31 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

                      -திருஞானசம்பந்தர்  (1-77-10)


பொருள்: அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

30 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


மீள மீள இவ்வண்ணம்
வெண்பால் சொரிமஞ் சனமாட்ட
ஆள உடையார் தம்முடைய
அன்ப ரன்பின் பாலுளதாய்
மூள அமர்ந்த நயப்பாடு
முதிர்ந்த பற்று முற்றச்சூழ்
கோளம் அதனில் உள்நிறைந்து
குறித்த பூசை கொளநின்றார்.


          - சண்டேசுவரநாயனார் புராணம் (35)


பொருள்: மீண்டும் மீண்டும் இவ்வண்ணமே  பாலைத் திருமுழுக்கு ஆட்டிட, அவரை அடிமையாகக் கொண்டிருக்கும் பெருமானும், தம் அன்பர் விசாரசருமரின் அன்பின் பாலராக நின்று, அவர் பூசனையால் அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றிட, அங்கு ஆத்திமர நீழலின் கீழாக அமைந்த, வெண்மணலின் சிவலிங்கத் திருமேனியின் உள் நிறைந்து நின்று, அவர் புரியும் பூசனையை ஏற்ற நின்றார் 

29 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

             - திருமூலர் (10-2-20,1)


பொருள்: நிலவுலகத்தில்  அசுரனால் விளைந்த துன்பத்தை தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.

25 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை


அக்கின்ற வாமணி சேர்கண்டன்
அம்பல வன்மலயத்
திக்குன்ற வாணர் கொழுந்திச்
செழுந்தண் புனமுடையாள்
அக்குன்ற வாறமர்ந் தாடச்சென்
றாளங்க மவ்வவையே
ஒக்கின்ற வாரணங் கேயிணங்
காகுமுனக்கவளே.

          -திருக்கோவையார்  (8-8,2)


பொருள்:  அக்காகிய நல்ல மணிபொருந்திய மிடற்றையுடையான்; அவனது பொதியின் மலயத்தின் கணுளராகிய இக்குன்ற வாணருடைய மகளாகிய வளவிய இத்தண்புனங் காவனுடையாள்; அக்குன்றத்தின்கணுண் டாகிய ஆற்றைமேவி ஆடப் போயினாள் ;  ஆறு நின்னு றுப்புக்கள் அவளுறுப்புக்களாகிய அவற்றை யேயொக்கின்றபடி;  உனக்கு அவள் இணங்கு ஆகும் நினக்கு அவளிணங்காகும்; அதனால் அவளைக் கண்டு போவாயாக

24 January 2018

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கொதியி னால்வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியி லேன்உடம் பில்லடு நோயான்
மயங்கி னேன்மணி யேமண வாளா
விதியி னால்இமை யோர்தொழு தேத்தும்
விகிர்த னேதிரு வாவடு துறையுள்
அதிப னேஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
 
                       - சுந்தரர் (7-70,4)

 

பொருள்: காளியினது கோபம் தணியும்படி அவளோடு எதிர்நின்று ஆடிய கூத்து உடையவனே , மாணிக்கம் போல்பவனே , மணவாளக் கோலத்தினனே , தேவர்கள் , முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே , திருவாவடுதுறையில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே , தேவர்களாய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே , அறிவில்லேனாகிய யான் உடம்பில் வந்து வருத்துகின்ற பிணியினால் , செய்வது அறியாது மனம் கலங்குகின்றேன் ! எனக்கு உறவாவார் , உன்னையன்றி வேறு யாவர் உளர் ! என்னை , ` அஞ்சேல் ` என்று சொல்லித் தேற்றி , எனக்கு அருள் செய்யாய் .

23 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

                 -திருநாவுக்கரசர்  (4-75-1)


பொருள்: தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் இண்டை மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டேன். 

22 January 2018

தினம் ஒரு திருமுறை


தினம் ஒரு திருமுறை


தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

                     -திருஞானசம்பந்தர்  (1-77-2)


பொருள்: தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர் அச்சிறுபாக்கத்தில் அமர்ந்தவர் ஆவர்