04 July 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


பந்த விகார குணங்கள் பறிந்து
மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த
பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள்
அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர்
அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை
சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி
திளைப்பன ஆகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துயர்
ஏகுவ தாகாதே
என்னுடை நாயக னாகிய ஈசன்
எதிர்ப்படு மாயிடிலே.

              -மாணிக்கவாசகர்  (8-49-3)


பொருள்: ஈசன் ஆகிய தலைவன் எதிரே தோன்று வனாயின் பாசத் தொடர்பினால் உண்டாகும்  குணங்கள் அழிவதும் ஆகாது போகுமோ? பாவனை செய்கின்ற மனத்தினில் ஊறுகின்ற மேலான அமுதம் ஆகாது போகுமோ? எல்லையில்லாத உலகப் பொருள்களும் நமது உள்ளத்தில் அகப்படுதல் ஆகாது போகுமோ? எல்லாவற்றிக்கும் முதலான பரஞ்சுடர் நெருங்கும்பழி ஆகாது போகுமோ? மிகச் சிவந்த வாயினையுடைய பெண்களால் வரும் துன்பங்களானவை ஒழிந்து போதல் ஆகாது போகுமோ? சேல் மீன் போன்ற கண்கள் அவனது திருமேனி அழகில் ஈடுபடுதல் ஆகாது போகுமோ? இந்திர சாலம் போன்ற மயக்குகின்ற பிறவித் துன்பம் ஒழிதல் ஆகாது போகுமோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...