23 June 2017

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு
களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்வில்என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடு மாகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுது மாகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படு மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படு மாயிடிலே.

               -மாணிக்கவாசகர்  (8-49-1)


பொருள்: மீனைப் பிடிக்கும் பொருட்டு வலை வீசிய வேடனாகிய இறைவன், எழுந்தருளித் தோன்றுவனாயின், இரண்டு கண்களும், அவன் திருவடியைக் கண்டு களிப்பன ஆகாது போகுமோ? எனது வாழ்க்கை மகளிரொடு கூடிவாழ்வதில் முடிவு பெற்றுவிடுதல் ஆகாது போகுமோ? மண்ணுலகத்தில் வந்து பிறந்திடும் விதத்தை மறத்தல் ஆகாது போகுமோ? திருமால் அறியாத தாமரை மலர் போன்ற திருவடிகள் இரண்டையும் வழிபடுவதும் ஆகாது போகுமோ? இசையினால் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற பாட்டுடன், ஆட்டம் பழகுதல் ஆகாது போகுமோ? நல்ல பாண்டி நாட்டையுடைய இறைவன் தனது படையாகிய அடியார்களை ஆளும் தன்மைகளைப் பாடுதல் ஆகாது போகுமோ? விண்ணவரும் மகிழ்ச்சி மிகத் தக்க ஒரு மாற்றம் தோன்றுதல் ஆகாது போகுமோ?

No comments:

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...