20 July 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


சொல்லிய லாதெழு தூமணி யோசை
சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னிய சோதி
தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த
பராபர மாகாதே
பண்டறி யாதப ராநுப வங்கள்
பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று
விளைந்திடு மாகாதே
விண்ணவ ரும்அறி யாத விழுப்பொருள்
இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை
எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள
எழுந்தரு ளப்பெறிலே. 

                   -மாணிக்கவாசகர்  (8-49-7)


பொருள்: சந்திரனைத் தலைமணியாக அணிந்த பெருமான், எங்களை ஆளும்பொருட்டு எழுந்தருளப் பெற்றால் சொல்லுவதற்கு முடியாதபடி உண்டாகின்ற, தூய்மையான மணி ஓசை இன்பத்தைத் தருதல் ஆகாது போகுமோ? மிக விரைவாக, என் உள்ளத்தில் பொருந் திய சோதி இடைவிடாது வளர்தல் ஆகாது போகுமோ? பல வகையான மன அலைவு கெடும்படி வந்தருளின, பரம்பொருளினது பயன் உண்டாகாது, போகுமோ? முற்காலத்திலும் அறிந்திராத மேலான அனுபவங்கள் விரிந்து தோன்றுதலும் உண்டாகாது போகுமோ? வில்லைப் போன்ற அழகிய நெற்றியை உடைய பெண் களது ஆசை போன்றதோர் ஆசை, இப்பொழுது முடிவு உண்டாகாது போகுமோ? தேவரும் அறியாத மேன்மையான பொருள் இந்தப் பொருள்தான் என்ற உணர்வு தோன்றாது போகுமோ? வரம்பு இல்லாதனவாகிய எண் குணங்களானவை என்னிடத்துப் பொருந்துதல் ஆகாது போகுமோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...