08 November 2013

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

தண்புனலும் வெண்மதியும் தாங்கியசெஞ் சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலிகொண் டுழல்பரமன் உறையும்ஊர் நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே.
 
                   - சுந்தரர் (7-16-11)

 

பொருள்: நீரையும் , வெள்ளிய திங்களையும் தாங்கிய சடையை உடையவனும் , பிரமதேவனது தலை ஓட்டினையே பாத்திரமாக ஏந்தி , முன்னதாக இசையைப் பாடிக்கொண்டு , உண்ணுகின்ற பிச்சைப் பொருள்களை ஏற்றுத் திரிகின்ற மேன்மையை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற ஊராகிய , நிறைந்த நீர் ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருக்கலய நல்லூரை , யாவரிடத்தும் நண்பாந் தன்மையையுடைய நல்லோராகிய சடையன் , இசைஞானி என்பவர்க்கு மகனும் , திருநாவலூருக்குத் தலைவனும் ஆகிய நம்பியாரூரன் விரும்பிப் பாடிய , இசை பொருந்திய பத்துப் பாடல்களாகிய இவற்றை அத்தலப் பெருமானிடத்து அன்பு செய்து நாள்தோறும் பாடவல்லவர்கள் , துன்பமும் , பாவமும் மறையுமே .

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...