31 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                 - மாணிக்கவாசகர் (8-8-5)

 

 பொருள்: கல்லாது நாயை போன்று  கடையாகிய என்னையும் ஒரு பொருளாய் மதித்து ஆட்கொண்டு, கல்லை நிகர்த்த என் மனத்தைக் குழைத்துத் தன் கருணைக் கடலில் அழுந்தும் படிசெய்து என் வினையை ஒழித்தருளிய நம் தில்லைச் சிற்றம்பலவனைப் புகழ்ந்து பாடுவோம்.

30 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாதனுக் கூர்நமக் கூர்நர
சிங்க முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும்
ஊர்அணி நாவலூர்என்
றோதநற் றக்கவன் றொண்டன்ஆ
ரூரன் உரைத்ததமிழ்
காதலித் துங்கற்றுங் கேட்பவர்
தம்வினை கட்டறுமே.
 
                - சுந்தரர் (7-17-11)

 

பொருள்:  சிவபெருமானுக்குரிய ஊரும் , நமக்கு உரிய ஊரும் , நரசிங்கமுனையரையன் அப்பெருமானுக்கு , விரும்பித் தொண்டு செய்யும் ஊரும் அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு , நல்ல தகுதியை உடையவனும் , ` வன்றொண்டன் ` என்னும் பெயரைப் பெற்றவனுமாகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப்பாடலை விரும்பியும் , கற்றும் கேட்பவரது வினைகள் வலியற்று ஒழியும்

26 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மதியிலா வரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி
நெதியன்றோ ணெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.
 
                - திருநாவுக்கரசர் (4-22-11)

 

பொருள்: மதியில்லா  இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலை மலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.

24 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா விருப்பரே.
 
               - திருஞானசம்பந்தர் (1-24-11)

 

பொருள்: நீர்வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், தேவர்கள்  வானகத்தில் இனிதாக இருப்பர்.

23 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.
 
                           - அமர்நீதி நாயனார் புராணம் (16)

 

பொருள்: அந்தணராக  வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.

20 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்
 
                        - காரைகாலம்மையார் (11-4-81)

 

 

பொருள்: செஞ்சடையுடைய சிவபெருமான் சேவடிக்கு ஆளாய் திருமறை, சாத்திரங்கள் ஓதினோம் . இனி வேறு உரைகள் பற்றியாம் உணர்வது  யாதுமில்லை. அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, புறச் சமயத்தீர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்.

19 December 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.
 
                - திருமூலர் (10-1-55)

 

பொருள்: சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

18 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்பனி யரும்பக் கைகள் மொட்டித்தென்
களைகணே ஓலமென் றோலிட்
டென்பெலா முருகும் அன்பர்தங் கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பிற்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                    - கருவூர்த்தேவர் (9-8-5)

 

 பொருள்: கண்களில்  கண்ணீர் அரும்ப , கைகள் குவித்து, `எனக்குப் பற்றுக் கோடு ஆனவனே! ஓலம்` என்று கதறி எலும்புக ளெல்லாம் அன்பினால் உருகும் அடியார்களுடைய கூட்டத்தில் அடி யேனையும் இணைத்துக் கொள்ளும் சிவபெருமானுடைய கோயில், தேன் உண்டு என்பதனைத் தெளிந்த வண்டுகள் பலபல பண்களைப் பாடிக் கொண்டு ஆடக் குளிர்ந்த மலர்களைப் பரப்பிய மேலிடத்தில் அரும்பும் சண்பகம் நிறைந்த சோலைகளை உடைய பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருவளர் திருச்சிற்றம்பலமே யாகும்.

17 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான்
பந்தம் பறியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                    - மாணிக்கவாசகர் (8-8-3)

 

பொருள்: இந்திரன் மால், அயன் முதலான தேவர்களும் முனிவர் முதலானோரும் விண்ணிலே நிற்க, எங்களை ஆட்கொள்ளும் பொருட்டுப் பூவுலகில் எழுந்தருளி, எங்கள் மனத்தை உருகச் செய்த திருப்பெருந்துறையான், எமக்கு அருள் செய்த முடிவற்ற இன்பத்தைப் புகழ்ந்து பாடுவோம்.

16 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உம்பரார் கோனைத்திண் தோள்முரித்
தார்உரித் தார்களிற்றைச்
செம்பொனார் தீவண்ணர் தூவண்ண
நீற்றர்ஓர் ஆவணத்தால்
எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நம்பிரா னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
                      - சுந்தரர் (7-17-5)

 

பொருள்: தேவர்கட்கு எல்லாம் அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும் , யானையை உரித்தவரும் , சிவந்த பொன்போல்வதும் , நெருப்புப்போல்வதும் ஆகிய நிறத்தை உடையவரும் , வெள்ளிய நிறத்தையுடைய நீற்றை அணிந்தவரும் என்போலும் அடியவர்கட்குத் தலைவரும் , ஓர் ஆவணத்தினால் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டுபோய் நிறுத்தி அடிமையும் கொண்ட , நம் அனைவர்க்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாயிருப்பது ,  திருநாவலூரேயாகும் .

13 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

விருத்தனாய்ப் பால னாகி விரிநிலா வெறிக்குஞ் சென்னி
நிருத்தனார் நிருத்தஞ் செய்ய நீண்டபுன் சடைக டாழக்
கருத்தனார் தில்லை தன்னுட் கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோ டனலெரி யாடு மாறே.
 
                          - திருநாவுக்கரசர் (4-22-9)

 

பொருள்: வயதில்  மூத்தவராகவும், இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற சிற்றம் பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.

12 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன வின்ப மாடும் மடிகளே.
 
                      - திருஞானசம்பந்தர் (1-24-3)

 

பொருள்: இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப்பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.

11 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.
 
                     - அமர்நீதி நாயனார் புராணம் (14)

 

பொருள்:  கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.
 
 

10 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்

                      - காரைக்கால் அம்மையார் (11-4-85)

06 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
 
                     - திருமூலர் (10-1-52)

 

பொருள்: எல்லா  தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என நல்கினான் 

05 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
அஞ்சலென் றருள் செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
                                 - (9-8-2)

 

 பொருள்: கடபதற்கு  அரிய இந்தக் பிறவியாகிய கடலில் கரை காண்பதற்காக நீந்தும் அடியவனாகிய எனக்கு ஐம்பொறிகளும் பகையாக உள்ளன. அந்நிலையில் எனக்குத் துணை யாவர் என்று வருந்தினனால், `யானே துணையாவேன். ஆதலின் அஞ்சாதே` என்று அருள் செய்கின்ற சிவபெருமானுடைய கோயில், பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில் தளிர்த்த செந்நெற் பயிர்களிடையே களையாக வளர்ந்ததனால், உழத்தியர்கள் களை யாகப் பிடுங்கிய நீலமலர்க்கொடிகளே வயலின் வரப்புக்களில் காணப் படும் பெரும்பற்றப் புலியூரில் உள்ள இறைவனுடைய அருட்செல்வம் வளர்கின்ற திருச்சிற்றம்பலமே யாகும்.

04 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.
 
                               - மாணிக்கவாசகர் (8-8-1)

 

பொருள்: மாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்.

03 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தன்மையி னால்அடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
                    - சுந்தரர் (7-17-2)

 

பொருள்:  என் பிழையைத் திருவுளங்கொள்ளாது , அடிமை என்பது ஒன்றையே கருதி , என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந் நாளின்கண் பலர் கூடியிருந்த சபை முன்பு தம்மைஎன் பேதைமையால் வசைச் சொற்கள் பல சொல்லவும் அவற்றை இசைச் சொற்களாகவே மகிழ்ந்தேற்று எனக்கு , ` வன்றொண்டன் ` என்பதொரு பதவியைத் தந்தவரும் , பின்னரும் நான் கெழுதகைமையை அளவின்றிக்கொண்டு பல வசைப் பாடல்களைப் பாட அவற்றிற்கும் மகிழ்ந்து , எனக்கு வேண்டுமளவும் பொன்னைக் கொடுத்துப் போகத்தையும் இடையூறின்றி எய்துவித்த நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் இருப்பது , நமது திருநாவலூரேயாகும்

02 December 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பையர வசைத்த வல்குற் பனிநிலா வெறிக்குஞ் சென்னி
மையரிக் கண்ணி யாளும் மாலுமோர் பாக மாகிச்
செய்யரி தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
கையெரி வீசி நின்று கனலெரி யாடு மாறே.
 
                              - திருநாவுக்கரசர் (4-22-4)

 

பொருள்: பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய கங்கையை  உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துமாற்றைக் காணலாம்.

29 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்ட மாடும் மடிகளே.
 
            - திருஞானசம்பந்தர் (1-24-1)

 

பொருள்: அந்திக் (மாலை) காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட்புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

28 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வடிவு காண்டலும் மனத்தினும் முகம்மிக மலர்ந்து
கடிது வந்தெதிர் வணங்கிஇம் மடத்தினிற் காணும்
படியி லாதநீ ரணையமுன் பயில்தவ மென்னோ
அடிய னேன்செய்த தென்றனர் அமர்நீதி யன்பர்.
 
                         -அமர்நீதி நாயனார் புராணம் (10)

 

 பொருள்: தம்பால் அடைந்த அடியவர் திரு வடிவைக் கண்ட அளவில், மனத்தினும் முகத்தில் மிகு மலர்ச்சி அடைந்து, விரைய வந்து வணங்கி, இத்திருமடத்தில் இதற்கு முன்பு ஒரு நாளும் வாராத நீர் இன்று எழுந்தருளப் பெற்றதற்கு அடியேன் முன்செய்ததவம் என அமர்நீதியார் கூறினார்

27 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

              - காரைகாலம்மையார் (11-4-81)

பொருள்: அழகு மதில் உடைய  முப்புரம் அவிந்து அழிய அம்பு எய்திய சிவபெருமான் திருவடியாகிய தாமரை மலர்கள் சார்ந்தமையால், காலனையும், நரகங்களையும், இரு வினைகளையும் நீங்கபெற்றோம். 

26 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

                  - திருமூலர் (10-1-50)



பொருள்: சிவன், சதாசிவன், மகேசுரன் என்று  மூன்றாகவும், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்று  ஐந்தாகவும் சொல்லப்படுகின்றார் . சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன் என்று  ஒன்பதாகவும்  சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

25 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும் பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
 
             - திருமாளிகைத்தேவர் (9-8-1)

 

பொருள்: கட்டாக  விரிந்த தலைகளையும் அத்தலைகளின் மேல்  சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

22 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
 
                         - மாணிக்கவாசகர் (8-7-20)

 

பொருள்: எல்லா பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர் களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். மாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடி களுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.

21 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோவலன் நான்முகன் வானவர்
கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு
வித்தவர் ஓரம்பினால்
ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்
வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
 
              - சுந்தரர் (7-17-1)

 

பொருள்: ஓர் அம்பினாலே பகைவரது திரிபுரத்தில் எரித்தவரும் ,   என்னைத் திருவெண்ணெய்நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமையுங்கொண்ட வழக்கு வல்லவரும் ஆகிய இறைவருக்கு ,  திருமால் , பிரமன் , இந்திரன்  என்னும் இவரும் வந்து சிறிய பணி விடைகளைச் செய்யுமாறு இடமாய் இருப்பது திருநாவலூரே யாகும் .
 

20 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி
நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
துஞ்சடை யிருள் கிழியத் துளங்கெரி யாடு மாறே.
 
                           - திருநாவுக்கரசர் (4-22-1)

 

பொருள்: சிவந்த சடைக்கற்றையாகிய முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேக மண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம் பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.

19 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.
 
                   - திருஞானசம்பந்தர் (1-23-11)

 

பொருள்:  நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்லவர்  , மலை போலும்  வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

15 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பிறைத்த ளிர்ச்சடைப் பெருந்தகைப் பெருந்திரு நல்லூர்க்
கறைக்க ளத்திறை கோவணப் பெருமைமுன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக்கு லத்தொரு பிரமசா ரியின்வடி வாகி.
 
                       - (அமர்நீதி நாயனார் புராணம் 6)

 

 பொருள்: திருச் சடையில்  பிறையை அணிந்த உயர்தவச் சீலராகிய, பெருமை பொருந்திய திருநல்லூரின்கண் வீற்றிருந்தருளும் கரிய கண்டத்தையுடைய சிவபெருமான், அடியவர் களுக்கு, இவ்வடியவர் இதுகாறும் கொடுத்துவந்த கோவணத்தின் பெருமையை உலகத்தாருக்குக் காட்டவும், நிறைந்த அன்பினராய இவருக்குப் பேரருள் வழங்கவும் ஒரு பிரமசாரியின் வடிவைத் தாங்கிக் கொண்டு.

14 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

                   - காரைகாலம்மையார் (11-4-79)

13 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.
 
              - திருமூலர் (10-1-49)

 

பொருள்: வினை நீங்கி  இருப்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும்  முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர்.

12 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்
தூமொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட் சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்தசொல் லிவைசுவா மியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதி ரொளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே.
 
                   - சேந்தனார் (9-7-11)

 

பொருள்: அறியாமையாகிய மயக்கம் நிலவப்பெற்ற மனமே! தூய்மையான சொற்களையே பேசும் தேவர்களின் தலை வனும் செழுமையாகத் திரண்ட சோதி வடிவினனும் ஆகிய சுவாமி எனப்படும் முருகனைப்பற்றிச் செப்புறை என்ற ஊரினைச் சார்ந்த சேந்தன் ஆகிய அடியேன் வளமையாகத் திரண்ட வாயினை உடைய தலைவியின் தாய்மார் கூறும் சொற்களாகச் சொல்லிய இச்சொற்களால் செழுந்தடம் பொழில் சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற உதிக்கின்ற ஞாயிறு போன்ற ஒளியை உடைய முருகப் பெருமானைப் புகழ்பவர்கள், புகழக் கேட்பவர்களுடைய துன்பங்களும் கெடும். 

11 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்குந் தன்மையினான்
அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்.
 
                       - மாணிக்கவாசகர் (8-7-11)

 

 பொருள்: உமையொருபா கனும்  , திருப்பெருந்துறையானும், திருவடியை அடைந்தவரின் மனம் உருக்கும் குணத்தை உடைய வனும், பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்கினவனும், தன் திருவடி யில் மனம் வைத்த அன்பர் மனத்தில் இருப்பவனும் ஆகிய சிவ பெருமானைப் புகழ்ந்து பாடுவோம்.

08 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.
 
                   - சுந்தரர் (7-16-11)

 

பொருள்: நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் மறையுமே .

07 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாட லாடலறாத செம்மாப்பார்ந்
தோரூரொழியா துலகமெங்கு மெடுத்தேத்தும்
ஆரூரன்ற னாதிரைநாளா லதுவண்ணம்.
 
               - திருநாவுக்கரசர் (4-21-10)

 

பொருள்: உலகைச் சூழ்ந்து நிற்கும் கடல்போல எல்லை காண ஒண்ணாத பெருமானை அடியார்கள் வணங்கித் துதித்தலால் சிறப்பு மிகுந்த பாடல்கள் ஒலித்தல் நீங்காத பெருமிதத்தை நுகர்ந்தவாறு அப்பகுதியிலுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள் யாவரும் எஞ்சாது எங்கும் எம்பெருமான் புகழை எடுத்துக் கூறித் துதிக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திருவாதிரைத் திருநாளின் வனப்பு என்றும் அது அது என்று நினைக்குமாறு உள்ளத்தில் நிலைபெறுவதாகும்.

06 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
 
         - திருஞானசம்பந்தர் (1-23-5)

 

பொருள்: ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப்  நினைக்கப் பாவங்கள் நீங்கும்.

05 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
 
                 - அமர்நீதி நாயனார் புராணம் (3)

 

பொருள்: சிவபெருமான் திருவடிகளை அன்றிப் வேறொன்றையும்   சிந்தியாதவராகிய அவர், மாலை செவ்வானத்தின் நிறத்தினை உடைய சிவபெருமானின் அடியார் களுக்கு அமுது செய்வித்துக் கந்தையையும், உடையையும், கோவணத்தையும் அவர் திருவுள்ளக் கருத்தறிந்து கொடுத்து, நல் வினைப் பயனால் தமக்குக் கிடைத்த செல்வப் பெருக்கால் அடையும் பயனை நாள்தொறும் பெற்று வருவாராயினர்.

04 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

                  - காரைகாலம்மையார் (11-4-74)

பொருள்:  கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பவில்லை. இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளவுக்குள் அடங்காமல் நிற்கும்.  

01 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.
 
               - திருமூலர் (10-1-46)

 

பொருள்: சிவபெருமானது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன். இதுவே நான் அறிவது ஆகும். 

31 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்
பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர்
வெருண்டமான் விழியார்க் கருள்செயா விடுமே
விடலையே எவர்க்குமெய் யன்பர்
தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்
கண்ணுடைக் கோமளக் கொழுந்தே.
 
                 - (9-7-10)

 

பொருள்: முருகப்பெருமானுக்கு உண்மையான அன்பர் களாகிய,  சான்றோர் கள் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற, பூக்களைச் சூடிய சுருண்ட மயிரினையும் பிறையைச் சூடிய சடைமுடியையும் முக்கண்களையும் உடைய சிவபெருமானுடைய மென்மையான கொழுந்துபோன்ற மகனாகிய முருகன் விரும்பி உறைகின்ற திருக் கோயிலையும், வளம்நிறைந்த சிறந்த குன்றுகளிடத்தே வளர்கின்ற சோலைகளையும் உடையதாய், எல்லோரும் மகிழும்படியான திருப்பிடவூரில் உள்ள மருண்ட மானின் விழிபோன்று மருண்ட விழிகளைஉடைய இப்பெண்களுக்கு அருள்செய்யாமல் அவர் களைப் புறக்கணித்துவிடுவானோ?

30 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.
 
                - மாணிக்கவாசகர் (8-7-10)

 

பொருள்: கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இறைவன் திருவடிகள்  இருக்கும்; மலர்கள் நிறைந்து அவனது திருமுடியும், மேலுள்ள பொருள் எல்லாவற்றுக்கும் மேலுள்ள முடிவிடமாய் இருக்கும்; அவன் ஒரேவகையானவன் அல்லன்; ஒரு பக்கம் பெண்ணுருவாய் இருப்பவன்; வேதமுதலாக, விண்ணுலகத்தாரும், மண்ணுலகத்தாரும் புகழ்ந்தாலும், சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஆலயத்திலுள்ள, குற்றமில்லாத குலத்தையுடைய, பணிப்பெண்களே! அவன் ஊர் யாது? அவன் பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அவனுக்கு அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?

29 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலயனுங் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதிசென்னிமிசைவைத்தவன்மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்டமணி கண்டன்விடை ஊரும்
விமலன்உமை யவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடுவண்டிசைமுரலப்பசுங்கிளிசொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே.
 
                  - சுந்தரர் (7-16-8)

 

பொருள்: மாலும் பிரமனும் அடிமுடி தேடி அறியாதபடி நெருப்புருவமாய்  நின்றவனும் , வன்னியும் , பிறையும் சடையிற் சூடியவனும் கடலிற் றோன்றிய விடத்தை உண்டு கறுத்த நீலமணி போலும் கண்டத்தை யுடையவனும் , இடபவாகனத்தை ஊர்பவனும் ஆகிய இறைவன் உமாதேவியோடு விரும்பியிருக்கின்ற ஊர் யாது ?  என்று வினவினால் , சோலைகளில் நிறைந்த குயில்கள் கூவவும் , அழகிய மயில்கள் ஆடவும் , சுரும்பும் வண்டும் இசை கூட்டவும் , பசிய கிளிகள் தாம் கேட்டவாறே சொல்லி இறைவனைத் துதிக்கும்படி , காலை , மாலை இரண்டு பொழுதிலும் இறைவனது திருவடிகளை வணங்கி , உருகிய மனத்தை உடைய அடியார்கள் மிக்கிருக்கின்ற திருக் கலயநல்லூரே ஆகும் 

28 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முடிகள்வணங்கி மூவாதார்கண் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகளாரூ ராதிரைநாளா லதுவண்ணம்.
 
             - திருநாவுக்கரசர் (4-21-8)

 

பொருள்: தலையால்  தேவர்கள் வணங்கி முன்னே செல்லவும்,  மூங்கில்போன்ற தோள்களை உடைய தேவருலகப் பெண்கள் பின்னே செல்லவும் திருநீற்றைப் பூசிய அடியவர்கள் நாற்புறமும் சூழ்ந்து நிற்கவும் எம்பெருமான் ஆரூரில் திருவாதிரைத் திருவிழாவில் காணப்படும் அழகு என்றும் உள்ளத்து நிலை பெறுவதாகும்.

25 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.
 
                 - திருஞானசம்பந்தர் (1-23-1)

 

பொருள்: மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

24 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சீரின் நீடிய செம்பியர் பொன்னிநன் னாட்டுக்
காரின் நீடிய களியளி மலர்ப்பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதிபழை யாறை.
 
                       - அமர்நீதி நாயனார் புராணம் (1)

 

பொருள்: பெரும்  புகழுடைய சோழர்கள் அரசாளுதற்குரிய காவிரி பாயும் சோழநாட்டில், மேக மண்டலம் வரை ஓங்கிய களிப்பினை உடைய வண்டுகள் சூழும் மலர்களையுடைய சோலை களால் சூழப்பட்டு, தேரோடு பொருந்திய, செழுமையான மணிகள் இழைத்த வீதிகளால் சிறப்படைந்து, இவ்வுலகில் நிலைபெற்ற பெருமையினை உடைய நகரமாக விளங்குவது பழையாறை ஆகும்.
 

23 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

               - காரைகாலம்மையார் (11-4-67)

பொருள்:  சிவபெருமான் பகைப் பொருள்களைத் (பாம்பு, மதி, மான், புலி )தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் - சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது என்பது இங்கு நன்று பொருந்தியுள்ளது. 

22 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே.
 
               - திருமூலர் (10-1-45)

 

பொருள்: தன்னின் வேறாகாத சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடையலாம்.

21 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை
படுமிடர் குறிக்கொளா தழகோ
மணமணி மறையோர் வானவர் வையம்
உய்யமற் றடியனேன் வாழத்
திணமணி மாடத் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்
கணபதி பின்னிளங் கிளையே.
 
              - (9-7-5)

 

பொருள்: அந்தணர் களும் தேவர்களும் நில உலக உயிர்களும் தீங்கினின்றும் பிழைக்கு மாறும், அடியேனாகிய யானும் வாழுமாறும், அழகிய மாடிவீடுகளை உடைய திருவிடைக்கழியில் திருக்குரா நிழலின் கீழ்நின்ற, இரத்தினங்கள்  அடித்துக்கொண்டு வரும் நீர்ப்பெருக்கை உடைய கங்கா தேவியின் மகனும், கணபதியின் தம்பியும் ஆகிய முருகப்பெருமான், நற்குணங்கள் தன்னைச் சேர்ந்து அழகு பெறுதற்குக் காரணமான சிறுமியாய்க் கொவ்வைக்கனிபோன்ற சிவந்தவாயினை உடைய என் மகள், தன் அருள் முழுமையாகக் கிட்டாமையால் உறும் துயரத்தைத் தன்மனத்தில் ஏற்று அதற்குப் பரிகாரம் தேடாமல் இருப்பது, அவனுக்கு அழகிய செயல் ஆகுமா?

17 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.
 
               - மாணிக்கவாசகர் (8-7-9)

 

பொருள்: பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருளே! பிற்பட்டனவாகிய புதிய பொருள் களுக்கும் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை பிரானாக  பெற்ற சிறப்பு மிக்க அடிமைகளாகிய யாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாவோம்; அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு அடிமையாய் நின்று ஏவல் செய்வோம்; எங்கள் பெருமானே! எங்களுக்கு இம்முறையே கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் எவ்வகையான குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்போம்.

16 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறைதன் திறத்தே
கற்பாருங் கேட்பாரு மாயெங்கும் நன்கார்
கலைபயில்அந் தணர்வாழுங் கலயநல்லூர் காணே.
 
                        - சுந்தரர் (7-16-5)

 

பொருள்: நின்ற கோலத் திருமாலும் , தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் முதல்வராகத் தேவர் பலரும் குறையுடையராய் நிறைந்து வந்து இரக்க , அவரது துன்பத்தைத் திருவுள்ளத்தடைத்து அவர் பொருட்டாக , மலையாகிய வில்லும் , பாம்பாகிய நாணியும் , தீயாகிய அம்பும் என்னும் இவற்றால் பகைவரது முப்புரங்களையும் எரித்தொழியச் செய்த , உலகியலுக்கு வேறுபட்டவனது ஊர் யாது ?` என்று வினவின் , சொல்பொருள் வகைகள் பல வற்றையும் உடைய வேதங்கள் நான்கையும் , தோத்திரங்கள் பல வற்றையும் சொல்லித் துதிக்குமாற்றால் இறைவனது நெறிக்கண் கற்பாரும் கேட்பாருமாய் நின்று , எவ்விடத்திலும் நன்மை யமைந்த நூல்களைப் பயில்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கலயநல்லூரே காண் .

15 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நிலவெண்சங்கும் பறையும்மார்ப்ப நிற்கில்லாப்
பலருமிட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை காரென்றெண்ணிக் களித்துவந்
தலமராரூ ராதிரைநாளா லதுவண்ணம்.
 
          - திருநாவுக்கரசர் (4-21-5)

 

பொருள்: நிலாப் போன்று வெண் சங்குகளும் பறைகளும் ஒலிப்பவும் நின்ற இடத்தில் மீண்டும் நில்லாமல் கூத்தாடும் பலரும் காலில் கட்டிக் கொண்ட சதங்கை முதலியவற்றின் ஒலி பரவவும் அவற்றின் ஒலிகளை மேகத்தின் ஒலி என்று கருதித் தோகைகளை உடைய ஆண் மயில்கள் மகிழ்வோடு வந்து ஆடிச்சுழலும்படியாக ஆரூர்த் திருவாதிரைத் திருவிழாவின் அழகு ஆகும். 

11 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வசையறு மலர்மக ணிலவிய மறைவன மமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல வவருல கினிலெழில் பெறுவரே.
 
                - திருஞானசம்பந்தர் (1-22-11)

 

பொருள்: குற்றமற்ற திருமகள் நிலவும் திருமறைக் காட்டில் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள்  உலகினில் அழகெய்துவர்.

10 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

ஒக்க நெடுநாள் இவ்வுலகில்
உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறிபோற்றித்
தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான்
அருளி னாலே தாள்நிழற்கீழ்
மிக்க கணநா யகராகும்
தன்மை பெற்று விளங்கினார்.
 
               - (விறன்மிண்ட நாயனார் புராணம் 10)

 

 பொருள்:  பலகாலம் இந்நிலவுலகின்கண் உயர்ந்த பெருமையும், நன்மையும், மிக்க உயரிய நெறிகள் பலவும் ஒருங்கமைந்த சைவ நெறியினைப் போற்றிப் பாதுகாத்துச் சிவ பெருமானுக்கு அடிமையாகும் தன்மையைப் பெற்ற விறன்மிண்ட நாயனார், தம் தொண்டிற்குப் பொருந்தும் முறைமையால் தமது முதல்வராகிய சிவபெருமானின் திருவருளால்,  கணநாதர் என்னும் பெருமையை  பெற்று விளங்கினார்

09 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

                  - (11-4-65)

பொருள்: காலை நேரம் கதிரவனால்  வானம்மிகச் சிவந்து தோன்றுதல் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளையில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை கண்டதையும் குறிக்கும். 

08 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
 
            - திருமூலர் (10-1-42)

 

பொருள்: அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்

07 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க
எழில்கவர்ந் தான் இளங்காளை
கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க்
கனகக்குன் றெனவருங் கள்வன்
திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங்
குழகன்நல் லழகன்நம் கோவே.
 
                 - (9-7-2)

 

பொருள்: இளையகாளை போல்வானும், சோற்றுத்திரளை உண்ணும் பெரியயானைமீது மேலே குடைகவிப்ப இருபுறமும் கவரிவீசப் பொற்குன்றம் போன்று வருவானாய்த் தன்னைக் காண்பார் உள்ளத்தைக்கவரும் கள்வனும், நல்ல விளக்கம் பொருந்திய மாளிகைகளால் சூழப்பட்ட திரு இடைக்கழி என்ற திருத்தலத்தில் அழகிய குராமரத்தின் நிழலின் கீழ் எழுந்தருளியிருப்பவனும், குவளைமலர் போன்ற கண்களைஉடைய நங்கையாகிய தெய்வயானையாருக்கும் வள்ளிநாச்சியாருக்கும் கணவனும் இளையோனும், பேரழகனும் ஆகிய நம் தலைவனாம் முருகன் இந்த என் பெண்ணுடைய கச்சினை அணிந்த இளையமெல்லிய கொங்கை பசலைநிறம் மிகுமாறு செய்து அவளுடைய அழகினைக்கவர்ந்து விட்டான்.

01 October 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
 
       - மாணிக்கவாசகர் (8-7-8)

 

 பொருள்: கோழி கூவ, பறவைகள் ஓசையை எழுப்பும்; வாத்தியங்கள் ஏழிசை முறையில் இசைக்க, எவ்விடத்தும் வெண்மையான சங்கமானது முழங்கும்; ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை நீ கேட்கவில்லையா? வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனையே பாடுவாயாக.

30 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது இயற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறியதா தையைத்தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப்பணிகொண்ட விடங்கனதூர்வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகைசூ ளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே.
 
          - சுந்தரர் (7-16-3)

 

பொருள்: இண்டை மலருடன்  மண்ணியாற்றில் மணல் இலிங்கத்தை அமைத்து , கூட்டமான பசுக்களின் பாலைக் கொணர்ந்து சொரிய , அதனைக்கண்டு வெகுண்டு காலால் இடறிய தந்தையின் தாளை வெட்டிய சண்டேசுர நாயனாரது திருவடிகளைத் தேவர்களும் தொழுது துதிக்கும்படி , அவரை விடாது சென்று ஆட்கொண்ட அழகனதுஊர் யாது ?` என்று வினவின் , மண்டபங்களிலும் , கோபுரங்களிலும் , மாளிகைகளிலும் , சூளிகைகளிலும் வேதங்களின் ஓசையும் , மங்கல ஓசைகளும் வீதிகளில் நிரம்புதல் பொருந்திக் கண்டவர்களது மனத்தைக் கவர்கின்ற , தாமரைப் பொய் கைகளில் மகளிர் மூழ்கி விளையாடுகின்ற திருக்கலயநல்லூரே ஆகும். 

27 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் றீரு மென்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா வென்பார்கட்
கணியா னாரூ ராதிரை நாளா லதுவண்ணம்.
 
           - திருநாவுக்கரசர் (4-21-2)

 

பொருள்: திருவாரூருக்கு அண்மையில் உள்ளவர், தூரத்தில் உள்ளவர், நல்லவர்கள், தீக்குணம் மிக்கவர்கள், நாடோறும் தங்கள் பிணிகள் தீரவேண்டும் என்று மிகுதியாக வந்து வழிபடுபவர்கள் ஆகிய யாவரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்று வாய்விட்டு அழைப்பர,  அவர்கள் கருத்துக்கு அணியனாய் இருக்கும் ஆரூர்ப் பெருமானுடைய திரு ஆதிரை நாள் திருக்கோலம் அது. அது என்று அடியவர் மனக்கண்முன் எப்பொழுதும் நிற்பதாகும்.

26 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே.
 
              - திருஞானசம்பந்தர் (1-22-5)

 

பொருள்: தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் திருமறைக்காட்டில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

25 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
 
             - விறன்மிண்ட நாயனார் புராணம் (7)

 

பொருள்: மங்களம் பொங்குகின்ற பெருமை மிக்க தேவா சிரியன் என்னும் காவணத்தில் சிவப்பொலிவு ததும்ப நிற்கும், சிவ பெருமானின் அடியவர்களைப் புறத்தே வணங்கிச் செல்லாது, இவ் வடியவர்க்கு அடியனாகும் நாள் எந்நாளோ? என அகத்து அன்பு செய்து, ஒருவாறாக ஒதுங்கிச் செல்லும் நம்பியாரூரர் இத்திருக் கூட்டத்திற்குப் புறம்  என்று சொல்ல, சிவபெருமான் திருவருளால் பெருகி நிற்கும் பெரிய பேற்றினைப் பெற்றுக் கொண்டவர். மேலும் சிவபெருமானையும் அவ்வாறு புறம்  என்று கூறியவர். 

24 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

              - (11-4-61​)

 

23 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.
 
       - திருமூலர் (10-1-40)

 

பொருள்: அமரர் , அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடியை போற்றி  துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

20 September 2013

திருகழுக்குன்றம் கீழ்க்கோயில்

திருகழுக்குன்றம் கீழ்க்கோயில் - குடமுழக்கு பிறகு



 

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலுலா மனந்தந் தென்கையிற் சங்கம்
வவ்வினான் மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுங்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்
என்னும்என் மெல்லியல் இவளே.

            - (9-7-1)

பொருள்: சேல் மீன்கள் உலாவுகின்ற வயல்களை உடைய திருவிடைக் கழியில் திருக்குராமரத்தின் நிழலின்கீழ் நின்ற திருக்கோலத்தில் காட்சி வழங்கும் வேல் தங்கிய நீண்ட கையினை உடைய அரசனாகியவனும், பார்வதியின் புதல்வனும், வானத்தில் தங்கும் தேவர்கள் இனம் முழுதும் ஆள்பவனும், வள்ளியின் கணவனும், செந்நிறத்தவனும் ஆகிய குமரவேள் மயக்கம் தங்கும் மனத்தை எனக்கு நல்கி என்கைகளில் யான் அணிந்திருந்த சங்கு வளையல்களைத் தான் கவர்ந்து விட்டான்` என்று பெண்மையே இயல்பாக உடைய என்மகள் பேசுகிறாள் என்று தாய் கூறுகிறாள். 

19 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
 
         -மாணிக்கவாசகர்  (8-7-7)

 

 பொருள்: தாயே! உன் குணங்களில் இவையும் சிலபோலும். பல தேவர்கள் உன்னற்கு அரியவனும், ஒப்பற்றவனும், பெருஞ் சிறப்புடையவனுமாகிய இறைவனைப் பற்றிய, சங்கு முதலியவற்றின் ஒலிகள் கேட்க, சிவசிவ என்று சொல்லியே வாயைத் திறப்பாய். தென்னவனே என்று சொல்வதற்கு முன்பே, தீயிடைப்பட்ட மெழுகு போல உருகுவாய். என் பெருந்துணைவன், என் அரசன், இன்னமு தானவன், என்று யாம் எல்லோரும் வெவ்வேறு விதமாகப் புகழ்ந் தோம். நீ கேட்பாயாக. இன்னமும் உறங்குகின்றனையோ? திண்ணிய மனமுடைய அறிவிலார் போல, சும்மா படுத்திருக்கின்றாயே! தூக்கத் தின் சிறப்புத் தான் என்னென்று உரைப்பது.

18 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே.
 
           - சுந்தரர் (7-16-2)

 

பொருள்: சலந்தராசுரனை அழித்த ஒளியையுடைய சக்கரத்தை , தன் சிவந்த கண்ணாகிய மலரையே தாமரை மலராகச் சாத்தி , வழிபாட்டிற் சிறந்து நின்றவனாகிய திருமாலுக்கு அளித்து , இருள் போலும் அந்தகாசுரன் மேல் கூர்மையான சூலத்தைப் பாய்ச்சி அழித்து , இந்திரனைத் தோள் முரித்த கடவுளது ஊர் யாது என்று வினவின் , மிக்க பேரறிவைத்தரும் வேதத்தினது ஓசையும் , முரசு ஓசையும் , சிறுவர் கூட்டம் துள்ளி விளையாடுதலின் ஓசையும் மிக்கெழுதலினால் , கரிய எருமை நீரிற் புக , அதனால் துள்ளி எழுந்த கயல் மீன்கள் , தாமரை மலரின்மேல் நெருங்கி விழ , தாமரை மலரைச் சூழ்ந்திருந்த களிப்புடைய வண்டுகளின் கூட்டம் அஞ்சி ஓடுகின்ற திருக்கலயநல்லூரே ஆகும் .

17 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நாடினார்கம லம்மலரய னோடிரணிய னாகங் கீண்டவன்
நாடிக் காணமாட்டாத் தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத் துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூ ரம்மானே.
 
             - திருநாவுக்கரசர் (4-20-10)

 

பொருள்:  திருவாரூர் அம்மானே ! தாமரை மலரில் உள்ள பிரமனோடு , இரணியன் மார்பினைப் பிளந்த திருமாலும் தேடினராயும் காண மாட்டாத தீப்பிழம்பு வடிவினனாய் , நம்மால் விரும்பப்படும் உன்னைப் பாடுபவராய்ப் பணிபவராய் வாழ்த்துபவராய் உள்ள பக்தர்களின் உள்ளத்தினுள்ளே புகுந்து தேடி அவ்விடத்தில் உன்னைக் கண்டு கொண்டேன் .

16 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ வவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவன மமர்தரு பரமனே.
 
           - திருஞானசம்பந்தர் (1-22-1)

 

பொருள்: மலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட திருமறைக்காட்டில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

13 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நதியும் மதியும் புனைந்தசடை
நம்பர் விரும்பி நலஞ்சிறந்த
பதிக ளெங்குங் கும்பிட்டுப்
படருங் காதல் வழிச்செல்வார்
முதிரும் அன்பிற் பெருந்தொண்டர்
முறைமை நீடு திருக்கூட்டத்
தெதிர்முன் பரவும் அருள்பெற்றே
இறைவர் பாதந் தொழப்பெற்றார்.
 
               - விறன்மிண்ட நாயனார் புராணம் (5)

 

பொருள்: கங்கை நதியையும் , இளம்பிறையையும் அணிந்த சடைமுடியையுடைய சிவபெருமான் திருவுளம்கொண்டு எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் முறையாக வணங்கி, அப் பெருமானிடத்து மேன்மேலும் தழைத்துவரும் அன்பின்வழிச் செல் கின்றவர், முதிர்ந்த அன்புடைய பெருமை மிகுந்த அடியவர்கள் தாம் ஆற்றிவரும் திருத்தொண்டின் முறைமை தொடர்ந்து நீடு மாறு வழிபாடற்றிவரும் திருக்கூட்டத்தின்முன்பு சென்று வணங்கப் பெற்ற பின்னர் சிவபெருமான் திருவடிகளை வணங்கும் ஒழுக்கமுடையவர்

12 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

             - (11-4-60)

பொருள்: மதயானையின் தோலை உரித்து போர்த்திய எம்பெருமான் திருமேனி அழகுக்கு மேகங்கள் பொன்போலும் ஒளிவீசினாலும் ஒப்பாக.
 

10 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.
 
            - திருமூலர் (10-1-39)

 

பொருள்: சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

06 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பாலும் அமுதமும் தேனுமாய்
ஆனந்தந் தந்துள்ளே பாலிப்பான்
போலும்என் ஆருயிர்ப் போகமாம்
புரகால காம புராந்தகன்
சேலுங் கயலுந் திளைக்கும்நீர்த்
திருவா வடுதுறை வேந்தனோ
டாலு மதற்கே முதலுமாம்
அறிந்தோம் அரிவைபொய் யாததே.
 
       - (9-6-11)

 

பொருள்: பாலும் அமுதும் தேனுமாக எனக்கு ஆனந்தம் தந்து என் மனத்தினுள்ளே நின்று இன்பம் கொடுத்தருளி என் அருமையான உயிரிடத்து இன்பத்தை விளைவிப்பவனாய்த் திரிபுரம், இயமனுடைய உடல், மன்மதனுடைய உடல் இவற்றை அழித்த வனாய், சேல்மீனும் கயல்மீனும் விளையாடும் காவிரிநீரை உடைய திருவாவடுதுறை மன்னனாகிய எம் பெருமானோடு விளையாடு வதற்கே என் மகள் முற்படுகிறாள்.

05 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
 
                         - மாணிக்கவாசகர் (8-7-6)

 

பொருள்: பெண்ணே! நீ, நேற்று, நாளைக்கு வந்து உம்மை எழுப்புவேன் என்று சொன்ன சொல்லுக்கும், வெட்கப்படாமல், நீ போன திக்கைச் சொல்வாய். இன்னும் பொழுது விடியவில்லையோ?. வானுலகத்தவரும், நிலவுலகத்தவரும், பிறவுலகத்தவரும், அறிதற்கு அருமையானவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற மேலாகிய, நெடிய கழலணிந்த திருவடியைப் பாடி, வந்தவர்களாகிய எங்களுக்கு, நீ, உன் வாய் திறவாது இருக் கின்றாய். உடலும் உருகப் பெறாது இருக்கின்றாய். இவ்வொழுக்கும் உனக்குத்தான் பொருந்தும். எமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை எழுந்து வந்து பாடுவாயாக!

04 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.

                             - சுந்தரர் (7-16-1)

பொருள்:  குரும்பை போன்ற  தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது   என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, சுரும்பு   என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின் அருகே கரிய குவளை மலர் கண்ணுறங்குகின்ற வயல்களில் தாமரைகள் முகமலரும் திருக்கலயநல்லூரே ஆகும். 

03 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நீறுசேர்செழு மார்பினாய்நிரம் பாமதியொடு நீள்ச டையிடை
ஆறுபாய வைத்தாய் அடியே யடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற கூன்றவிண்ட மலரி தழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந் திருவாரூ ரம்மானே.
 
         - திருநாவுக்கரசர் (4-20-5)

 

பொருள்: வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து , அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால் , மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே ! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய் , பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய் . அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன் .

02 September 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.
 
            - திருஞானசம்பந்தர் (1-21-11)

 

பொருள்: புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.

30 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அப்பொற் பதியி னிடைவேளாண்
குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச்
சிவனார் செய்ய கழல்பற்றி
எப்பற் றினையும் அறஎறிவார்
எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப்பத் தர்கள்பாற் பரிவுடையார்
எம்பி ரானார் விறன்மிண்டர்.
 
        - விறன்மிண்டநாயனார் புராணம் (4)

 


பொருள்: அத்தன்மைத்தாகிய அழகிய ஊரின்கண் வேளாண் குலத்தை விளக்குதற்கு ஏதுவாகத் தோன்றியவர். சொலற்கரிய பெருஞ்சிறப்பினையுடைய சிவபெருமானின் சிவந்த நிறமுடைய திரு வடிகளை எப்பொழுதும் எண்ணிய வண்ணம் இருத்தலின் எவ்வகைப் பற்றையும் அறுமாறு செய்பவர். யாவராலும் அளந்தறியக் கூடாத பெருமையுடையவர். மெய்யடியார்களிடத்துப் பேரன் புடையவர். இவர் எம் தலைவராகிய விறன்மிண்ட நாயனார் ஆவர்.

29 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
 
          - (11-4-42)

28 August 2013

தினம் ஒரு திருமுறை

 தினம் ஒரு திருமுறை

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே.
 
        - திருமூலர் (10-1-36)

 

பொருள்: வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

27 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வேந்தன் வளைத்தது மேருவில்
அரவுநாண் வெங்கணை செங்கண்மால்
போந்த மதிலணி முப்புரம்
பொடியாட வேதப்புர வித்தேர்ச்
சாந்தை முதல்அயன் சாரதி
கதிஅருள் என்னுமித் தையலை
ஆந்தண் திருவா வடுதுறை
யான்செய்கை யார்அறி கிற்பரே.
 
              - (9-6-6)

 

 பொருள்: சிவனே  வானத்தில் உலாவிக்` கொண் டிருந்த மதில்களால் சூழப்பட்ட மூன்று கோட்டைகளும் சாம்பலாகு மாறு மேருமலையை வில்லாக வளைத்து, வாசுகியை வில் நாணாகக் கொண்டு,  திருமாலை அம்பாகக் கொண்டு, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட, பிரமனைத் தேர்ப்பாகனாக உடைய தேரினைச் செலுத்திய சாத்தனூர்த் தலைவனே! உன் அருளே கதி` என்று என் மகள் பலகாலும் கூறுகிறாள். அவள் திறத்துத் தண்ணீரினால் குளிர்ந்த திருவாவடுதுறை என்னும் கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் செய்யநினைத்திருக் கின்ற செயலை யாவர் அறியவல்லார்?

26 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
 
        - மாணிக்கவாசகர் (8-7-5)

 

பொருள்: திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?

23 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற் றறுமே.
 
          - சுந்தரர் (7-15-10)

 

பொருள்:  பிற பாடல்களை அடியவர்கள்  பாட மறந்தாலும் , பகையரசரை அவர் எதிர்ப்பட்ட ஞான்று தப்பிப் போக விடாது வென்ற கொடிறு போல்பவராகிய கோட்புலி நாயனார்க்கு இடமாயதும் , சோழனது நாட்டில் உள்ளதும் , பழமையான புகழை யுடையதும் , ஆகிய திருநாட்டியத் தான்குடியில் எழுந்தருளி யிருக்கின்ற நம்பியை , அவனை ஒரு நாளும் மறவாத , திரட்சியமைந்த , பூவை யணிந்த கூந்தலையுடைய , ` சிங்கடி ` என்பவளுக்குத் தந்தையாகிய ,  நம்பியாரூரன் பாடிய பாடல்களைப் பாடினால் பாவங்கள் எல்லாம் பற்றற்று ஒழியும் .

21 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே.
 
        - திருநாவுக்கரசர் (4-20-3)

 

பொருள் :  பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வரும்  , கோயில் பணி செய்பவர்கள் . ஆதி சைவர்கள் , சிவகணத்தார் , விரிந்த சடையை உடைய , விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள் , அந்தணர் , சைவர் , பாசுபதர் , கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே !

20 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.
 
         - (திருஞானசம்பந்தர் 1-21-8)

 

பொருள்:  கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும் மற்றும் அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் என்றும்  வாழ்வர்.

19 August 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.
 
     - மெய்பொருள் நாயனார் புராணம் (24)

 

பொருள் : இன்னுயிர் நீங்குமாறு வாளால் சிதைக்கக் கண்டும், எம் சிவபெருமானுடைய அடியாரென்ற திருவேடமே மெய்ப்பொருள், எனத்தாம் கொண்ட நெறியைப் பாதுகாத்த சேதி நாட்டின் அரசராகிய மெய்பொருள் நாயனார் பெருமையில் என்னால் இயன்றவகையில் ஒரு சிறிது சொன்னேன்: இனி வலிமை யுடைய விறன் மிண்ட நாயனாரின் அழகிய திருவடிகளைத் தலைமேற் கொண்டு அவர் முன் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.