30 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.
 
             - திருமூலர் (10-6-9)

 

பொருள்: உடம்பொடு இருக்கின்ற  உயிர், உடம்பின்  தொடர்பை விடுத்து நீங்கும்பொழுது, அதனோடு உடன் செல்லும் பொருள் ஒன்றேனும் இல்லை. அவ்வுயிரை விட்டுத் தனித்து நிற்கும் உடம்பு பின் சுட்டெரிக்கப்படும் பொருளாய்விடும், யம தூதர் அதனையும் உடன்கொண்டுபோக நினைத்தல் இல்லையாதலால். ஆகவே, எல்லாவற்றையும் விடுத்துச் சிவபெருமானை நினையுங்கள்.

29 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
மருவிடந் திருவிடை மருதே.
 
             - கருவூர்த்தேவர் (9-17-1)

 

பொருள்: சிவந்த பாம்பு ஒன்று செம்மணியை உமிழ்தலால் அடியேன் பெரிதும் விரும்பும் எம்பெருமானுருடைய காதில் அழகிய செம்பொன்மயமான தோடுபோல அவர் அணிந்த பாம்பாகிய குழை விளங்க, விளங்கும் சடைமுடியிலிருந்து கசியும் கங்கைநீரினால் அழிந்த அழகிய திருநீற்றினை உடையவராய், ஞாயிற்று மண்டலம் விளங்க அதனிடையே மிக்க இருளை உடைய நள்ளிரவும் உள்ளதுபோலத் தோன்றுகின்ற கரிய நிறத்தைக்கொண்ட சிவந்த கழுத்தினை உடையவராய் உள்ள, அண்டங்களில் உள்ள தேவர்களுக்கு எல்லாம் தலைவராகிய சிவபெருமான் தங்கியிருக்கும் இடம் திருஇடைமருதூர் என்ற திருத்தலமாகும்.

28 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கடகரியும் பரிமாவும்
தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா
றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந்
தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ.
 
              -மாணிக்கவாசகர்  (8-12-15)

 

 பொருள்: யானை குதிரை தேர் இவற்றின் மீது ஏறாமல் இடபத்தின் மீது சிவபெருமான் ஏறினதற்குக் காரணம் யாது என்று புத்தன் வினாவ, முப்புரங்களை எரித்த காலத்தில் தேரின் அச்சு முறியத் திருமால் இடப உருவாய்த் தாங்கினான் என்பது தான் காரணம்.

27 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வருங்கா லன்னுயிரை மடி
யத்திரு மெல்விரலால்
பெரும்பா லன்றனக்காய்ப் பிரி
வித்த பெருந்தகையே
கரும்பா ரும்வயல்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
விரும்பா எம்பெருமான் அடி
யேனையும் வேண்டுதியே.
 
                 - சுந்தரர் (7-27-9)

 

பொருள்: பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி , அவன்மேல் வந்த கூற்றுவன் மடியும்படி , அவனது உயிரைத் திருவடியிலுள்ள மெல்லிய விரல்களால் பிரியும்படி செய்த பெருந்தகை யாளனே , கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற நம்பனே , எங்கள் இறைவனே , அடியேனையும் நின் அருட்கு உரியவருள் ஒருவனாக ஏற்றுக்கொள் .

23 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலு மங்கை யூடத்
தென்கையான் றேர்க டாவிச் சென்றெடுத் தான்ம லையை
முன்கைமா நரம்பு வெட்டி முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவா ளருளி னானூ ரணிமறைக் காடு தானே.
 
                        - திருநாவுக்கரசர் (4-34-10)

 

பொருள்: கங்கையை  சிவபெருமான் சடையில் வைத்திருந்ததைக் கண்ட பார்வதி ஊடல் கொண்ட நேரத்தில் , தென் இலங்கை மன்னனாகிய இராவணன் தேரைச் செலுத்திக் கயிலைமலை தேரின் இயக்கத்திற்கு இடையூறாயுள்ளது என்று அதனைப் பெயர்க்க முற்பட்டானாக , பெருமான் கால்விரல் ஒன்றினால் அவனைக் கயிலை மலையின் கீழ் நசுக்க , அவன்தன் நரம்புகளை எடுத்து யாழ் அமைத்து யாழ் இசையோடு வேதத்தைப்பாட அதனால் உள்ளம் மகிழ்ந்து அவனுக்குத் தாம் கையில் வைத்திருந்த  வாளினை அருளினார் . அப்பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலம் அழகிய திருமறைக்காடாகும் .

22 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.
 
            - திருஞானசம்பந்தர் (1-36-1)

 

பொருள்: ஒரு கலைப்பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.

21 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

வெண்ணீறு நெற்றி
விரவப் புறம்பூசி
உண்ணெஞ்சில் வஞ்சக்
கறுப்பும் உடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள்
மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச்
சொன்னவி டம்புகுந்தான்.
 
               - ஏனாதி  நாயனார்  புரணாம் (35)

 

பொருள்: திருவெண்ணீற்றைத்தன் நெற்றி முழுதும் பொருந்துமாறு புறத்தே பூசி, நெஞ்சில் வஞ்சனையாகிய கறுப்பையும் உடன் கொண்டு, அழகிய ஒளி பொருந்திய வாளினையும் மணிக ளால் இழைக்கப் பெற்ற பலகையையும் கைகளில் கொண்டு, புண் ணியத்தன்மை வாய்ந்த போர் வீரராம் ஏனாதிநாதர் முன், தான் சொல் லிவிட்ட அவ்விடத்திற்குச் சென்றான்

16 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.

                 - சேரமான் பெருமாள் நாயனார் (11-7-5)

 

பொருள்: துயிலாமைக்கு ஏதுவாகிய துன்பம் தோன்றுமாறு தோன்றிப் பூவாகிய நெருப்புத் தோன்றும்படியும், மயில்கள் ஆடும்படியும் அடுக்கடுக்காய் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ளவனும், அழகிய திங்களாகிய கண்ணியைச் சூடினவனும் ஆகிய சிவபெருமானது கண்டத்துக்கு ஒப்பாய் உள்ள கார் வந்துது .

14 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே.
 
                           - திருமூலர் (10-6-5)

 

பொருள்: செல்வத்தைத் துணைக்கொண்டு கூற்றுவனை வெல்லுதல் கூடுமோ! கூடாது என்பதனை நன்கு தெளியுங்கள். கலக்கம் அடையாதீர்கள். உங்களிடத்தில் உள்ள செல்வம் உங்கள் உள்ளத்தையும் உடலையும், ஆற்றுவெள்ளம் தன்னுள் அகப்பட்டவரது உள்ளத்தைக் கலக்கி, உடலைப் புரட்டி ஈர்த்தல்போலச் செய்யாதவாறு அதனைத் தடுத்து நிறுத்தி நீக்குங்கள்.

13 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந் தருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொன் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந் துடையோர் சிவபத மென்னும்
பொன்னெடுங் குன்றுடை யோரே.
 
                         - கருவூர்த்தேவர் (9-16-11)

 

பொருள்: தேவதாரு, மந்தாரம், சண்பகம், மகிழ், சந்தனம் என்ற மரங்கள் அடர்ந்த நந்தனவனத்தின் இருள் அடர்ந்த உச்சியை உடைய மதில்களால் சூழப்பட்ட இராசராசேச்சரத்து எம்பெருமானை, அரிய காயகற்பத்தை அருந்தி இறத்தலைப் பலகாலம் நீக்கி வைத்த கருவூர்த்தேவர் பாடிய சொல்மாலையாகிய இப்பத்துப்பாடல்களின் சொற்பொருளாகிய அமுதத்தை நுகர்ந்த அடியார்கள் சிவபதம் என்னும் பொன்மயமான நெடிய மலையைத் தம் உடைமையாகப் பெறுவர்.

12 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தானந்தம் இல்லான்
தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
வான்பொருள்காண் சாழலோ.
 
               - மாணிக்கவாசகர்  (8-12-10)

 

பொருள்: முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ, ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்

09 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மறையோர் வானவருந் தொழு
தேத்தி வணங்கநின்ற
இறைவா எம்பெருமான் எனக்
கின்னமு தாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடி
யேனையும் அஞ்சலென்னே.
 
             - சுந்தரர் (7-27-2)

 

 பொருள்:   மறையோரும்  தேவர்களும்  கைகூப்பித் தொழுது அடி பணிய நிற்கும் இறைவனே , எம்பெருமானே . எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே , இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கற் குடியில் நிலையாக எழுந்தருளியிருக்கின்ற அறவடிவினனே , அழகிய கண்களை யுடையவனே , அடியேனையும் அஞ்சாதே என்று சொன்னது என்னே!!! 

08 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம்  ஒரு திருமுறை

முக்கிமுன் வெகுண் டெடுத்த முடியுடை யரக்கர் கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி நாண்மதி வைத்த வெந்தை
அக்கர வாமை பூண்ட வழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகண் மோதுந் திருமறைக் காட னாரே.
 
              - திருநாவுக்கரசர் (4-34-2)

 

 பொருள்: அலைகள் கரையை நோக்கி மோதும் திருமறைக்காடனார் , தன் முழுவலியையும் பயன்படுத்தி  கோபத்தோடு கயிலையைப் பெயர்த்த , முடியை அணிந்த இராவணனைச் சிரித்தபடியே கால் விரலை ஊன்றி நசுக்கியவராய் , பிறைசூடிய எம் தலைவராய் , எலும்பு , பாம்பு ஆமையோடு இவற்றை அணிந்த அழகராய்த் தம் விருப்பினாலே மறைக்காட்டை இருப்பிடமாகக் கொண்டுள்ளார் .

07 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.
 
           - திருஞானசம்பந்தர் (1-35-10)

 

பொருள்: தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் தீரும். 

06 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போன அதிசூரன்
போரி லவர்க்கழிந்த
மானம்மிக மீதூர
மண்டுபடுவான் கண்படான்
ஆனசெயல் ஓரிரவும்
சிந்தித் தலமருவான்
ஈனமிகு வஞ்சனையால்
வெல்வனென எண்ணினான்.
 
              - ஏனாதி நாயனார் புராணம் (30)

 

பொருள்: புறமுதுகிட்டு ஓடிய அதிசூரன் போர்க் களத்தில் அவ்வடியவர்க்கு ஆற்றாது, அழிந்த மானம் பெரிதும் மீதூரத் படுத்தவன், உறங்காதவனாய்த் தனக்கு நேர்ந்த செயலை எண்ணி எண்ணி அந்த ஓர் இரவு முழுதும் சிந்தித்துத் துன்புறு கின்றவன், குறைபாடு மிகுந்த வஞ்சனைச் செயலால் அவ்வடியவரை வெல்வேன் என்று எண்ணினான்.

05 January 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.
 
            - சேரமான் பெருமாள் நாயனார் (11-6-100)

 

பொருள்:  உயர்ந்த நீலமணி போலும் கண்டத்தையுடைய வனும், நீண்ட சடையை உடையவனுமாகிய சிவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்கள் யாதோர் உடம்பினையும் பற்றா நிலையாகிய வீட்டைப் பெறுதல் உண்மையே. எவ்வாறு என்றால் எனில், பொன் மலையை அடுத்த காக்கையும் அப்பொழுதே பொன்னிறத்தைப் பெற்று விடுவது போல்.