17 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.
 
                 -கண்ணப்பநாயனார் புராணம்  (45)

 

பொருள்: இவ்வாறுகூறியவற்றைக் கேட்டலுமே நாகன் தானும், தன்னைப்பற்றி வரும் தன் மூப்பின் தொடர்ச்சியினை நோக்கி, சொன்ன அவர்க்கு முன்னாகச் சொல்வான், மூப்பி னால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலாதாயிற்று. ஆதலின் என் மகன் திண்ணனை உங்கட்குத் தலைவனாக எல்லீரும் ஏற்றுக் கொள்ளுங்கள்` என, அது கேட்ட அவ்வேடர்களும் அவன் நிலை கண்டு இரங்கினர், எனினும் திண்ண னாரைத் தலைவராகக் கொண்டனர். 

16 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் பொன்னியலும்
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் செங்கண்

              -சேரமான்பெருமாள் நாயனார்  (11-8-24,25)

பொருள்:  பன்னிரண்டு தேவர்கள் பல்லாண்டு  என் வாழ்த்த, நாரதன் யாழ்  மீட்ட, எமன் வாழ்க என்று மங்கள வாழ்த்துக்கள் கூறினான்.   

09 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவ தறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.
 
              - திருமூலர் (10-7-10)

 

  பொருள்:  மக்கள் அறியாமல் வாழ்ந்துவரும் பொழுது  கூற்றுவன் வந்து அதனை அறுத்துச் செல்லுதலைப் பலர் அறியாது வாழ்ந்து, அக்கூற்றுவன் வந்தபொழுது துயருற்றமையால்   வாழும்  நாளில் இளமை நீங்கும் முன்பே அது பொருந்தி நிற்கின்ற நாட்களில் சிவபெருமானைப் பண்ணினால் பாடித் துதியுங்கள்.

06 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன்
முரிவதோர் முரிவுமை யளவும்
தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ
தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடங்குலா வினரே.
 
           - பூந்துருத்தி  காடநம்பி (9-18-1)

 

பொருள்: கைகளில் முத்துக்களால் ஆகிய தோள் வளைகளை அணிந்து, கழுத்தில் ஒப்பற்ற தனிமாலையைச்சூடி, மூன்று கண்களை உடைய தலைவராய், இவ்வுலகிலே மிக்க சிறப்பையுடைய திருவாரூரில் முதல்வராய், வீதிகளில் திருவுலாப்போகும் அழகராய் அசபாநடனம் என்று போற்றப்படும் கூத்தினைச் சிறப்பாகப் புரிந்து வருகிறார். திருவீதி உலாமேற்கொண்டு, இங்ஙனம் உடம்பை வளைத்து எம்பெருமான் ஆடும் ஆட்டத்தின் விளக்கம் உமாதேவி அளவிலும், கங்காதேவி அளவிலும் அடங்காது மேம்பட்டுள்ளது. எம்பெருமானுடைய கொள்கைதான் யாதோ?

05 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பண்பட்ட தில்லைப்
பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.
 
          - மாணிக்கவாசகர்  (8-13-4)

 

 பொருள்:மதிப்புப் பெற்ற தக்கனும், சூரியனும், எச்சன் என்பவனும், சந்திரனும், அக்கினியும், அலங்கரித்தலமைந்த, தில்லை நகர்க்கு இறைவனாகிய சிவபெருமானை, துதியாதவர்களாய், மேன்மை பொருந்திய பூதப்படையையுடைய, வீரபத்திரக் கடவுளால் காயப்பட்ட விதத்தை எடுத்துப்பாடி, பூவல்லி கொய்யாமோ.

04 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

காரா ரும்பொழில்சூழ் கட
வூர்த்திரு வீரட்டத்துள்
ஏரா ரும்மிறையைத் துணை
யாஎழில் நாவலர்கோன்
ஆரூ ரன்னடியான் அடித்
தொண்ட னுரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பர
லோகத் திருப்பாரே.
 
             - சுந்தரர் (7-28-10)
 
 பொருள்:மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள , ` திருவீரட்டானம் ` என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து , அழகிய திரு நாவலூரில் தோன்றியவனும் , திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத் தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின் , சிவலோகத்தில் இருப்பார். 

02 March 2015

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

போவதோர் நெறியு மானார் புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தா னவர்கள் கேளார் குணமிலா வைவர் செய்யும்
பாவமே தூர நின்றார் பழனத்தெம் பரம னாரே.
 
               - திருநாவுக்கரசர் (4-36-2)

 

பொருள்:  போவதர்க்கு வழியாக ஆனவரும் , முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார் . அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்பதில்லை . ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன் . நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீய வினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் உள்ளார்.