12 July 2017

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


மண்ணினில் மாயை மதித்து வகுத்த
மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம்
வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த
கலக்கறு மாகாதே
காதல்செ யும்அடி யார்மனம் இன்று
களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த
பிணக்கறு மாகாதே
பேரறி யாத அநேக பவங்கள்
பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை
எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான்அருள் ஈசன்
எழுந்தரு ளப்பெறிலே. 

                 -மாணிக்கவாசகர்  (8-49-5)


பொருள்: என்னை ஆளாக உடைய பெருமானும் அருளு கின்ற ஈசனுமாகிய இறைவன் எழுந்தருளப் பெற்றால் உலகினில் மாயா காரியங்களை விரும்பிச் செய்ததனால் உண்டாகிய மயக்க உணர்ச்சியறுதலும் ஆகாது போகுமோ? தேவரும் அறியா திருவடியை வழிபடுதல் ஆகாது போகுமோ? ஆணவ இருளில் அழுந்தி இருந்த  கலக்கமானது அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? அன்பு செய்கின்ற அடியவரது மனமானது இப்பொழுது களிப்புற்றிருத்தல் ஆகாது போகுமோ? பெண் அலி ஆண் என்றும் நிலம், நீர் என்றும், உண்டாகிய மாறுபாடு அற்று ஒழிதல் ஆகாது போகுமோ? பெயர் களை அறியாத பல பிறவிகளினின்றும் தப்புதல் முடியாது போகுமோ? எண்ணிலாத அற்புதச் செயல்கள் வந்து என்னை அடைதல், ஆகாது போகுமோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...