28 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
 
               - கருவூர்த் தேவர் (9-12-2)

 

பொருள்: உருகாத மனத்தினை உடைய அடியேனை மனம் உருகச்செய்வதற்காக, கோடை நகரத்துத் திரைலோக்கிய சுந்தரம் என்ற திருக்கோயிலில் உள்ள தலைவனே! நீ எம் தெருவழியே திருவுலாப் போந்த அன்றுமுதல் இன்றுவரையில் கைகள் நிறைவுறுமாறு தொழுது, அருவிபோலக் கண்ணீரை முழுமையாகப் பெருக்கினாலும் அடியேனுக்கு அருள்செய்ய மாட்டாயா?

25 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.
 
          - மாணிக்கவாசகர் (8-10-1)

 

பொருள்: அரசவண்டே! நீ, பிரமன், இந்திரன், சரசுவதி, திருமால், நான்கு வேதங்கள், முச்சுடர்கள், மற்றைத் தேவர்கள், ஆகிய எல்லாரும் அறியவொண்ணாத இடபவாகனனாகிய சிவபெருமானது திருவடியிற் போய் ஊதுவாயாக

24 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

அண்ட கபாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே.
 
             - சுந்தரர் (7-22-1)

 

பொருள்: திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை உடைய , பண்டரங்கம்  என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ஆகும் 

23 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.
 
              - திருநாவுக்கரசர் (4-28-1)

 

பொருள்:  அடியேனுடைய இளமைக்காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து , மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவ சிந்தனையே இல்லாது , பயனுடைய செயல்கள் செய்யாமல் , உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன் . உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன்  உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய் ,
அதிகைவீ ரட்ட னீரே.

22 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
 
                 - திருஞானசம்பந்தர் (1-30-1)

 

பொருள்: மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

21 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.
 
         - எரிபத்தநயனார் புராணம் (20)

 

பொருள்: இவ்வாறு சிவகாமியாண்டார் முறையீடு செய்து கொண்டிருக்கும் சொற்களை அவர் எதிரில் வருகின்ற எறிபத்தர் கேட்டு, தன்னுள் மூளும் சினத்தீயோடு பெருமூச்சு விட்டு, மேலும் சினந்து, தில்லையில் கூத்தியற்றும் அடியவர்களுக்கு எந்நாளும் வழி வழியாகப் பகைமையாயுள்ளது யானையேயன்றோ? ஆதலால் அவ்யானையைக் கொன்று தரையில் வீழ்த்துவேன் என்று கொலை செய்தற்கு ஏது வாய கொடிய மழுப் படையை எடுத்துக் கொண்டு வந்தார்.

14 July 2014

தினம் ஒரு திருமுறை

தினம் ஒரு திருமுறை

கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.
 
         - சேரமான்பெருமாள் நாயனார் (11-6-7)

 

பொருள்: இண்டை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம்.
எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு.
இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை. இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்