிவ பெருமானிடத்தில் நீர் - நெருப்பு, திங்கள் -  பாம்பு, யோக நிலை - இல்லாள், உருவம் - அருவம், புலி - மான், பகல் - இரவு இவ்வாறு எல்லாம் ஒன்றுக்கொன்று பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன.

30 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
 
                   - திருமூலர் (10-5-3)

 

பொருள்: உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

29 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூவணம் கோயில் கொண்டெனை ஆண்ட
புனிதனை வனிதை பாகனை வெண்
கோவணங் கொண்டு வெண்டலை ஏந்தும்
குழகனை அழகெலாம் நிறைந்த
தீவணன் றன்னைச் செழுமறை தெரியுந்
திகழ்கரு வூரனேன் உரைத்த
பாவணத் தமிழ்கள் பத்தும்வல் லார்கள்
பரமன துருவமா குவரே.
 
                 - கருவூர்த்தேவர் (9-14-10)

 

பொருள்: திருப்பூவணத்த்தலத்தில் கோயில்கொண்டு அடியேனைத் தன் அடியவனாகக்கொண்ட புனிதனாய், உமை  பாகனாய், வெள்ளிய கோவண ஆடையை உடுத்து வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தும் இளையனாய், எல்லா அழகுகளும் முழுமையாக நிறைந்த தீ நிறத்தவனாகிய சிவபெருமானுடைய செய்திகளாகச் சிறந்த வேதங்களை ஆராயும் விளக்கமுடைய கருவூர்த் தேவனாகிய அடியேன் சொல்லிய பாக்களின் தன்மை பொருந்திய தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பொருளோடு ஓதி நினைவிற்கொண்டு பாட வல்லவர்கள் சிவபெருமானுடைய சாரூப்பியத்தை அடை வார்கள்.

28 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருமந்த தேவர்
அயன்திருமாற் கரியசிவம்
உருவந்து பூதலத்தோர்
உகப்பெய்தக் கொண்டருளிக்
கருவெந்து வீழக்
கடைக்கணித்தென் உளம்புகுந்த
திருவந்த வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                     - மாணிக்கவாசகர் (8-11-5)

 

 பொருள்: திருமால், பிரமன் என்னும் அருமையாகிய தேவர்களுக்கும் அருகிய  சிவம் உலகத்துள்ளோர் வியப் படையும் வண்ணம் மானுடவுருவமாய் எழுந்தருளி என்னை அடிமை கொண்டு என்பிறவிக் காடுவெந்து நீறாகும்படி கடைக்கணித்து என் மனம் புகுந்ததனால் எனக்குளதாகிய பெருஞ்செல்வத்தைப் புகழ்ந்து பாடித் தெள்ளேணம் கொட்டுவோம்.

27 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஏரார் முப்புரமும் மெரி
யச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழ
பாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
 
             - சுந்தரர் (7-24-10)

 

பொருள்: அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும் , கச்சால் கட்டப்பட்ட தனங்களை யுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை , புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் , சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள் .

24 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்
விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்
பண்ணிடைச் சுவைகள் பாடி யாடிடும் பத்தர்க் கென்றும்
கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
 
                   - திருநாவுக்கரசர் (4-31-2)

 

பொருள்: இந்நிலவுலகிலே உமக்குக் கிட்டியுள்ள மனித உடம்பாகிய கூட்டினைப் பெருமையாகக் கருதி நீங்கள் மயக்கந்தரும் இவ்வுலக வாழ்வில் ஈடுபடுவீராயின் , யமலோகத்திலுள்ள தருமராசர் உம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்க விரும்பினால் அதனை அப்பொழுது தடுக்க வல்லவர் யாவர் உளார் ? பண்களோடு சுவையாக எம்பெருமான் புகழைப் பாடிக் கூத்தாடும் அடியவர்களுக்கெல்லாம் கண்மணியைப் போன்றிருந்து அவர்கள் உய்ய வழிகாட்டுகிறார் கடவூர் வீரட்டனார் .

23 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு  திருமுறை

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-32-11)

 

பொருள்: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

21 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.
 
              - எரிபத்தனாயனார் புரணாம் 

 

பொருள்: எறிபத்த நாயனார், மேற்கூறிய முறையான வலிய பெருந்தொண்டை நாளும் இந் நிலவுலகத்தின்கண் அடியவர் களுக்குத் துன்பம் நேரிட்ட பொழுது அவர் முன் சென்று அத்துன் பத்தை நீக்கி, நாளும் நல்ல தவநெறியைப் பூண்டு, பின்பு மேன்மை மிக்க திருக்கயிலையில் வெற்றி பொருந்திய சிவகணங்கட்க்கு முன்னாக இருக்கும் முதன்மை பெற்றார்.

20 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.
 
                     - சேரமான் பெருமாள் நாயனார் (11-6-40)

 

பொருள்: முனிவனே, நறுமணம் கமழ மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்;   தவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள்

17 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.
 
              - திருமூலர் (10-5-1)

 

பொருள்: இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.

16 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர்
கள்ளரை மெள்ளவே துரந்துன்
அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன்
அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய்
நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க
நிலைவிளக் கலகில்சா லேகப்
புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.
 
                       - கருவூர்த்தேவர்  (9-14-5)

 

பொருள்: உயரமான அடுக்குக்களை உடைய மாட வீடுகளில் இரா நேரத்தில் இருளைப்போக்குவதற்கு அணையாது உள்ள விளக்குக்கள் சாளரங்களுக்கு வெளியே ஒளியை வீசுகின்ற, கடைத்தெருக்களையுடைய திருப்பூவணம் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்ற பெருமானே! கொடிய வினையாகிய பாசக்கடலைக் கடந்து ஐம்பொறிகளாகிய திருடர்களை மெதுவாக விரட்டி உன் திருவடிகள் இரண்டனையும் நூல்களில் சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைந்துவிட்டேன். அடியேனுக்கு அருள் செய்வதோ, அருள் செய்யாது விடுப்பதோ உன் திருவுள்ளம்

15 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருமாலும் பன்றியாய்ச்
சென்றுணராத் திருவடியை
உருநாம் அறியஓர்
அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
 
                   - மாணிக்கவாசகர்  (8-11-1)

 

 பொருள்: திருமாலும் வராகவுருவங் கொண்டு நிலத்தைப் பிளந்து சென்றும் அறியாத திருவடியை யாம் அறிந்துய்யும்படி ஒரு அந்தணனாய் எழுந்தருளி எம்மை ஆண்டு கொண்டவனும், திரு நாமங்கள், வடிவங்கள் இல்லாதவனுமாகிய சிவபெருமானுக்கு ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

14 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சந்தா ருங்குழையாய் சடை
மேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை
யேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழ
பாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
 
                 - சுந்தரர் (7-24-7)

 

பொருள்: பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே , சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே , வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே , இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே , அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே , என் தந்தையே , நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன் ?

13 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

சதுர்முகன் றானுமாலுந் தம்மிலே யிகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற வெரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன்றன்னைக் காறனிற் பிதிரவைத்தார்
கதிர்முகஞ் சடையில்வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.
 
                          - திருநாவுக்கரசர் (4-30-9)

 

பொருள்:  பிரமனும் திருமாலும் தம் இருவருள் பரம்பொருள் யாவர் என்று மாறுபடுதலைக் கண்டு , கண்கூடாக ஆதியும் அந்தமும் காணமுடியாத தீத்தம்பத்தைப் படைத்தார் . கடுமையான முகத்தை உடைய கூற்றுவனைக் காலினால் சிதறவைத்தார் . பிறையைச் சடையில் வைத்தவருமான கழிப்பாலைச் இறைவனார். 

10 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

தடங்கொண்டதொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.
 
               -   திருஞானசம்பந்தர் (1-32-2)

 

பொருள்: தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

09 October 2014

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.
 
                      - எறிபத்தநாயனார் புராணம் (50)

 

பொருள்: எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கி, எழுந்து நின்று, வானொலியைப் போற்ற, அரிய மறைப் பொருளாயுள்ள சிவபெருமானும், அழகிய திருப்பூங்கூடையில் முன்பிருந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்கள் நிறையும்படி அருளிச் செய்ய, அத்தகைய திருவருளைக் கண்டு மகிழ்ந்து, சிவகாமி யாண்டாரும் அங்கு வந்து நின்றனர்.

08 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.
 
                   - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-35)

 

பொருள்: நீரின்கண் விரவிய தீ வெளித்தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, `பிச்சை` என்று கேட்டு வீதியிலே வந்தார். அவர் வரவைக் கண்டதும் பல உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எம்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன. காலன்   வந்து அழைகின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

07 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
 
                  - திருமூலர் (10-4-30)

 

பொருள்: உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.

06 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
பெருமையிற் பெரியதொன் றுளதே
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
பூவணம் கோயில்கொண் டாயே.
 
          - கருவூர்த்தேவர் (9-14-1)

 

பொருள்: மருது, அரசு, பெரிய கோங்கு, அகில் என்னும் மரங்களை முரித்துக்கொண்டு மலையில் தோன்றும் பொருள்களை அடித்துக்கொண்டு மலையிலிருந்து இறங்கி ஓடிவருகின்ற வையை நதியின் ஒன்றோடொன்று மோதும் அலைகள் தம் பக்கத்தில் ஓங்கக்கொண்ட, கடைவீதிகளையுடைய திருப்பூவணம் என்ற தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளிய பெருமானே! திருவருள் புரிந்து அடியேனை அடிமையாக இவ்வுலகில் ஆட்கொண்டு இன்பம் தரும் பொருள் இது என்று அறிவித்து மிகுதியாக அருள்புரிந்து ஆனந்தத்தை வழங்குகின்ற உன் பெருமையைவிட மேம்பட்ட பொருள் ஒன்று உளதோ?

01 October 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூமேல் அயனோடு
மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
             - மாணிக்கவாசகர் (8-10-20)

 

பொருள்: பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே, தும்பியே நீ  சென்று ஊதுவாயாக.

29 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே.
 
           - சுந்தரர் (7-24-1)

 

பொருள்: பொன்போன்ற  திருமேனியை உடையவனே , அரையின்கண் புலித்தோலை உடுத்து , மின்னல்போலும் சடையின் கண் , விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே , தலைவனே , விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே , திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே , எனக்குத் தாய்போல்பவனே ,  உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ?

26 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
 
                     - திருநாவுக்கரசர் (4-30-2)

 

பொருள்: அடியவர்கள் வீடு பேற்றை விரும்புமாறும் , வேள்விகளை நிகழ்த்துமாறும் , பண்களைப் பாடுமாறும் , திருவடி வழிபாட்டில் பயிற்சி உறுமாறும் செய்தவர் . நெற்றியில் கண்ணுடைய அப்பெருமான் உலகங்களை அளக்குமாறு நீண்ட வடிவெடுத்த திருமாலுக்கும் அருள்பாலித்தவர் கழிப்பாலைச் உள்ளவராவர் 

25 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-31-11)

 

பொருள்: இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் பாடவல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

24 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.

           - எரிபத்தநாயனார் புராணம் (46)

பொருள்: புகழ்ச் சோழ நாயனார் விரும்பிக் கொடுத்த உடைவாளை எறிபத்த நாயனார், தம் கழுத்தில் சேர்த்து அறுக்கத் தொடங்கும் பொழுது, புகழ்ச் சோழநாயனாரும், இப் பெரியவரின் செய்கை இவ்வாறிருக்க யானே கெட்டேன் என்று கூறி, இரங்கி, அவர் எதிரே விரைந்து போய்த் தம் பெரிய கைகளினால் அவர் தம் வாளையையும், கையையும் தடுத்துப் பிடித்தார்.

23 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடலன்
நாடற் பசுபதியே.
 
                  - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-30)

 

பொருள்: பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடி யோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன். எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன். அவனையே, நெஞ்சே, நாடுக

22 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
 
                 - திருமூலர் (10-4-27)

 

பொருள்: குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

19 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
திளைப்பதும் சிவனருட் கடலே.
 
               - கருவூர்த்தேவர் (9-13-11)

 

பொருள்: உமையோடு  இருந்தே யோகம் செய்ப வனாய், வளரும்  பிறைச்சந்திரனை முடியின் மீது கங்கையோடு அணிந்து கொண்டுள்ள தெய்வமாய் உள்ள கங்கைகொண்ட சோளேச் சரத்தானைப்பற்றி அழகிய கையில் பிச்சை எடுக்கும் ஓட்டினை ஏந்தி உணவுக்காகத் திரியும் கருவூரர்  பாடியுள்ள சொல்மாலை யாகிய இப்பதிகத்தைப் பாடி வழிபடுபவர்கள் ஆணைச் சக்கரம் ஏந்திய கையோடு இவ்வுலகில் அரசர்களைப் போலச் சிறப்பாக வாழ்ந்து மறுமையில் சிவபெருமானுடைய திருவருளாகிய கடலில் மூழ்கித் திளைப்பார்கள்.

18 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கருவாய் உலகினுக்
கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல்
மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில்
அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                    - மாணிக்கவாசகர் (8-10-14)

 

பொருள்: உலகத்துக்குப் பிறப்பிடமாய், அப்பாலாய், இவ்விடத்து எம்பெருமாட்டியோடும் எழுந்தருளி அருவாய் அந்தணனாகி, என்னை அடிமைகொண்ட அழகிய சிவ பெருமானிடத்தே தும்பியே நீ சென்று ஊதுவாயாக.

17 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பழிசே ரில்புகழான் பர
மன்ப ரமேட்டி
கழியார் செல்வமல்குங் கழிப்
பாலை மேயானைத்
தொழுவான் நாவலர்கோன் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
வழுவா மாலைவல்லார் வா
னோருல காள்பவரே.
 
               -சுந்தரர்  (7-23-10)

 

பொருள்: பழி இல்லாத புகழையுடையவனும் , யாவர்க்கும் மேலானவனும் மேலிடத்தில் உள்ளவனும் ஆகிய கழியின்கண் பொருந்திய செல்வங்கள் பெருகுகின்ற திருக்கழிப் பாலையில் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற சிவபிரானை ,  தொழுபவனாகிய திருநாவலூரார்க்குத் தலைவனாம் நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களைத் தவறு உண்டாகாதபடி பாடவல்லவர்கள் , தேவர் உலகத்தை ஆள்பவராவர் .

16 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓவாத மறைவல் லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பி லாரும் முனிகளா னார்க ளேத்தும்
பூவான மூன்று முந்நூற் றறுபது மாகு மெந்தை
தேவாதி தேவ ரென்றுந் திருச்செம்பொன் பள்ளி யாரே.
 
                         - திருநாவுக்கரசர் (4-29-9)

 

பொருள்: திருச்செம்பொன்பள்ளியார் என்றும் அழிதல் இல்லாத வேதத்தை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனும் , கடல் நிறத்தவனாகிய திருமாலும் காணமுடியாதவராய் , மூத்தலோ பிறத்தலோ இல்லாதவராய் 1080 மலர்களைக் கொண்டு முனிவர்கள் வழிபடும் எங்கள் தந்தையாராய் , என்றும் தேவர்களுக்கு எல்லாம் தேவருமாய் உள்ளார் .

15 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


ஓடே கலணுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.
 
                    - திருஞானசம்பந்தர் (1-32-1)

 

 பொருள்:உண்ணும் பாத்திரம் பிரமகபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

12 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
 
                  - எறிபத்தநாயனார் புராணம் (42)

 

பொருள்: சிவபெரு மானின் அடியவர்க்கு, இவ்யானை செய்த தீங்கிற்குத் தீர்வு, இங்குப் பாகரோடு யானையையும் துணித்ததனால் அமையாது; இத்தீங்கு நேர்தற்குக் காரணமாகும் என்னையும் கொல்லவேண்டும்; மங்கலம் பொருந்திய மழுவினால் கொல்லுதல் முறைமையன்று; அதற்கு இதுவே தகுதியாகும் என்று, சிவந்த தம்திருக் கரத்தினால் இடையில் செருகியிருந்த வாளை எடுத்து, தம் பிழைக்குத் தீர்வு நேர்வாராய்க் மன்னர் கொடுத்தார்.

11 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.
 
                -சேரமான்பெருமாள்  நாயனார்  (11-6-20) 

 

பொருள்: கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தியுள்ள இலைவடிவான, கூரிய முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன

10 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
 
                 - திருமூலர் (10-4-24)

 

பொருள்: கடல் நீரில் உள்ள  உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் உப்பு எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.

09 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
உள்கலந் தெழுபரஞ் சோதி
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே நீல கண்டனே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                -கருவூர்த்தேவர்  (9-13-6)

 

பொருள்: அண்டங்கள் எல்லாம் தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணு அளவின என்று கூறுமாறு மிகப்பெரிய வடிவினனாகவும், தன்னோடு ஒப்பிடுங்கால் ஓர் அணுவே ஓர் அண்டத்தை ஒத்த பேருருவினது என்று சொல்லுமாறு சிறுமையிற் சிறிய வடிவினனாக வும் உள்ள தன்மையைக் கொண்டு, அடியேன் நுகரும் பிராரத்தவினை உன்னைச் சேர்ந்ததாக ஆகுமாறு அடியேனுடைய உள்ளத்தினுள் கலந்து விளங்கும் மேம்பட்ட ஒளி வடிவினனே! வாசுகி என்ற பாம் பினையே நாணாகக் கொண்டு பெரிய மேருமலை ஆகிய வில்லாலே பகைவர்களின் மும்மதில்களையும் எரித்த வீரனே! நீல கண்டனே! கங்கைகொண்ட சோளேச்சரத்தானே!

08 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நோயுற்று மூத்துநான்
நுந்துகன்றாய் இங்கிருந்து
நாயுற்ற செல்வம்
நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை
ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                  - மாணிக்கவாசகர்  (8-10-10)

 

பொருள்: தும்பியே  பிறவிப் பிணியை அடைந்து முதிர்ந்து, இங்கு இருந்து - நான் தாய்ப் பசுவால் தள்ளப்பட்ட கன்று போல வருந்தி நின்ற என்னைத் தாய் போலக் கருணை செய்தாண்டருளின இறைவனிடத்தே சென்று ஊதுவாயாக.

05 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஆர்த்தாய் ஆடரவை அரை
ஆர்பு லியதள்மேற்
போர்த்தாய் யானையின்தோல் உரி
வைபு லால்நாறக்
காத்தாய் தொண்டுசெய்வார் வினை
கள்ள வைபோகப்
பார்த்தாய் நுற்கிடமாம் பழி
யில்கழிப் பாலையதே.
 
                   - சுந்தரர் (7-23-6)
 
பொருள்: அரையின்கண் பொருந்திய புலித்தோலின்மேல் , ஆடுகின்ற பாம்பைக் கட்டியவனே , யானையின் உரிக்கப்பட்டதாகிய தோலைப் புலால் நாற்றம் வீசும்படி போர்த்துக்கொண்டவனே , உனக்குத் தொண்டு செய்வாரது வினைகள் நீங்கும்படி திருக்கண் நோக்கம் வைத்து அவர்களைக் காத்தருளினவனே , உனக்கு இடமாவது திருக்கழிப்பாலையே

04 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நொய்யவர் விழுமி யாரு நூலினுண் ணெறியைக் காட்டும்
மெய்யவர் பொய்யு மில்லார் உடலெனு மிடிஞ்சி றன்னில்
நெய்யமர் திரியு மாகி நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
செய்யவர் கரிய கண்டர் திருச்செம்பொன் பள்ளி யாரே.
 
                - திருநாவுக்கரசர் (4-29-2)

 

பொருள்: செம்பொன்பள்ளியார் ஞானவடிவினர் ஆதலின் நொய்யராய் , சீர்மை உடையவராய் , வேதநெறியைக் காட்டும் உண்மை வடிவினராய் , பொய்யிலியாய் , உடல் என்னும் ஓட்டாஞ் சில்லியிலே நெய்யில் தோய்த்த திரியாகவும் நெஞ்சில் ஒளி தருகின்ற விளக்காகவும் உள்ள செந்நிறத்தவராவர் .

03 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன்
கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம்
சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக
வல்லார்க் கெளிதாம் பிறவா வகைவீடே.
 
             - திருஞானசம்பந்தர் (1-31-11)

 

பொருள்: கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

01 September 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.
 
                       - எரிபத்தநாயனார் புராணம் (37)

 

பொருள்: குழையை அணிந்த செவியினை யுடைய சிவபெருமானுக்கு அடியவர் ஆகும் குணத்தால் மிக்க இவர், இவ்யானை பிழை செய்து இருந்தாலன்றிக் கொல்ல மாட்டார்; இஃது அவருக்குத் தீங்கு செய்தது உறுதி என்று தம் உள்ளத்தில் கருதிக் கொண்டு, மழை போலும் மதத்தைச் சொரிகின்ற யானையோடு கூடிய சேனைகளின் வரவினைத் தடுத்து, தாம் ஏறி வந்த வலிமை பொருந்திய குதிரையினின்றும் உலகை ஆளும் அரசராய புகழ்ச் சோழர் இறங்கினார்.

28 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.
 
            - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-17)

 

பொருள்: நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும்,கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினை களை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான். நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையை  உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு.

27 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே
 
                  - திருமூலர் (10-4-19)

 

 பொருள்: மாணிக்கத்துள்   மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்கத்துள்ளே  மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!

26 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
 
                   - கருவூர்த்தேவர் (9-13-1)

 

 பொருள்:முன்னொரு காலத்தில் திருமால் கூட அறிய முடியாத ஒருவனாய் சத்தி, சிவம் ஆகிய இருபொருள்களாய் இருக்கின் றவனே! முக்கண்ணனே! நான்கு பெரிய நீண்ட தோள்களை உடைய கரும்பே! தேனே! அமுதமே! கங்கைகொண்ட சோளேச்சரம் என்ற திருக்கோயிலில் உகந்தருளியிருப்பவனே! அன்ன வடிவு எடுத்துப் பிரமன் வானத்தில் பறந்து உன் உச்சியைத் தேடுமாறு அவ்வளவு பெரியவனாகிய நீ சிறியனாகிய அடியேனை அடிமை கொள்ள விரும்பி அடியேனுடைய உள்ளத்தில் புகுந்த எளிவந்த தன்மையை அடியேன் ஒருநாளும் மறக்கமாட்டேன்.

25 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சட்டோ நினைக்க
மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ
கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித்
தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
                 - மாணிக்கவாசகர் (8-10-7)

 

பொருள்: மனத்துக்கு அமுதம் போலும் சிவ பெருமானை நினைத்தால் எமக்குச் சேதமுண்டாமோ? உண்டாகாது. ஆதலால், அவனை மறவேன். அவனை நினைத்தற் கிசையாத துட்டரை யாம் காணவும் அருவருப்போம். அந்தப் பெரியோனிடத்தே கோத்தும்பி நீ சென்று ஊதுவாயாக.

22 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செடியேன் தீவினையில் தடு
மாறக் கண்டாலும்
அடியான் ஆவஎனா தொழி
தல்த கவாமே
முடிமேல் மாமதியும் அர
வும்மு டன்துயிலும்
வடிவே தாம் உடையார் மகி
ழுங்கழிப் பாலையதே.

                 - சுந்தரர் (7-23-1)

 

பொருள்: திருமுடியின் மேல் , பெருமை பொருந்திய பிறையும் , பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர் , குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும்  இவன் நம் அடியவன்  என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக் கழிப்பாலையில் , வாளா இருத்தல் தகுதியாகுமோ.

21 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.
 
                    -திருநாவுக்கரசர்  (4-28-6)

 

பொருள்: அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும் , தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதிபாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடம்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த , விழுந்து நசுங்கி வேகம் தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார் .

20 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-31-3)

 

பொருள் : அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.

19 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.
 
                        - எரிபத்தனாயனார் புராணம் (26)

 

பொருள்: எறிபத்தரால் வெட்டுண்டு விழுந்தவர்  அல்லாமல் அங்கிருந்த வேறு சிலர், தேன் துளிக்கும் ஆத்தி மாலையை யணிந்த புகழ்ச்சோழநாயனாரின்அரண்மனைக்கு ஓடிச்சென்று, வாயில் காவலர்களைப் பார்த்து, பட்டத்து யானையும் இறந்து அதனைச் செலுத்தும் பாகரும் இறந் தார்கள் என்று, நீவிர் விரைவாகச் சென்று அரசருக்குத் தெரிவிப்பீராக என்று சொன்னார்கள்.

18 August 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.
 
              - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-14)

 

பொருள்: மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே,  சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள். விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள். நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே சிவபெருமானை இடையறாது நினையுங்கள். சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள். என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே,  சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.