31 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
 
                  -திருஞானசம்பந்தர்  (1-48-1)

 

பொருள்: வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய் சேல் மீன்கள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே!

30 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மின்னிடை மடவார் கூற
மிக்கசீர்க் கலய னார்தாம்
மன்னிய பெருஞ்செல் வத்து
வளமலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளுந் தன்மைத்
தெந்தைஎம் பெருமான் ஈசன்
தன்னருள் இருந்த வண்ணம்
என்றுகை தலைமேற் கொண்டார்.
 
                    -குங்கலிகலயநாயனார்  (20)

 

பொருள்: அம்மையார் இவ்வாறு கூறலும், மிக்க சிறப்பையுடைய குங்குலியக் கலயனாரும், தமது மனையில், விளங்கிய பெருஞ் செல்வத்தின் வளம் மலிந்த சிறப்பை நோக்கி,  என்னையும் ஆண்டு கொள்ளும் தன்மைக்கு, எந்தையும் எம் பெருமானுமான ஈசனின் அருள் இருந்த வண்ணம் தான் என்னே? என இறைவனின் அருளை நினைந்து களி கூர்ந்து நிற்பார், தம் கரங்களை உச்சிமீது கூப்பிய நிலையில் நின்று போற்றினார்.

29 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் அசைவின்றிக்
காட்டுமேல் காட்டிக் காலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல் கூடவே கூடு.

28 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே.
 
                         -திருமூலர்  (10-16-10)

 

பொருள்:தம் தம் சமய அடை யாளங்களை மட்டும் உடையராய் அச்சமய ஒழுக்கத்தில் நில்லா தொழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்திற் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமையாகும்.

24 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சித்தர் தேவர் இயக்கர் முனிவர்
தேனார் பொழில்தில்லை
அத்தா அருளாய் அணிஅம் பலவா
என்றென் றவர் ஏத்த
முத்தும் மணியும் நிரந்த தலத்துள்
முளைவெண் மதிசூடிக்
கொத்தார் சடைகள் தாழநட்டம்
குழகன் ஆடுமே.
 
                   -திருவாலியமுதனார்  (9-24-7)

 

 பொருள்: சித்தர்களும் தேவர்களும் இயக்கர்களும் முனிவர்களும் போற்றி வேண்டும்   சோலைகளை உடைய தில்லைநகர்த் தலைவனே! அழகிய சிற்றம்பலத்தில் உள்ளவனே!  முத்தும் மணியும் வரிசையாக அமைந்த அந்த அம்பலத்தில் பிறைச்சந்திரனைச் சூடி, கொத்துக் கொத் தாக அமைந்த சடைகள் தொங்குமாறு அழகனாகிய சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்

23 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொந்தண வும்பொழிற் சோலைக்
கூங்குயி லேயிது கேள்நீ
அந்தண னாகிவந் திங்கே
அழகிய சேவடி காட்டி
எந்தம ராம்இவன் என்றிங்
கென்னையும் ஆட்கொண் டருளும்
செந்தழல் போல்திரு மேனித்
தேவர் பிரான்வரக் கூவாய்.
 
                   -மாணிக்கவாசகர்  (8-18-10)
 
பொருள்: பூங்கொத்துக்கள் நெருங்கிய பெரிதாகிய சோலையில் கூவுகின்ற குயிலே! நீ இதனைக் கேட்பாயாக. இங்கே அந்தணன் ஆகி வந்து அழகிய செம்மையாகிய திருவடியைக் காட்டி, என் அன்பரில் ஒருவனாம் இவன் என்று இவ்விடத்தில் என்னையும் அடிமை கொண்டருளிய சிவந்த தீப்போலும் திருமேனியையுடைய தேவர் பெருமான் வரும்படி கூவி அழைப்பாயாக.

22 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துஞ்சி யும்பிறந் துஞ்சி றந்துந்
துயக்க றாத மயக்கிவை
அஞ்சி யூரன் திருப்பு றம்பயத்
தப்ப னைத்தமிழ்ச் சீரினால்
நெஞ்சி னாலே புறம்ப யந்தொழு
துய்து மென்று நினைத்தன
வஞ்சி யாதுரை செய்ய வல்லவர்
வல்ல வானுல காள்வரே.
 
                         -சுந்தரர்  (7-35-10)
 
பொருள்: இறந்தும் , பின்பு பிறந்தும் ,  இப்படியே சுழலுதலுக்கு அஞ்சி , நம்பியாரூரன் , ` திருப்புறம்பயத்தை வணங்கி உய்வோம் ` என்று நெஞ்சினாலே நினைத்து , ஆங்கிருக்கின்ற தன் தந்தையைத் தமிழ்ச் சீர்களால் பாடிய இப்பாடல்களைக் கரவில்லாது பாட வல்லவர்கள் , அவைகளை நீக்கவல்ல வானுலகத்தை ஆள்வார்கள் .

21 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம்
மெள்ளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.
 
                              -திருநாவுக்கரசர்  (4-45-1)

 

பொருள்: கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் .

18 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே.

17 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்பரங் கிருப்ப நம்பர்
அருளினால் அளகை வேந்தன்
தன்பெரு நிதியந் தூர்த்துத்
தரணிமேல் நெருங்க எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும்
பொருவில்பல் வளனும் பொங்க
மன்பெரும் செல்வ மாக்கி
வைத்தனன் மனையில் நீட.
 
                          -குங்குலிகலய நாயனார்  (14)

 

பொருள்: பெருமானின் திருவருளினாலே அளகை வேந்தனாகிய குபேரன், தன்பெருநிதியைத் தனதுலகில் முழுவதும் இல்லையாகச் செய்து இந்நிலவுலகில் நெருங்குமாறு, பொற்குவியலும் நெல்லும் ஒப்பற்ற பிற பொருள்களாலான பல வளங்களும் பெருகிப் பொலியுமாறு, அவர்தம் திருமனையில் நிரப்பி வைத்தனன்.

16 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்
கூவா திருந்த குயிற்பிள்ளாய் ஒவாதே
பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்
கோமான் வர ஒருகாற் கூவு.

15 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஞானமி லாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.

14 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சந்தும் அகிலும் தழைப்பீ லிகளும்
சாதி பலவுங்கொண்
டுந்தி யிழியும் நிவவின் கரைமேல்
உயர்ந்த மதில்தில்லைச்
சிந்திப் பரிய தெய்வப் பதியுள்
சிற்றம் பலந்தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம்
நாதன் ஆடுமே.
 
                            -திருவாலியாமுதனார்  (9-24-4)

 

பொருள்: சந்தனம , அகில், சாதிக்காய்மரம், தழை போன்ற மயில்தோகை என்ற பலவற்றையும் அகப்படக்கொண்டு தள்ளி ஓடுகின்ற நிவா என்ற ஆற்றின் கரையில் அமைந்த உயர்ந்த மதில்களைஉடைய தில்லை என்ற பெயருடைய, நினைக்கவும் அரிய தெய்வத் திருத்தலத்துச் சிற்றம்பலத்தில் திருநந்திதேவர் முழவு ஒலிக்கச் சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துகிறான்

10 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சுந்தரத் தின்பக் குயிலே
சூழ்சுடர் ஞாயிறு போல
அந்தரத் தேநின் றிழிந்திங்
கடியவர் ஆசை அறுப்பான்
முந்தும் நடுவும் முடிவு
மாகிய மூவ ரறியாச்
சிந்துரச் சேவடி யானைச்
சேவக னைவரக் கூவாய்.
 
                - மாணிக்கவாசகர் (8-18-5)

 

பொருள்: குயிலே!  சூழ்ந்த கிரகணங்களை யுடைய சூரியனைப் போல ஆகாயத்தினின்றும் இறங்கி இம் மண்ணுலகிலுள்ள அடியார்களுடைய பற்றுக்களை ஒழிப்பவனும் உலகத்திற்கு முதலும் இடையும் இறுதியும் ஆகியவனும் பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் அறியமுடியாத செஞ்சாந்து போன்ற சிவந்த திருவடியை உடையவனும் வீரனுமாகிய பெருமானை வரும்படி கூவி அழைப்பாயாக

08 December 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படையெ லாம்பக டாரஆளிலும்
பௌவஞ் சூழ்ந்தர சாளிலும்
கடையெ லாம்பிணைத் தேரை வால்கவ
லாதெ ழுமட நெஞ்சமே
மடையெ லாங்கழு நீர்ம லர்ந்து
மருங்கெ லாங்கரும் பாடத்தேன்
புடையெ லாமணம் நாறு சோலைப்
புறம்ப யந்தொழப் போதுமே.
 
                     - சுந்தரர் (7-35-5)

 

பொருள்: பல படைகளையும் ஏவல்கொண்டு வெற்றியைப் பெறினும் , அவ்வெற்றியாலே கடல்சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆளினும் , முடிவில் எல்லாம் , தேரையோடு ஒட்டியுள்ள வால்போல ஆகிவிடும் ; ஆதலால் , நீர்மடைகளில் எல்லாம் கழுநீர்ப் பூக்கள் மலர் தலாலும் , பல இடங்களிலும் கரும்பை ஆலையில் இட்டுப் பிழிதலாலும் , எல்லாப் பக்கங்களிலும் தேனின் மணம் வீசுகின்ற சோலை களையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ;  புறப்படு மனமே  .

30 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படமுடை யரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தா னுய்ந்த வாறே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-44-8)

 

பொருள்: படம்  உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . 

27 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே.
 
                       -திருஞானசம்பந்தர்  (1-47-3)

 

பொருள்:  வண்டுகள் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?

25 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொன்தரத் தாரு மென்று
புகன்றிட வணிகன் தானும்
என்தர விசைந்த தென்னத்
தாலியைக் கலயர் ஈந்தார்
அன்றவன் அதனை வாங்கி
அப்பொதி கொடுப்பக் கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார்
நிறைந்தெழு களிப்பி னோடும்.
 
                  -குங்குலி கலயநாயனார்  (12)

 

 பொருள்: நான் பொன் தர நீர் இக்குங்குலியத்தைத் தாரும் என்றதும்  வணிகனும் அவரை நோக்கி, `எவ்வளவு பொன் இதற்குக் கொடுப்பீர்` என்ன, கலயனாரும் தம் மனைவியாரின் தாலியைக் கொடுத்தலும், அவ்வணிகன், அதனை வாங்கிக் கொண்டு அப்பொதியினைக் கொடுப்பக் கொண்டு, அங்கு நில்லாது தம் மனத்தில் நிறைந்து எழும் மகிழ்ச்சியோடு விரைந்து சென்றார்.

24 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாமான்தேர் வல்ல வயப்போர் விசயனைப்போல்
தாமார் உலகில் தவமுடையார் தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி யாள்வாரைத்
தீண்டத்தான் பெற்றமையாற் சென்று.

23 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

21 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய்
காண அருள் என்று
பல்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதிலின் றில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.
 
                      -திருவாலியமுதனார் (9-24-1)

 

பொருள்: இரவாகவும், பகலாகவும், உருவம் அற்ற மற்றும்  உருவம் உடைய பொருளாகவும், மனநிறைவைத் தாராத அமுதமாகவும், கல்லாலமரத்தின் நிழலில் உள்ளவனாகவும், அமையும் கயிலைமலைத் தலைவனே! `உன் திருவுருவைக் காணும் பேற்றை எங்களுக்கு அருளுவாயாக` என்று பதஞ்சலி முனிவர் போன்ற பல்லாயிரவர் சான்றோர்கள் முன் நின்று வேண்ட, அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வெளிப்பட்டு மேகமண்டலம் வரை உயர்ந்த மதில்களை உடைய தில்லைக்கண் உள்ள அடியார்களுக்கு அருள் செய்து எம்பெருமான் ஆடுகிறான். 

18 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய்.
 
                      -மாணிக்கவாசகர்  (8-18-1)

 

பொருள்: இசை  உள்ள குயிலே! எம் பெருமான் திருவடி இரண்டும் எங்குள்ளன? எனக் கேட்டால், அவை கீழுலகம் ஏழினுக்கும் அப்பால் உள்ளன எனலாம். அவனது ஒளி பொருந்திய அழகிய திருமுடி எங்குளது? என்று சொல்லப்புகின், அது சொல்லின் அளவைக் கடந்து நின்ற பழமையுடையது எனப்படும். இவைகளைக் கேட்டாயாயின் முதலும் குணமும் இல்லாதவனும், முடிவு இல்லாதவனுமாகிய அவனை நீ இங்கு வரும்படி கூவி அழைப்பாயாக

13 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

பதியுஞ் சுற்றமும் பெற்ற மக்களும்
பண்டை யாரலர் பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும்
நினைப்பொ ழிமட நெஞ்சமே
மதியஞ்சேர்சடைக் கங்கை யானிடம்
மகிழும் மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந் தெல்லி நாறும்
புறம்ப யந்தொழப் போதுமே.
 
                      -சுந்தரர்  (7-35-2)

 

பொருள்:  வாழ்கின்ற ஊரும் ,  சுற்றத்தாரும் , தேடிய பொருளும் , அப்பொருளால் மனையில் வாழும் இவ் வாழ்க்கையும் எல்லாம் பண்டு தொட்ட தொடர்பினரல்லர் ; அதனால் , என்றும் உடன் தொடர்ந்தும் வாரார் . ஆதலின் , அவர்களைப் பற்றிக் கவலுதல் ஒழி ; இனி நாம் , சந்திரன் சேர்ந்த சடையிடத்துக் கங்கையை அணிந்தவன் தன் இடமாக மகிழும் , மல்லிகைக் கொடியும் சண்பக மரமும் புதிய பூக்களை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசுகின்ற திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் மனமே !! 

12 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.
 
                             -திருநாவுக்கரசர்  (1-44-2)

 

பொருள்: ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் அதில்  வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் பிதட்டுகின்றேன் கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே

11 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.
 
                                         -திருஞானசம்பந்தர்  (1-46-11)

 

பொருள்:  அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும்,  நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள்சாரா.

 

05 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் கலிக்கும் சென்னிக்
கண்ணுதல் எம்பி ராற்குப்
பொங்குகுங் குலியத் தூபம்
பொலிவுறப் போற்றிச் செல்ல
அங்கவ ரருளி னாலே
வறுமைவந் தடைந்த பின்னும்
தங்கள்நா யகர்க்குத் தாமுன்
செய்பணி தவாமை யுய்த்தார்.
 
                     - குங்கிளிகலயனாயனார் (7)

 

பொருள்: கங்கையாறு ஒலிக்கும் சடையுடன், நெற்றியில் கண்ணும் கொண்ட பெருமானுக்கு, மேன்மேலும் நறுமணம் சிறக்கும் குங்குலிய மணம் கமழ்ந்து பொலிவுறும்படி, நாள்தோறும் பணிசெய்து வரும் அவருக்கு, பெருமானார் திருவருளினாலே அங்கு வறுமை வந்து அடைய, அதன்பின்பும் தம் தலைவராய பெருமானுக்குத் தாம் முன்பிருந்து செய்துவரும் குங்குலியத் தூபம் இடும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்

03 November 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு
கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும் கூர்ந்துள்ளே
மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும்
காளத்தி யார்தம் கழல்

27 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
 
                    -திருமூலர்  (10-15-1)

 

பொருள்: அந்தணர் என்பவர்கள் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில்களைக் கடமையாகக் கொண்டவர்கள். அதனால் முத்தீ வேள்வியை அணையாது காத்து `காலை, நண்பகல், மாலை` என்னும் மூன்று வழிபாட்டுப் பொழுதுகளிலும் கடவுள் வழிபாடாகிய கடமையைத் தவறாது செய்து, அழகிய தவமாகிய அறச் செயலில் நின்று, வறியார்க்கும் விருந்தினர்க் கும் உணவு தந்து, வேதத்தையும் முறையாக ஓதி, உலகியலில் நல்லன வும், தீயனவுமாகிய நிகழ்ச்சிகளில் கடவுள் கடன்கள் பலவற்றையும் குறைவறச் செய்து முடிப்பவர்களே அந்தணர்கள். 

23 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புரியும் பொன்மதில் சூழ்தரு தில்லையுள்
பூசுரர் பலர்போற்ற
எரிய தாடும்எம் ஈசனைக் காதலித்
தினைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர் மன்னவன்
மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர் பரமன
தடியிணை பணிவாரே.
 
               -திருவாலியமுதனார்  (9-23-10)

 

பொருள்: அழகிய மதில்களால் சூழப்பட்ட தில்லைநகரிலே, அந்தணர்கள் பலரும் துதிக்குமாறு, எரியைக் கையில் சுமந்து கூத்து நிகழ்த்தும் எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் அருள் முழுமை யாகக் கிட்டாமையால் வருந்தும் தலைவிகூறும் மொழிகளாக, மலையைப் போன்ற பெரிய மதில்களைஉடைய திருமயிலாடுதுறை என்ற ஊருக்குத்தலைவனான வேதங்களில் வல்ல திரு ஆலிஅமுதன் முன்நின்று போற்றிய இப்பத்துப்பாடல்களையும் கற்றுவல்லவர் சிவபெருமானுடைய திருவடிகளின் கீழ்ச் சிவலோகத்தில் அவனைப் பணிந்து கொண்டு வாழ்வார்கள்.

22 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

கொன்றை மதியமுங் கூவிள மத்தமும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
இன்றெனக் கானவா றன்னே என்னும்.
 
                    -மாணிக்கவாசகர்  (8-17-10)

 

பொருள்: கொன்றையும்  பிறையும் வில்வத்தோடு ஊமத்தமும் பொருந்திய சடையை உடையவர் என்று நின் மகள் சொல்லுவாள், மேலும், தாயே! சடையில் பொருந்திய ஊமத்த மலர் இப்பொழுது எனக்குப் பெரும்பித்தை உண்டுபண்ணின வாறு என்னே? என்று சொல்லுவாள்.

20 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தைய லாருக்கொர் காம னேசால
நலவ ழகுடை ஐயனே
கையு லாவிய வேல னேயென்று
கழறி னுங்கொடுப் பாரிலை
பொய்கை வாவியின் மேதி பாய்புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
ஐய னாய்அம ருலகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
 
                    -சுந்தரர்  (7-34-10)

 

பொருள்: புலவர்காள் ,  பெண்கள்ளுள் காமன் போலத் தோன்றுபவனே , ஆடவர் யாவரினும் மிக இனிய அழகுடைய வியத்தகு தோற்றத்தை யுடையவனே , முருகனுக்கு வேறாய மற்றொரு முருகனே ` என்று உறுதியாகச் சொல்லிப்பாடினும் , நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின் , பெரிய பொய்கைகளிலும் , சிறிய குளங்கள் உள்ள  திருப்புகலூரைப் பாடுமின் ; பாடினால் , அமரருலகத்திற்குத் தலைவராய் , அதனை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை

19 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக்
கூறியல் பாகம் வைத்தார் கோளரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள்
ஏறினை யேறு மெந்தை யிலங்குமேற் றளிய னாரே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-43-9)

 

பொருள்: தனக்கு நிகரிலாதபடி  ஒளிவீசும் குறுகிய இடையை உடைய பார்வதியின் பாகராய்க் கொடிய பாம்பு பிறை கங்கை என்ற இவற்றைச் சடையுள் வைத்துக் காளையை ஏறி ஊரும் எம் தந்தையாராய்க் கச்சிமேற்றளியனார் விளங்குகிறார் .

15 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.
 
                         -திருஞானசம்பந்தர்  (1-44-6)

 

பொருள்: திருநீற்றை முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் வைத்து கொண்டு, கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

14 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மருவிய திருவின் மிக்க
வளம்பதி அதனில் வாழ்வார்
அருமறை முந்நூல் மார்பின்
அந்தணர் கலயர் என்பார்
பெருநதி அணியும் வேணிப்
பிரான்கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த
சிந்தையார் ஒழுக்க மிக்கார்.
 
               -குங்குலிகலய நாயனார்  (5)

 

 பொருள்: திருவின் சிறப்பினால் மிக்க வளமு டைய அத்திருப்பதியில் வாழ்பவராகிய அரிய மறை வழி நிற்கும் கலயனார் என்னும் பெயருடைய அந்தணர், கங்கையை அணிந்த சிவபெருமான் திருவடிகளைப் பேணி நாள்தொறும் வணங்குபவர்; அன்பு கூர்ந்த சிந்தையர்; ஒழுக்கத்தில் மிக்கவர்.

13 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பற்றாவான் எவ்வுயிர்க்கும் எந்தை பசுபதியே
முற்றாவெண் திங்கள் முளைசூடி வற்றாவாம்
கங்கைசேர் செஞ்சடையான் காளத்தி யுள்நின்ற
மங்கைசேர் பாகத்து மன்

12 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணந்
தங்கி இருக்கும் தகையருள்செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்பப் பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழது வாமே.
 
                       -திருமூலர்  (10-14-10)

 

பொருள்: வேள்வியை ஒழியாது வேட்கும் அந்தணர், வேத வழக்கு இவ்வுலகில் அழிந்தொழியாதவாறு காப்பவராவார். அவ்வேள்வியை எங்கும் நிகழச் செய்யுமாற்றால் அவர்க்கு மெய் வருத்தம் பெரிதாயினும், இவ்வுலகில் எங்கும் மிக்கு விளங்குமாறு அவர் நிலைநாட்டும் புகழ் அச்செயலேயாம்.

07 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருள்செய் தாடுநல் லம்பலக் கூத்தனே
அணிதில்லை நகராளீ
மருள்செய் தென்றனை வனமுலை பொன்பயப்
பிப்பது வழக்காமோ?
திரளும் நீண்மணிக் கங்கையைத் திருச்சடை
சேர்த்திஅச் செய்யாளுக்
குருவம் பாகமும் ஈந்துநல் அந்தியை
ஒண்ணுதல் வைத்தோனே.
 
                  -திருவாலியமுதனார்  (9-23-4)

 

பொருள்: அருள் செய்து பொன்னம்பலத்தில் கூத்துநிகழ்த்தும் கூத்தப்பிரானே! அழகிய தில்லை நகரை ஆள்பவனே!  அடியேனுடைய அழகிய முலைகளைப் பசலைநிறம் பாயச் செய்வது நீதியான செயலாகுமா? நீர் திரண்டு ஓடிவரும், நீண்ட மணிகளை அடித்துவரும் கங்கையைத் திருச்சடையில் வைத்துக்கொண்டு அச் செயலைப் பொறுத்துக்கொண்ட பெருங்கற்பினளாகிய பார்வதிக்கு உன்உடம்பில் ஒருபாகத்தை வழங்கி, பெரிய அழகிய தீயினை நெற்றியில் வைத்தவனே. 

06 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
வேடம் இருந்தவா றன்னே என்னும்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
வாடும் இதுஎன்னே அன்னே என்னும்.
 
                       -மாணிக்கவாசகர் (8-17-4)

 

பொருள்: ஆபரணமாகிய ஆடும் பாம்பும், உடை யாகிய புலித்தோலும், பூசப்பட்டதாகிய திருநீறும் அமைந்த ஓர் ஒப்பற்ற வேடம் இருந்தவாறு என்னே? என்று நின் மகள் சொல்வாள்; மேலும், தாயே! வேடம் இருந்த விதத்தை நோக்கி நோக்கி, என் மனம் வாடுகின்றது என்றதுமே 

05 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயுற வில்லையே.
 
                  - சுந்தரர் (7-34-1)

 

பொருள்: புலவர்களே  , சிவபிரான் , தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும் , ஆடையும் , பிறவும் தந்து புரப்பான் ; அதனால் , புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம் , இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதற்கு  , ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை ; ஆதலின் , தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து , தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி , அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும் , அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து , அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள் .

01 October 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும்
பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக்
காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
ஏலநற் கடம்பன் றந்தை யிலங்குமேற் றளிய னாரே.
 
                     -திருநாவுக்கரசர்  (4-43-2)

 

பொருள்:  திருமாலைத் தம் மேனியில் மகிழ்ந்து ஏற்றவராய் , எவர்க்கும் மூத்தவராகவும் இளைய சிறுவராகவும் வடிவு கொள்பவராய் , ஆன்மாக்களுக்குத் தலைவராய் , பால் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசுபவராய்க் கூற்றுவனைத் தம் திருவடியால் ஒறுத்தவராய், கடம்பனுடைய தந்தையாராய்க் காஞ்சி நகரத்து விளங்கும் கோயிலிலுள்ளார். 

30 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.
 
                 -திருஞானசம்பந்தர்  (1-44-1)

 

பொருள்: பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

29 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பேறினி யிதன்மேல் உண்டோ
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று
மன்னுபே ரருள்பு ரிந்தார்.

                     -கண்ணப்ப நாயனார்  புராணம் (180)

 

பொருள்: பெருமானார் திருக்கண்ணில் வந்த ஊறாய புண்ணைக் கண்டு அஞ்சி, அதற்காகத் தமது இடக்கண்ணை இடக்க எடுத்த கண்ணப்ப நாயனாரின் கையை, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய பெருமானார் தம் கையால் பிடித்துக் கொண்டு, `ஒப்பில்லாத அன்பனே! என் வலப் பக்கத்தில் என்றும் நீ நிற்பாயாக` என எக்காலமும் குன்றாத சீர்மன்னி விளங்கும் பெரிய அருள் புரிந்தார்.

28 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இடரீர் உமக்கோர் இடம்நாடிக் கொண்டு
நடவீரோ காலத்தால் நாங்கள் கடல்வாய்க்
கருப்பட்டோங் கொண்முகில்சேர் காளத்தி காண
ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து

25 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நெய்நின் றெரியும் நெடுஞ்சுட ரேசென்று
மைநின் றெரியும் வகையறி வார்கட்கு
மைநின் றவிழ்தரு மந்திர மும்என்றும்
செய்நின்ற செல்வமும் தீயது வாமே.
 
                     - திருமூலர் (10-14-5)
 
 
பொருள்: நெய்யால் எரிகின்ற பெரிய வேள்வித் தீயின் வழியே சென்று, அஞ்ஞானம் வெந்தொழியும் நெறியை அறி கின்றவர்கட்கு, அஞ்ஞானம் நீங்கும் வாயிலாகிய மந்திரமும், முயன்று பெற நிற்கின்ற முத்திப் பெருஞ் செல்வமும் வேள்வியே யாகும்.
 

24 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
தழல்மெழு கொக்கின்றதே.
 
                     -திருவாலியமுதனார்  (9-23-1)

 

பொருள்: பவளத்தால் ஆன  பெரிய மலையைப்பனிபரவி மூடினாற்போல வெண்ளொளி வீசும் திருநீற்றினைப்பூசி, பெரிய குவளைமலர்களாலாகிய முடிமாலையும் கொன்றைப் பூவும் பொருந்திய பொன்னிறமுடைய சுருண்ட அழகிய சடையை உடைய வனாய், ஒளிவீசும் மாளிகைகள் சூழ்ந்த தில்லைநகரிலே திருக்கூத்து நிகழ்த்துகின்ற வெண்ணிறம் பொருந்திய சிவபெருமானை நினைக்குந் தோறும் அடியேனுடைய உள்ளம் நெருப்பின் அருகிலிருக்கும் மெழுகுபோல உருகுகின்றது.

23 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர்இந் நாதனார் அன்னே என்னும்.
 
                        -மாணிக்கவாசகர்  (8-17-1)

 

பொருள்: வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார். 

22 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                  - சுந்தரர் (7-33-10)

 

பொருள்: அடியவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில் , திருத்தம் இல்லாதவனும் , திருநாவலூரில் தோன்றியவனும் , வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும் , கொடியவனாயினும் , தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை , நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ நம் பெருமான் 

21 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குண்டரே சமணர் புத்தர் குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள் கருத்தெண்ணா தொழிமி னீர்கள்
விண்டவர் புரங்க ளெய்து விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்க டுணையி னானைத் துருத்திநான் கண்ட வாறே.
 
                            -திருநாவுக்கரசர்  (4-42-9)

 

பொருள்: சமணரும் புத்தரும் அடையவேண்டிய குறிக்கோளை அறியாமல் தம் தம் ஆராய்ச்சியால் கண்டவற்றையே முடிந்த பொருள்களாகக் கருதுவர். அவர்கள் கருத்தை உண்மையாகக் கருதாமல் புறக்கணித்து விடுங்கள்.  மும்மதில்களையும் அம்பு எய்து அழித்துத் தேவர்களுக்கு அருளி  அடியார்களுக்குத் துணைவனாக இருக்கும் பெருமானை அடியேன் திருத் துருத்தியுள் தரிசித்து உய்ந்தேன். 

18 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வாளமர் வீர நினைந்த விராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-43-8)

 

பொருள்: மூங்கிலினது தழையைப்பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலைமலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றியவர்  ஆவர். 

16 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்
கண்ணப்ப நிற்க வென்றே.

                -கண்ணப்பநாயனார் புராணம்   (178)

 

பொருள்: செங்கண்களையுடைய விடை மீது எழுந்தருளுவோரும், திண்ணனார் தம்மை ஆண்ட அருளாளரு மாகிய இறைவராய, திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரின் திருக்கை தோன்றி, திண்ண னார் தம் கண்ணை இடந்து தோண்டும் கையைத் தடுத்து நிற்ப, பாம்பினைத் திருக்கையில் அணிந்த அப்பெருமானின், அமுதமாய வாக்கு, `கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க!` என முன்று முறை ஒலித்தது 

15 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் வந்தித்து
வால்உகுத்த வண்கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால்உகுத்த மாணிக்குப் பண்டு.

10 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே          -திருமூலர்  (10-14-1)

 

பொருள்: சோர்வில்லாத அந்தணர் அவியைச் சொரிந்து வேள்வி செய்தவழியே, மழையும், நிலமும், பல நாடுகளும், திசை காவலர் முதலிய தேவர்களும் குற்றம் அற்ற சிறப்பினைத் தரும் பொருளாவார்; அனைத்தும் வெற்றி மிகுதற்கு ஏதுவாகிய வேதமும் முதனூலாய் நிலைபெறும்; அது செய்யாதவழி அத்தன்மைகள் யாவும் இலவாம்

09 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தூவி நீரொடு பூவ வைதொழு
தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
யான் அடி மேவுவரே.
 
                     -திருவாலியமுதனார்  (9-22-11)

 

 பொருள்: நீரினால் திருமுழுக்காட்டி மலர்களைத் தூவித் தொழுது கும்பிடும் கைகளை உடையவர்களாய் மேம்பட்ட ஆவியை உள்ளே அடக்கி விரும்பச் சுரந்த அன்புடையவர்களாய்த் தேவர்கள் தாம் வணங்குமாறு திருக்கூத்து நிகழ்த்திய தில்லைக் கூத்தப்பிரானைத் திருஆலி அமுதன் சொல்லிய சொற்களை விரும்பிப் பாட வல்லவர்கள் விடையுடை சிவபெரு மானுடைய திருவடிகளை மறுமையில் அடைவார்கள்.

08 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூச லாடாமோ.
 
                         -மாணிக்கவாசகர் (8-16-9)

 

பொருள்: தென்னை மரங்கள் பரவியுள்ள சோலையையுடைய திருவுத்தர கோச மங்கையில் தங்குதல் பொருந்திய ஒளிமயமான  உருவத்தை உடைய இறைவன் வந்தருளி, எங்கள் பிறவியைத் தொலைத்து யாவரையும்  அடிமை கொள்ளும் பொருட்டு, ஒரு பாகமாகப் பொருந்திய மங்கையும் தானுமாய்த் தோன்றி, என் குற்றேவலைக் கொண்ட, மணம் தங்கிய கொன்றை மாலையணிந்த சடையை யுடையவனது குணத்தைப் புகழ்ந்து, நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் ஏறி ஆடுவோம்

07 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோணன் மாமதி சூட ரோகொடு
கொட்டி காலொர் கழலரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
யேறு வேதமு தல்வரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
கார்ப்ப ரோநல மார்தர
ஆணை யாகநம் மடிக ளோநமக்
கடிக ளாகிய வடிகளே.
 
                   -சுந்தரர் (7-33-5)

 

பொருள்:  நமக்குத் தலைவராய் உள்ளவர் , வளைந்த  பிறையைத் தலையிற் சூடுதல் உடையவரோ,  கொடுகொட்டி   என்னும் கூத்தினை ஆடுபவரோ,   காலில் ஒரு கழலை அணிவரோ, அவரது இசைக் கருவி வீணைதானோ,   அவர் ஏறுவது விடையோ,  அவர் வேதத்திற்குத் தலைவரோ,   அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ ? சொல்லுங்கள். 

04 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சவைதனைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல விறைவனை யேத்து மின்னோ
அவைபுர மூன்று மெய்து மடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே.
 
                         -திருநாவுக்கரசர்  (4-42-2)

 

பொருள்: குடும்பத்தைப் பெருக்கி உயிர் வாழ்தலுக்கான வஞ்சனையிலே அழுந்திச் செய்யும் உங்களுடைய இச்செயல்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க நற்பயன் தருவன அல்ல என்றறிந்து எம் பெருமானையே துதியுங்கள் . மும்மதில்களையும் அம்பு எய்து அழித்து அடியார்களுக்கு அருள் செய்த சுவைப் பொருளாக உள்ள துருத்திப் பெருமானை அடியவனாகிய யான் தரிசித்து இன்பம் கண்டேன் 

03 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனன் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
 
                           -திருஞானசம்பந்தர்  (1-43-1)

 

பொருள்: திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத் துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்பதுன்பங்களைக் கடந்தவர்.

02 September 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.
 
                     -கண்ணப்பநாயனார் புரணாம்  (176)

 

பொருள்: இதைக் கண்டதும்,அந்தோ! நான் கெட்டேன்! எங்கள் காளத்தியார் தம் கண்களில் ஒன்றான வலத் திருக்கண்ணில் குருதி வருதல் நின்றிட, மற்றைக்கண்ணாய இடக் கண்ணில் குருதி பொங்குகின்றதே! என்று எண்ணியவராய், இதற்கு யான் அஞ்ச மாட்டேன், மருந்து கையில் இருக்கக் கண்டேன், இன்னும் என்னி டத்தில் ஒரு கண் உண்டு, அக்கண்ணை நான் அம்பால் இடந்து எம் பெருமானுடைய கண்ணில் அப்பி, அக்கண்ணிலிருந்து வரும் குருதி யையும் ஒழிப்பேன் என்றார்.

 

31 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மகிழ்ந்தலரும் வண்கொன்றை மேலே மனமாய்
நெகிழ்ந்து நெகிழ்ந்துள்ளே நெக்குத் திகழ்ந்திலங்கும்
விண்ணுறங்கா வோங்கும் வியன்கயிலை மேயாய்என்
பெண்ணுறங்காள் என்செய்கேன் பேசு.

28 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அறுத்தன ஆறினும் ஆனின மேவி
இறுத்தனர் ஐவரும் எண்ணிலி துன்பம்
ஒறுத்தன வல்வினை ஒன்றல்ல வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டிநின் றேனே.  - திருமூலர் 
 
 பொருள்: ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர்காறும் செல்ல வரையறுக்கப்பட்ட எழுவகைப் பிறவிகளிலும் உள்ள உயிர்களாகிய பசுக்கூட்டத்தில் ஐம்புல வேடர் புகுந்து தங்கினர். அவர்களால் அப்பசுக்களை அளவற்ற துன்பங்கள் வருத்தின. இவற்றிற்குக் காரணமான வினைகளோ ஒன்றல்ல நான் யாதோருடம்போடும் கூடி வாழ விரும்பாமல், சிவபெருமான் ஒருவனையே விரும்பி நிற்கின்றேன்.

27 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
முந்தடம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
யார்தில்லை யம்பலவன்
புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
தேத்த ஆடுபொற் கூத்தனார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
யுள்ளிடங் கொண்டனவே.
 
                    -திருவாலியமுதனார்  (9-22-2)

 

பொருள்: நீரின் மேல்  தாமரைக் கொடிகள் வளர்ந்த குளங்களை உடையதாய், அந்த மிக்க நீரின்கண் உள்ள பூக்களைச் சேர்ந்து அவற்றைக் வண்டுகள் ஒலிக்கப்பெறுவதாய், அழகுநிறைந்த தில்லைப்பதியிலுள்ள பொன்னம்பலத்தில் உள்ளவனாய், முறையிட்டுத் தேவரும் அசுரரும் தன்னைப் புகழ்ந்து துதிக்கக் கூத்து நிகழ்த்தும் பொன்போலச் சிறந்த கூத்தப்பிரானுடைய திருவடிகளில் ஒலிக்கின்ற கிண்கிணிகள் அடியே னுடைய சிந்தையுள் கொண்டன ஆகும் .

26 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூச லாடாமோ.
 
                          -மாணிக்கவாசகர் (8-16-4)

 

பொருள்:  நஞ்சுடைய கண்டத்தை யுடையவனும், தேவலோகத்தவர்க்குத் தலைவனும், மேகங்கள் படிகின்ற மேல் மாடங்களையுடைய அழகிய திருவுத்தர கோச மங்கை யில் இனிய மொழியையுடைய உமாதேவியோடு கூடியவனும் அடி யாரது மனத்துள்ளே நிலைத்து நின்று அமுதம் சுரப்பவனும் இறப்புப் பிறப்புகளைத் தவிர்ப்பவனுமாகிய தூய்மையானவனின் புகழினைப் பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

25 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாறு தாங்கிய காட ரோபடு
தலைய ரோமலைப் பாவையோர்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
காத ரோகுறுங் கோட்டிள
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
பொடிய ரோஇலங் கும்பிறை
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
கடிக ளாகிய அடிகளே.
 
                      -சுந்தரர்  (7-33-1)

 

பொருள்: நம்  தலைவர் பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ ? அழிந்த தலையை ஏந்தியவரோ ? மலைமகளது ஒருபாகத்தைச் சுமக்கும் அழகரோ ? குழையணிந்த காதினை உடையவரோ ? சிறிய கொம்பினையுடைய இளமையான இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ ? சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ ? விளங்குகின்ற பிறையோடு ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ ?  சொல்வீராக 

24 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மற்றுநீர் மனம்வை யாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றதோ ருபாயந் தன்னாற் பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக் கயிலாய மலையெ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார் திருச்சோற்றுத் துறைய னாரே.
 
                          -திருநாவுக்கரசர்  (4-41-10)

 

பொருள்: மறுமையில் பிறப்பு ஏற்படாத வகையில் மறுமை என்பதனையே அடியோடு நீங்கள் போக்க விரும்பினால் , மற்றைப் பொருள்களிடத்தில் மனத்தை நிலையாக வைக்காமல் , பல நூல் களையும் கற்ற செருக்கோடு அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்கமுற்பட முதற்கண் அவனை ஒறுத்துப் பின் அவனுக்கு அருள்கள் செய்த திருச்சோற்றுத் துறையனை , அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டுப் பெற்ற முத்தி உபாயங்களால் பலகாலும் அடைவுகெடத் துதித்துப் பேசுங்கள் .

20 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானு முணர்வரி யானுமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின் முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங் காமர்பெ ருந்துறை யாரே.
 
                                  -திருஞானசம்பந்தர் (1-42-9)

 

பொருள்:  தாமரை மலர் முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங்கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர்.

18 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இதற்கினி என்கண் அம்பால்
இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்
நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு
மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி
முதல்வர்தங் கண்ணில் அப்ப.

                   -கண்ணப்ப நாயனார் புரணாம்  (173)

 

பொருள்: இதற்கு இனி, எனது கண்ணை அம்பால் இடந்து எம்பிரானின் புண்ணுடைய கண்ணில் அப்பினால், அக்கண்ணிற்கு எனது இக்கண் மருந்தாகிக் குருதி நிற்கவும் கூடும் என்று உள்ளத்து எழுந்த அந்நினைவால், பெருமிதம் கொண்டு, மகிழ்ந்து, திண்ணனார் ஓர் அம்பினை எடுத்துத் தம் கண்ணினை இடந்து, கையிடத்துக் கொண்டு, தம் முதல்வராய காளத்தியப்பரின் கண்மீது அப்பிடலும்.

14 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே
வம்பார் மலர்தூய் வணங்காதே நம்பா நின்
சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்
காலங்கள் போன கழிந்து.

07 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.
 
                               -திருமூலர்  (10-13-1)

 

பொருள்: உடுத்திருக்கும் ஆடை கிழிந்த ஆடையாய் இருந்ததென்றால், அவரது வாழ்க்கையும் கிழிந்தொழிந் ததேயாம். ஏனெனில், தம்மால் தமக்குத் துணையெனத் தெளியப்பட்ட வரும் தம்மாட்டு அன்பிலாராகின்றனர். எவரோடும் கொடுத்தல் கொள்ளல்கள் இல்லை; இல்லத்தில் யாதொரு கொண்டாட்டம்  இல்லை, பிற உலக நடையும் இல்லாமல் இயங்குகின்றனர்.

03 August 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாவார்ந்த தமிழ்மாலை பத்தரடித்
தொண்டன்எடுத்
தோவாதே அழைக்கின்றான் என்றருளின்
நன்றுமிகத்
தேவே தென் திருத்தில்லைக் கூத்தாடீ
நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல் இனியுனக்குத்
தடுப்பரிதே.
 
                    -வேணாட்டடிகள்  (9-21-10)

 

பொருள்: தொண்டனுக்கு தொண்டன்  பாட்டு வடிவமாக அமைந்த தமிழ்மாலையை எடுத்துக் கூறி விடாமல் அழைத்துக் கொண்டிருக்கிறான் என்பதனைத் திருவுளம்பற்றி இப்பொழுதே அருள்செய்தால் மிக நல்லது. நாய் போன்ற இழிந்த அடியவனாகிய நான் சாகின்ற நேரத்திலாவது உன்னைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டுவதனை இனி உன்னாலும் தடுத்தல் இயலாது என் தேவனே! அழகிய புனிதத் தலமாகிய தில்லையில் திருக்கூத்து நிகழ்த்துபவனே!

31 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்
கூராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூச லாடாமோ.
 
                      -மாணிக்கவாசகர் (8-16-1)

 

பொருள்: பவளம் கால்களாகவும், முத்து வடம் கயிறு ஆகவும் உடைய, அழகுகான  பொன்னாலாகிய ஊஞ்சல் பலகையில் ஏறி இனிமையாய் இருந்து, திருமால் அறியாத அன்றலர்ந்த தாமரை போலும் திருவடியை நாய் போன்ற அடியேனுக்கு உறைவிடமாக தந்தருளிய திருவுத்தர கோச மங்கையில் எழுந்தருளியிருக்கிற தெவிட்டாத அமுதம் போன்ற வனது அருளாகிய இரண்டு திருவடியைப் புகழ்ந்து பாடி நாம் பொன்னாலாகிய ஊஞ்சலில் இருந்து ஆடுவோம்.

30 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.
 
                    -சுந்தரர் (7-32-10)

 

பொருள்: உலகில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தெற்கு திசையில்  , அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக்கண் உள்ள அழகனை நம்பியாரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர் , சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களேயாவர் .

29 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி யெல்லிநின் றாடு வானை
அட்டகா மலர்கள் கொண்டே யானஞ்சு மாட்ட வாடிச்
சிட்டரா யருள்கள் செய்வார் திருச்சோற்றுத் துறைய னாரே.
 
                              -திருநாவுக்கரசர்  (4-41-2)

 

பொருள்: பந்தம் உடையோராய் காலத்தைக் கழித்தல் கூடாது . தம் எண் கைகளையும் வீசியவராய் இரவில் ஆடுபவராய் உள்ளார் சோற்றுத் துறையரனார் . சோலைகளிலிருந்து கிட்டும் எட்டுப்பூக்களையும் நீங்கள் அர்ப்பணித்துப் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகிக்க அவ்வபிடேகத்தை ஏற்று சிட்டராய் உள்ள அப்பெருமான் உங்களுக்கு அருள்கள் செய்வார்

 

28 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.
 
                                -திருஞானசம்பந்தர்  (1-42-2)

 

பொருள்: அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவர் குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார் ஆவார். 

27 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.
 
                 -கண்ணப்பநாயனார் புரணாம்  (165)

 

பொருள்: வந்தவர் இரத்தம் வருதலைக் கண்டார், மயங்கி னார்; வாயில் கொண்ட நல்ல மஞ்சன நீர் சிந்திடவும், கைகளில் இருந்த வில்லும் இறைச்சியும் சிதறி விழவும், கொத்தாக மலர்ந்த பூசனைக் குரிய மலர்கள் கொண்டையினின்றும் விழவும், பசிய தழை களாலாய மாலை சூடிய மார்புடைய திண்ணனார் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்

23 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும்
சிறப்புடை ரானாலும் சீசீ இறப்பில்
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார்
அடியாரைப் பேணாதவர்

                    - நக்கீரதேவ நாயனார் (11-9-10)

22 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கத்
தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.
 
                      -திருமூலர்  (10-12-6)

 

 பொருள்: உயிர்களை  கொல்லுதல், பொருளைக் களவு செய்தல், கள்ளுண்டல், நெறிநீங்கிய காமத்து அழுந்தல், பொய் கூறல் என்னும் இவை ஐந்தும்,  மாபாதகம் எனப்படும். ஆகவே, அவைகளை அறவே நீக்காதவழி மேற்கதி உண்டாகாது. சிவனடியை அடைந்து அவனது இன்பத்தைப் பெற்றவர்க்கு இவை உண்டாக வழியில்லை. அவனது அருள் இன்பத்தில் ஆழ்ந்திருத்தல் ஒன்றே அவர்க்கு உளதாம்.

21 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறைகுளம்என்
றதுபோலத்
திசைநோக்கிப் பேழ்கணித்துச் சிவபெருமான்
ஓஎனினும்
இசையானால் என்திறத்தும் எனையுடையாள்
உரையாடாள்
நசையானேன் றிருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.

                    - வேன்னாடு அடிகள் (9-21-3)

 

பொருள்: குளத்தின் அருகிலே பள்ளத்தில் உள்ள சிறுமரத்துக்கு அக்குளத்தின் நீர் கசிந்து பாயாதோ என்று சொல்லப்படும் பழ மொழிக்கு ஏற்ப அவன் வரும் திசைகளைப் பார்த்து மனம் வருந்திச் `சிவபெருமானே! அடியேனுக்கு அருள் செய்ய வாரா திருத்தல் முறையோ!` என்று முறையிட்டாலும், அந்த எம்பெருமான் என்பக்கம் வர உள்ளம் கொள்வானல்லன். அடியேனை அடிமையாக உடைய உமாதேவியும் எம்பெருமானை அடியேன் கண்முன் வருமாறு பரிந்துரை கூறுகின்றாள் அல்லள். திருத்தில்லையில் நடம்பயிலும் நம்பான், அவனைக்காண ஆசைப்படும் அடியேன் என்ன  செய்வேன்?

17 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உரைமாண்ட உள்ளொளி
உத்தமன்வந் துளம்புகலும்
கரைமாண்ட காமப்
பெருங்கடலைக் கடத்தலுமே
இரைமாண்ட இந்திரியப்
பறவை இரிந்தோடத்
துரைமாண்ட வாபாடித்
தோணோக்க மாடாமோ.
 
                      -மாணிக்கவாசகர்  (8-15-14)

 

பொருள்: சொற்கள் தம் ஆற்றல் அடங்குதற்குக் காரணமான உள்ளொளியாகிய உத்தமனாகிய சிவபெருமான் எழுந்தருளி வந்து என் மனத்தில் புகுதலும் கரையற்ற ஆசையாகிய பெரிய கடலைத் தாண்டுதலும் தமக்கு உணவு அற்ற இந்திரியங்களாகிய பறவைகள் அஞ்சி ஓட, நமது தன் முனைப்புக் கெட்ட விதத்தைப் பாடி தோணோக்கம் ஆடுவோம்.

16 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
 
                              -சுந்தரர்  (7-32-5)

 

பொருள்: மை பொருந்திய கண்களையுடைய இறைவியின் பாகத்தை உடையவனே , கங்கை என்பவளும் உனது திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறிடம் இல்லை ; இங்ஙனமாக , கையில் நிறைந்த வளைகளையுடைய காடுகாளோடும் கூடி , பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளையுடைய கோடிக் கரையையே உறைவிடமாகக் கொண்டது  என்னே 

15 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மலையலா லிருக்கை யில்லை மதித்திடா வரக்கன் றன்னைத்
தலையலா னெரித்த தில்லை தடவரைக் கீழ டர்த்து
நிலையிலார் புரங்கள் வேவ நெருப்பலால் விரித்த தில்லை
அலையினார் பொன்னி மன்னு மையனை யாற னார்க்கே.
 
                -திருநாவுக்கரசர்  (4-40-10)

 

பொருள்:  கயிலை மலையைத் தவிர வேறு சிறப்பான இருப்பிடம் இல்லாதவரும்  தம்மை மதியாது கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலையைத் தவிர வேற்றவருடைய தலையை அவர் மலைக்கீழ் வருத்தி நெரித்தலை அறியாதவர் அவர் . நிலைபேறில்லாத அசுரர்களின் மும்மதில்களும் அழிய நெருப்பைப் பரப்பியதனைத் தவிர அவர் வேற்றுச் செயல் எதுவும் செய்யாதவர் அலைகளை உடைய காவிரி நிலையாக ஓடும் ஐயாற்றில் வாழ் பெருமான்  ஆவர். 

14 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை 

பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புரநன்னக ராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி
நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே.
 
                                            - திருஞானசம்பந்தர்  (1-41-11)

 

பொருள்: பாரில   புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப்பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்

13 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்றிரவு கனவின்கண்
அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி
வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று
மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.

                   -கண்ணப்பதேவநாயனார்  (156)

 

பொருள்: அன்று இரவு, அரிய அம்முனிவரிடத்து, திகழும் சடைமுடியையுடைய இறைவன் கனவில் எழுந்தருளி, வலிமை பொருந்திய வேடுவன் இது செய்தவன் என அவனை நீ எண்ணாதே! நலம் மிக்க அவன் தன் செயலை நான் கூறக் கேட்பாயாக என மொழிந்தருளிப் பின்னரும்.

09 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.
 
               - நக்கீரதேவனயனர் (11-9-1)

 

பொருள:  சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் திருவிளக்கேற்றும் பணி சிறப்புடைத்து. எனினும் புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலிலும் அகஇருளை நீக்கும் இவ்விளக்கை ஏற்றியது மிகச் சிறந்த பணியாதலையறிக.

08 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
 
                      - திருமந்திரம் (10-12-1)

 

பொருள்: கண்ணைக் கவர்கின்ற எட்டிமரம், பின் பழம் பழுத்து அதனால் மேலும் கருத்தைக் கவரு மாயினும், குலைமாத்திரத்தால் நல்லனவாய்த் தோன்றுகின்ற அதன் கனிகளைப் பறித்துண்டல் மக்கட்குத் தீங்குபயப்பதாம். அதேபோல்  உறுப்பழகுகளால் கண்ணைக் கவர்கின்ற பொது மகளிர், பின் பொய்ந் நகை காட்டி, அன்புடையராய்த் தோன்று கின்ற அவரது இன்பத்தினை நுகர்தல், அறம் பொருள்களை விரும்பி நிற்கும் நன்மக்கட்குக் கேடுபயப்பதாகும். ஆதலின், அவ்வாறு நன் னெறியை விட்டு விலகிச் செல்கின்ற மனத்தைத் தீங்கு தேடுவதாக அறிந்து அடக்குவீராக.

07 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே
ஆள் உகப்பார்
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங்
கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும்
எனதுபணி
நச்சாய்காண் திருத்தில்லை நடம்பயிலும்
நம்பானே.
 
                    -வேன்னாடடிகள்  (9-21-1)

 

பொருள்:தில்லையில் திருக்கூத்து நிகழ்த்தும் எம் பெருமானே! அடிமைகளை விரும்புபவர்கள், அவ்வடிமைகள் இழிவான செயல்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொள்வர். கசப்புச் சுவையை உடையவாயிருப்பினும் வாழைக்கச்சல் களையும், வேப்பங்கொழுந்தினையும் கறி சமைத்தற்குப் பயன்படுத்து வார்கள். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு எந்தப்பற்றுக்கோடும் இல்லை என்பதனை நீ அறிந்தும் என்னுடைய தொண்டினை விரும்பா திருப்பதன் காரணம் புலப்படவில்லை.

03 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிலம்நீர் நெருப்புயிர்
நீள்விசும்பு நிலாப்பகலோன்
புலனாய மைந்தனோ
டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்
உலகே ழெனத்திசை
பத்தெனத்தான் ஒருவனுமே
பலவாகி நின்றவா
தோணோக்க மாடாமோ.
 
                        -மாணிக்கவாசகர்  (8-15-5)

 

பொருள்:  நிலம், நீர்,  தீயும், வாயுவும், பெரிய ஆகாயமும், சந்திரனும் சூரியனும், அறிவுருவாய ஆன்மாவும் என்னும் எட்டு வகைப் பொருள்களாய் அவற்றோடு கலந்து இருப்பவனாய் ஏழுலகங்களும் திக்குகள் பத்து ஆனாலும்  ஒன்றான  இறைவனை  , பல பொருள்களாக நின்ற வகையைப் பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்

02 July 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.
 
                 -சுந்தரர்  (7-32-1)

 

 பொருள் கடற்காற்றுக் கடுமையை  வந்து வீச , இக் கடற்கரையின்மேல் , உமக்கு , யார் துணையாய் இருக்க இருக்கின்றீர் ? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன ; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ கோடிக்குழகரே !!!!

01 July 2015

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

ஆலலா லிருக்கை யில்லை யருந்தவ முனிவர்க் கன்று
நூலலா னொடிவ தில்லை நுண்பொரு ளாய்ந்து கொண்டு
மாலுநான் முகனுங் கூடி மலரடி வணங்க வேலை
ஆலலா லமுத மில்லை யையனை யாற னார்க்கே.
 
                        -திருநாவுக்கரசர்  (4-40-2)

 

பொருள்:  கல்லால மரத்தைத் தவிர வேற்றிடம் எம்பிரானுக்கு  அமைவதில்லை .  தவத்தையுடைய   முனிவர்களுக்கு அப்பிரானார் நுண்பொருளாய்வு செய்து வேதாகமப் பொருள்களைத் தவிர வேற்றுப் பொருள்களை உபதேசிப்பதில்லை . திருமாலும் பிரமனும் கூடித் தம் மலர்போன்ற திருவடிகளை வணங்க அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கித் தாம் உட்கொண்ட கடல் விடத்தைத் தவிர உணவு வேறு இல்லை  எம்பிரான் ஐயன் ஐயாறனார்க்குக்

30 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர்
காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே.
 
                                -திருஞானசம்பந்தர்  (1-41-1)

 

பொருள்: ஒப்பற்ற  அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர் நெற்றிக்கண் உடையவர்  விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் ஆவார்.  

29 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது
தித்திக்கும் எனமொழிந்தார்.
 
                   -கண்ணப்ப நாயனார் புராணம்  (150)

 

பொருள்:  மாமிச அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.

26 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.

பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.

                        -சேரமான் பெருமாள் நாயனார்  (11-8-197)

25 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பொருள்கொண்ட கண்டனும் போதத்தை யாளும்
இருள்கொண்ட மின்வெளி கொண்டுநின் றோரும்
மருள்கொண்ட மாதர் மயலுறு வார்கள்
மருள்கொண்ட சிந்தையை மாற்றகில் லாரே.
 
                        -திருமூலர்  (10-11-3)

 

பொருள்: செல்வத்தால்  ஆழும் கீழ்மகனும், அறிவை மறைக்கின்ற அறியாமையாகிய இருளில் புல்லறிவாகிய மின்னல் ஒளியைப் பெற்று நிற்பவரும் ஒழுக்கம் இல்லாத பெண்டிரது மயக்கத்தில் வீழ்தலல்லது, அம்மயக்கத்தை உடைய மனத்தைத் தேற்றி நன்னெறிப்படுத்த மாட்டுவாரல்லர்.

24 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரால்மல்கு தில்லைச் செம்பொன்
அம்பலத் தாடிதன்னைக்
காரார் சோலைக் கோழி வேந்தன்
தஞ்சையர் கோன்கலந்த
ஆராஇன்சொற் கண்டரா தித்தன்
அருந்தமிழ் மாலைவல்லார்
பேரா உலகில் பெருமை யோடும்
பேரின்பம் எய்துவரே.
 
                   -கண்டிராதித்தார்  (9-20-10)
 
பொருள்: சிறப்பான் மேம்பட்ட தில்லைநகரில் உள்ள செம் பொன் அம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் சிவபெருமானைப்பற்றி மேகங்கள் பொருந்திய சோலைகளை உடைய உறையூர் மன்னனும், தஞ்சைமாநகரில் உள்ள அரசனும் ஆகிய கண்டராதித்தன் திருவருளோடு கலந்து தெவிட்டாத இனிய சொற்களால் பாடிய அரிய தமிழ்ப் பாமாலையைப் பொருளுணர்ந்து கற்றுப் பாட வல்லவர்கள், ஒருமுறை சென்றால் மீண்டும் அவ்விடத்தினின்றும் திரும்பி நில உலகிற்குப் பிறப்பெடுக்க வாராத வீட்டுலகில் பெருமையோடு பேரானந்தத்தை அடைவார்கள்.

23 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூத்தாரும் பொய்கைப்
புனலிதுவே எனக்கருதிப்
பேய்த்தேர் முகக்குறும்
பேதைகுண மாகாமே
தீர்த்தாய் திகழ்தில்லை
அம்பலத்தே திருநடஞ்செய்
கூத்தா உன் சேவடி
கூடும்வண்ணம் தோணோக்கம்.
 
                  -மாணிக்கவாசகர்  (8-15-1)

 

 பொருள்: மலர்கள் பூத்து இருக்கின்ற தடாகநீர் இதுதான் என்று எண்ணிக் கானலை முகக்கின்ற அறிவிலியினது குணம், எங்களுக்கு உண்டாகாமல் நீக்கினவனே! தில்லை அம்பலத்தில் நடனம் செய்கின்ற கூத்தனே! உனது செம்மையான திருவடியை அடையும்படிஎன்று பாடி நாம் தோணோக்கம் ஆடுவோம்.

22 June 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஊறு வாயினன் நாடிய வன்றொண்ட னூரன்
தேறு வார்சிந்தை தேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறு வாரெய்த மானிடை யாறிடை மருதைக்
கூறு வார்வினை எவ்விட மெய் குளிர்வாரே.
 
                            - சுந்தரர் (7-31-10)

 

பொருள்: வெள்ளி விடையை ஏறுகின்றவரும் , யாவராலும் அடையப்படும் பெருமானுமாய் உள்ள இறைவரது இடையாற்றையும் , இடைமருதையும் , வன்றொண்டனாகிய நம்பியாரூரன் சுவை ஊறும் வாயினையுடையவனாய் , தெளியத் தகுவாரது உள்ளங்கள் தெளிதற்கு வாயிலாய் உள்ள தலங்களோடு நினைந்து பாடிய இப்பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினைத் துன்பங்கள்  நீங்கும் , மெய்  குளிர்வார்கள் .